Thursday 19 March 2009

வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் பணமா என்ன? ஒரு விழிப்புணர்வு ஆய்வு..

வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்ற எல்லோரின் கனவுகளும் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்து விடுகின்றன. ஏன் ஒரு 
சிலர் மட்டும் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்?  அநேகர் ஏன் வாழ்க்கையில் தோற்கிறார்கள்? வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 
மேலே படியுங்கள்.... 

வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் இலட்சியங்களும் இல்லாதவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கனவு காண்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதுமில்லை என்பது தான் நிஜம். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கனவு நனவாகும் என்று முழுமையாக நம்பினார்கள். 

அவர்கள் கனவுகள் நனவாக பல வருடங்கள் பிடித்திருக்கலாம். அவர்கள் தங்கள்
 இலட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதற்கான திறமைகளும் தகுதிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்பினார்கள். அதற்காக உழைத்தார்கள். கடுமையாக உழைத்தார்கள். அவர்களது முழு சிந்தனையும் அவர்களின் இலட்சியத்தின் மேல் மட்டுமே இருந்தது. 

'அதெல்லாம் கஷ்டம், நம்மால் முடியாது, அதில் ரொம்ப ரிஸ்க் இருக்கிறது, அதெல்லாம் 
நடக்காது' என்று சொன்னவர்கள் எல்லோரும் தோல்வியுற்றார்கள். 

முதலில் கனவு காணுங்கள். அவை நனவாகும் என்று முழுமையாக நம்புங்கள். அதற்கான 
தகுதிகளையும், திறமைகளையும் அயராமல் வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களுக்குக்  கட்டாயம் வசப் படும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். சந்தோஷத்தை தேடியே எல்லா உயிரினங்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை தேடி தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் வாழ்க்கையின் வெற்றி என்பது ஒருவொருக்கொருவர் வேறுபடலாம்.வாழ்க்கையின் வெற்றி என்பது எதைப் பொறுத்து இருக்கிறது? நிறைய பேர் பணம் சம்பாதித்து விடுவது தான் வாழ்க்கையின் வெற்றி என்று நினைக்கின்றனர். சிலர் புகழ் அடைவதும், பணம் சேர்ப்பதும் தான் வாழ்க்கையின் வெற்றி என்று கருதுகிறார்கள். சிலர் அழகான மனைவி அல்லது கணவன் கிடைப்பதே வாழ்வின் வெற்றி என்று கூட நினைக்கலாம். சிலர் அன்பான குடும்ப வாழ்க்கை அடைவது தான் வாழ்வின் வெற்றி என்று கருதலாம்.


பணம் வாழ்க்கையில் வசதிகளைப் பெருக்க பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்தோஷத்தைக் கொடுக்குமா என்றால் அதை உறுதியாகக் கூற முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பணத்தினால் சந்தோஷத்தை கொடுக்க முடியுமென்றால் சித்தார்த்தன் அன்று அரண்மனையை விட்டு வெளியேறியிருக்க மாட்டானல்லவா? மர்லின் மன்றோ தற்கொலை செய்திருக்க மாட்டாளல்லவா? மைக்கேல் ஜாக்சன் இறந்திருக்கமாட்டாரல்லவா? புகழ் இருந்தும் மன்றோவும் ஜாக்சனும் நிம்மதி இல்லாமலிருந்தார்கள் என்பது தானே நிஜம்?

உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான சந்தோஷத்தை அடைவதே ஆகும். சந்தோசம் என்பது நமது மனதின் ஒரு நிலை தான். அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும் என்பது தான் உண்மை. போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும்  இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான சந்தோஷத்தைப்  பெற முடியும். அவர்கள் வாழ்க்கை தான் வெற்றியான வாழ்க்கையாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் இருப்பதை வைத்து திருப்தியாக வாழும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும்.

வாழ்க வளமுடன்!
தொகுப்பு :அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment