Thursday 23 September 2010

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?-ஒரு சிறப்பு பார்வை ...

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...
ஆரோக்கியமாக இருங்கள்
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது
புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம்
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
பாலியல் அறிவு அவசியம்
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்..
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். 

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்றுஅர்த்தம். 

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. 

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். 

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவதுமுறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். 

எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம். 

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. 

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம். 

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை,பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.


இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் செலுத்தப்பட்டு 72 மணிகள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.


கர்ப்பம் தரிக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை :
1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது
6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக( எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 
9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.


கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை..


மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.

உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.

பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே பெரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.


இதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.

அந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)

நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.

பின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..

கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்துகொள்ளவும். 

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment