Wednesday 18 January 2012

இயற்கையா இறைவன்?

                                      
    இக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு

     மனித மூலங்கள் மண்ணில் தோன்றிய நாட்களிலிருந்தே ஓரிறை கொள்கை மட்டுமே தொடங்கி-தொடரப்பட்டது. எனினும் காலம் செல்ல செல்ல தங்கள் மன இச்சையின்படி செயலாற்றும் மனிதர்களும், சுயநலத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதர்களின் செயல்களும் ஓரிறை கோட்பாடென்னும் இந்நேரிய பாதையை விட்டு ஏனைய மக்களை திசை திருப்பச்செய்தது....

      அதன் வாயிலாக பல மக்களின் இச்செயல்களால் பல தெய்வ கொள்கையும் வளர்ந்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே போய் மனித எண்ணங்களில் தோன்றுவதையெல்லாம் கடவுளாக வர்ணிக்க தொடங்கினார்கள்.

   அவ்வபோது அவர்களை சீர்திருத்த தீர்க்கதரிசிகள் வந்தார்கள். எனினும் இங்கு அத்தகைய மனிதர்கள் கடவுளாக கொண்டது எதையெல்லாம் என்பதை குறித்து காண்போம்


மனிதன் தன் எண்ணத்தின் படி கடவுளை உருவகிக்க தொடங்கினான். அதாவது எதை கண்டு பயந்தானோ அதை கடவுளாக, எதன் மீது பிரியம் கொண்டானோ, இன்னும் சொல்ல போனால் தனது ஆசைக்காக கூட கடவுளை உருவாக்க தொடங்கினான். அதில் முக்கியமானதாக   "இயற்கை"யை கடவுளாக கண்டான். உதாரணத்திற்கு இங்கு ஒன்று...

      மக்களில் சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயலை பின் தொடர்வதாலோ அல்லது அச்செயலை தொடர்ந்து செய்து வருவதாலோ மற்ற யாவரையும் விட நாம் அதிக பலன் பெற வேண்டும். ஆனால் பாருங்கள் சூரியனை வணங்காதவனுக்கு அது எத்தகைய வெப்பத்தை தருமோ அதைப்போல தான் அதனை கடவுளாக வணங்குபவனுக்கும் தரும்.மாறாக வணங்கிய காரணத்திற்காக எந்த வித கூடுதல் பலனும் பிரத்தியேக நிழலோ கொடுக்காது.

   சந்திரனும் தன்னில் எவ்வளவு பிரகாசிக்க முடியுமோ அதன் மட்டுமே தன்னை வணங்கும் மற்றும் வணங்கா மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தும். மாறாக அவர்களின் நிலையறிந்து எதையும் கொடுக்காது.

  இன்னும் சொல்லப்போனால் மழைக்காலத்திலும், மேக மூட்டத்திலும் சூரியன் காணக்கிடைக்காது அல்லது தன் ஒளியிழந்தே காணக்கிடைக்கும். அதுப்போல அமாவாசை இரவுகளில் சந்திரனே கண்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு கடவுளாக காணும் அதன் நிலைகளை சற்று ஆராய்ந்தால் அவைகள் நிரந்தமற்ற மற்றும் பலஹீனமான ஒரு படைப்பு என்பதையே நமக்கு காட்டுகிறது.
 அதுப்போலதான் ஏனைய கடவுளாக கொண்ட அனைத்து இயற்கைகளும்.


 இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இவைகளை வணங்குபவருக்கு-வணங்காதவருக்கு பிரித்தறிந்து எப்படி இவை பலன் தர இயலாதோ அதுப்போல தானே பொதுவாக அல்லாஹ்வை வணங்காதவனுக்கும் இறைவன் எந்த இழப்பையேயும் ஏற்படுவதில்லையே -அது ஏன்?

   அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவர்பவர்களில் பலர் ஏழைகளாகவும்,  உடல் ஊனமுற்றவர்களாவும், கஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி பிறரை அல்லது மற்றவைகளை வணங்குபவர்கள் செல்வந்தர்களாகவும், உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாகவும் இன்பமான வாழ்வை வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

   இன்னும் ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை வணங்காமல் -அஃது அவனை திட்டுபவர்களும் கூட நலமாக இப்பூமியில் நடமாடுகிறார்களே அது ஏன்... இதற்கு அழகான பதிலை இஸ்லாம் சொல்கிறது. இதற்கு முதற்காரணம்


(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.  (1:2)


மேலும் பார்க்க: 6:164, 10:32, 11:6, 29:60, 37:5, 40:65, 51:58

        அடுத்து, அல்லாஹ்வை வணங்கினாலும் அவனை வணங்காவிட்டாலும் இவ்வுலகில் அவனது கருணையே பொதுவாக்கி வைத்திருக்கிறான். எனவே அவனை வணங்காதவர்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் தருவதாக இருப்பின் அவனுக்கு ஒரு நொடி பொழுது கூட தேவையில்லை.

  எனினும் அஃது பாவங்களும் தீமைகளும் செய்யும் மற்றும் அவனை வணங்க மறுக்கும் மக்கள் தங்கள் இறுதி வேளைக்குள் அவனை அறிந்து அவர்களின் செயல்களை சீர்த்திருத்தி கொள்கிறார்களா என பார்க்கவே இத்தகைய அவகாசம். அதனை அல்குர்-ஆன்


மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (35:45) 

 இவ்வாறு இயம்புகிறது. எனவே இறைவனை மறுப்பவர்களும்- மறந்தவர்களும் தங்களின் பிறவி மார்க்கத்திற்கு வருவதற்காக எல்லா வழிவகைகளையும் ஏற்படுத்தி வைக்கிறான் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் போதே இறைவன் அவர்களுக்கு வேதனையே அளிக்கிறான்.

எனவே இத்தகைய
இயற்கைகள் படைப்பாளன் அல்ல., மாறாக படைப்பாளனுடையதே!...

   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22)

No comments:

Post a Comment