Saturday 25 February 2012

முல்லை பெரியாறு வரலாறு-ஒரு பார்வை ..

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.


அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.


தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.


உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.


2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.


1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.


எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.


ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.


இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.


அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.


தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.


நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.


முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.


பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.


அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.


கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.


இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.


அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.


காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.


பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.


புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.


தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.


பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?


மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.


புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் .
தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.


ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.


பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.


இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். 

பென்னி குக்  


பென்னி குக்
             பென்னி குக், முல்லைப் பெரியாறு அணையின் நாயகன். ஆங்கிலேயரான இவர் 1841 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள், தமிழர்களின் திருநாளான பொங்கல் தினத்தன்று மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிறந்தவர். இவரது தந்தை பிரிகேடியர் ஜெனரல் ஜான் பென்னி குக் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்தான் பென்னி குக். இலண்டனில் பொறியியல் படித்து முடித்தவுடன் 1858 இல் இந்தியாவில் கால் பதித்தார்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு உயர் கல்வி கற்பதற்காகத் தாயகம் திரும்பினார். 1862 இல் மீண்டும் இந்தியா திரும்பி மாவட்ட உயர் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
     அபிசீனியாவில் போர் மூளவே, ஆங்கிலேய இராணுவத்தில் இணைந்து போர்முனைக்குச் சென்றவர், மீண்டும் 1867 இல் இந்தியா திரும்பினார். ஆங்கிலேயராக இருந்த போதிலும் இந்தியா இவரை வா, வா என்று அழைத்துக் கொண்டேயிருந்தது, இந்தியாவின் மீதும், குறிப்பாகத் தமிழர்களின் மீதும் மாறா பாசம் கொண்டவர் பென்னி குக். இந்தியா திரும்பிய பென்னி குக் அவர்களிடம், அன்றைய ஆங்கிலேய அரசால், பெரியாறு அணை சர்வே திட்ட அலுவலர் பொறுப்பு வழங்கப் பெற்றது.
முல்லை பெரியாறு பருந்துப் பார்வை
பெரியாறு அணையினை எங்கே கட்டினால் சரியாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரும் பணியினை மகிழ்வுடன் ஏற்றார். காடு மேடு என மெய்வருத்தம் பாராமல் அலைந்து, பெரியாறு அனணக்கான இடத்தினைத் தேர்வு செய்து, அணையின் உயரம், தேங்கும் தண்ணீரின் அளவு, அணையின் வரைபடம், திட்ட மதிப்பீடு முதலான பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்நிலையில் 1869 இல் மீண்டும் இலண்டனிலிருந்து அழைப்பு வரவே இலண்டன் பயணமானார்.
     மீண்டும் 1872 இல் இந்தியா திரும்பினார். இம்முறை தென் ஆற்காடு மாவட்ட பொறியாளர் பொறுப்பு இவருக்காகக் காத்திருந்தது. மேலும் இரண்டாண்டுகளில் முல்லைப் பெரியாறு பொறுப்பும் வந்து சேர்ந்தது.
     அணையின் கட்டுமானப் பணிக்கான அனைத்துக் கோப்புகளுக்கும் அனுமதி வழங்கப் பட்ட நிலையில்,1876 மற்றும் 1877 ஆம் ஆண்டுகளில் இந்தியவே மாபெரும், கொடிய கோரப் பஞ்சத்தின் பிடிகளில் சிக்கித் தினறிப் போனது. பஞ்சத்தினைப் போக்க அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதால் அணை கட்டும் பணி தள்ளிப் போடப் பட்டது. இதனால் ஆறு ஆண்டுகள் அணை கட்டும் பணியாணது எழுத்து வடிவத்தில், தாட்களிலேயே முடங்கிப் போனது.
     1882 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் முல்லைப் பெரியாறு தொடர்பான கோப்புகள் மீண்டும் பென்னி குக்கிடம் ஒப்படைக்கப் பட்டன.
     1886 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் , திருவாங்கூர் மகாராசாவுடன் 999 ஆண்டுகாலக் குத்தகைக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் பணியினைத் துவக்க அனுமதி அளிக்கவே பென்னி குக், தனது கனவுத் திட்டத்திற்கு உருவம் கொடுக்கும் செயலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினார்.அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
     1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பெய்த மழையினை, சாதாரணமாக மழை என்று கூறக் கூடாது, பேய் மழை என்றே கூறலாம். ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல், நான்கு மணிநேரம் மழை ஆடிய கோரத் தாண்டவத்தின் விளைவாக வேரோடு அடித்துச் செல்லப் பட்ட பல மரங்களுடன் சேர்ந்து,  அனணயின் இரண்டு நீர் போக்கிகளும் அடித்துச் செல்லப் பட்டன.சற்றும் மனம் தளராத பென்னி குக், எப்பாடு பட்டாகினும் அணையினைக் கட்டியேத் தீர்வது என்னும் உறுதியான நிலைப் பாட்டில். பணியினை மீண்டும் தொடங்கினார்.
    1894 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணைக் கட்டுப் பகுதியில் பரவிய காலரா நோயானது, ஆங்கிலேயப் பொறியாளர்கள் உட்பட, சுமார் 45 பணியாளர்களைப் பலிவாங்கியது. கட்டுமானப் பணியின் போது இறந்தவர்களின் கல்லறைகள் இன்றும் அங்கே, தியாகச் சின்னங்களாய் நிலைத்து நிற்கின்றன.
     1890 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பேய் மழையானது தனது கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியது. இதன் விளைவாக தடுப்புக்காக வைக்கப்பெற்றிருந்த மணல் மூட்டைகள் அத்தனையும் சிதறியதோடு, அணையின் தரைத் தளமுமம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
     பென்னி குக் பல ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து உழைத்த உழைப்பு ஒரே நாளில் வீணானது.
     முல்லைப் பெரியாறு என்பது பென்னி குக்கைப் பொறுத்தவரையில், கட்டிடமல்ல, தண்ணீரைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்குமல்லை,அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். பல ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலங்களில், தென்றலாய் தவழ்ந்து, பயிராய் எழுந்து, உணவாய் உருப்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கக் கூடிய அட்சய பாத்திரம். பென்னிக் குக் வாய்விட்டுக் கதறினார். அனலிடைப் புழுவாய்த் தவித்தார். இயற்கையே ஏன் இவ்வாறு செய்தாய்? நல்ல நோக்கத்திற்காகச் செய்யும் செயலுக்கு இவ்வளவு தடைகளை ஏன் உருவாக்குகிறாய்? எனக் கொதித்தார்.

