Friday 13 January 2012

குங்குமப் பூவின் மகிமை....!

குங்குமப் பூ!

குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல்வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மையிலும், சிவப்பிலும், மணத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது. ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.
கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவரும் குங்குமப் பூ, இந்தியாவுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியிருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி’ என்ற நூல் கூறுகிறது.
காஷ்மீரைத் தவிர உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தரகாண்டிலும் இது பயிராகிறது. கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம்நூல்கள் மூலம் தெரியவருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்’ என்றும் தற்போது `பாம்பர்’ என்றும் அழைக்கப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.
சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தாக்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தளதளவென்று விளைகிறது. இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங்களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும், குளிர்காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.
குங்குமப் பூ செடி உயரமாக வளர்வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது. வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்குகிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.
காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசியில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்குகிறது. கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கிறார் கள். நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித்தெடுக்கிறார்கள். நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர்தரமான குங்குமப் பூவாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment