Sunday 14 September 2008

நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை !! ஒரு சிறப்பு பார்வை

Image result for காவிரி பிரச்சனைதேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது. 
இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.
நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.
நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,
**
விடைபெறும் முன்
அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல் .

No comments:

Post a Comment