            
ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்ட பென்னிக் குக், அணையின் கட்டுமானப் பணியினை மீண்டும்  தொடங்குவதற்காக ஆங்கிலேயே அரசுக்கு கடிதம் எழுதி, பண உதவி கோரினார். ஆனால் ஆங்கிலேயே அரசாங்கமோ எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்து இனியும் செலவு செய்ய தயாராக இல்லை என இரு கைகளையும் விரித்து விட்டது.
                    தேடிச் சோறுநிதந்  தின்று - பல
                          சின்னஞ்  சிறுகதைகள் பேசி மனம்
                     வாடித்  துன்பமிக  வுழன்று - பிறர்
                         வாடப்  பல செயல்கள்  செய்து - நரை
                    கூடிக்  கிழப்பருவ  மெய்தி  - கொடுங்
                         கூற்றுக்  கிரையெனப்  பின்மாயும் - பல
                    வேடிக்கை  மனிதரைப்  போலே - நான்
                        வீழ்வே  னென்றுநினைத்  தாயோ?
நான் வீழ மாட்டேன், சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பெற்று எழும் பீனிக்ஸ் பறவை போல, மீண்டு எழுவேன், தொடங்கிய செயலினை முடிக்காமல் கண் துஞ்ச மாட்டேன் என்று வீறு கொண்டு எழுந்தார் பென்னி குக்.
      தொடங்கிய வேலையினை முடிக்காமல் இங்கிருந்து நகரக்கூடாது, எத்துனையோ தடைகளைத் தகர்த்தெறிந்துத விட்டோம், இத் தடையையும் கடக்க வேண்டும், நிச்சயம் இதுவும் கடந்து போகும். ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கப் போகும் அணை இது, கேவலம் பணம் இல்லை என்பதால் இத்திட்டத்தைக் கைவிடுவதா? பணத்தினை அரசு தராவிட்டால் என்ன? மக்கள் இருக்கிறார்கள், மக்களோடு இணைந்து இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீருவது என்று தீர்க்கமாய் முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
      செல்வந்தர்கள் பலரை அணுகி நிதியுதவி செய்யுமாறு வேண்டினார்.சுருளியாறும், கொட்டக்குடி ஆறும் சந்திக்கும் தேனி என்னும் கூட்டுரோடு பகுதிக்கு அருகே வசித்து வந்த பழனிச் செட்டி என்னும் ஒரு தமிழர் முதல் உதவிக் கரத்தை நீட்டினார். ஏலச் சாகுபடி செய்து வந்த பழனிச் செட்டி அவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டாயிரம் வெள்ளி நாணயங்களை தனது அன்பளிப்பாக பென்னி குக்கிடம் வழங்கினார். மெய் சிலிர்த்துப் போனார் பென்னி குக். பின்னாளில் பழனிச் செட்டிப் பட்டி என்னும் ஊருக்கு தடுப்பு அணை ஒன்றினை கட்டி, அதற்கு காலவாய் ஏற்படுத்தி, அந்தக் காலவாய் மூலம், பழனிச் செட்டி வசித்த இடத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் பாசனம் பெற எற்பாடு செய்தார். தடுப்பு அணையினைப் பராமரிக்கும் உரிமையினை பழநியப்பச் செட்டிக்கே வழங்கினார். இன்றும் கூட பழனியப்ப பாசன பரிபாலன சபை என்னும் பெயரில் வளர்ந்து நிற்கின்றது அந்த அணை.
       நிதியுதவி கிடைக்கக் கிடைக்க முல்லைப் பெரியாறு அணையும் உயர்ந்தது. நிதி கிடைக்காதபோது பணி நிறுத்திவைக்கப் பட்டது. நிதி கிடைத்தால் பணி செய்வதும், மற்ற நேரங்களில்  நிதி திரட்ட அலைவதுமாக பென்னி குக்கின் நேரம் கழிந்தது.ஒரு நாள் பென்னி குக்கின் மனதில், மின்னலாய் ஒரு எண்ணம் பளிச்சென உதயமாயிற்று. இப்படி ஓடி, ஓடி நிதி திரட்டினால் அணையின் கட்டுமானப் பணியானது தனது ஆயுட்காலத்தில் நிறைவேறாது என்பது புரிந்தது. உடனே இலண்டன் சென்றார். தனது அத்தனைச் சொத்துக்ளையும் விற்று, பணம் திரட்டிக் கொண்டு வந்து, அணையின் கட்டுமானப் பணியினைத் தொடர்ந்தார்.
பாலார் பட்டியில் பென்னி குக் பொங்கல்(நன்றி- குமுதம்)
     அரசாங்கம் செய்திட வேண்டியப் பணியினைத் தனியொரு ஆளாக, தன் தோளில் சுமந்து, தனது சொந்த நிதியினைக் கொண்டு அணையினைக் கட்டி முடித்தார்.
      இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, பென்னி குக்கின் உதிரத்தாலும், வேர்வையாலும் கட்டப் பெற்ற அணையாகும்.அப்பகுதி மக்களின் வேர்வையும், உழைப்பும், செல்வமும், உயிரும் முல்லைப் பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு மணல் துகளிலும் கலந்திருக்கின்றது.
 ( நன்றி குமுதம் , 11,1,2012)
     
    தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற பெயர் பென்னி குக். இன்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பென்னி குக் என்று பெயரிடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையினால், தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததை எண்ணி, இன்றும், பாலார் பட்டி மற்றும் ஏனைய கிராம மக்கள் பென்னி குக் பிறந்த
நாளான, சனவரி 15 ஆம் தேதியினை, பொங்கல் விழாவிற்குப் பதிலாக, பென்னி குக் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கல் வைத்து படையலிட்டு மகிழ்கின்றார்கள். கேட்டால் இதுதான் தமிழர் திருநாள் என்கிறார்கள்.
(நன்றி -குமுதம் 11.1.2012)
       ஆம் ஒரு ஆங்கிலேயர், தமிழராக போற்றப் படும், தெய்வமாக வணங்கப்படும்  மாபெரும் வரலாற்று நிகழ்வு என்றே இதனைக் கூறலாம்.
     விவசாயிகரளுக்காகக் கட்டப்பெற்ற அணை முல்லைப் பெரியாறு. எந்தவொரு  அரசாங்கத்திற்காகவும் அது கட்டப் படவில்லை. மக்கள் நீர் வளம் பெற்று வாழ வேண்டும் என்பதே பென்னி குக்கின் கனவு. அக் கனவை நிறைவேற்றத்தான் தன் சொத்துக்களை விற்று அணையை உருவாக்கினார்.
                        
                        இப்புவியில்
                        நான் வந்த செல்வது
                        ஒரு முறைதான்
                        எனவே
                        நான் இங்கே
                        ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
                        இதனை
                        தள்ளி வைப்பதற்கோ
                        அல்லது
                        தவிர்ப்பதற்கோ இடமில்லை
                        ஏனெனில்
                        மீண்டும் ஒரு முறை
                        நான்
                        இப்புவியில் வரப் போவதில்லை
பென்னி குக்கின் இக் கவிதை வரிகளைப் பாருங்கள், உதடுகளால் உச்சரித்துப் பாருங்கள்,முல்லைப் பெரியாறு அணையின் நீர்போல மனதில் தேக்கிப் பாருங்கள், ஒரு நற்செயலை தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை என்று எண்ணி, பென்னி குக் செயலில் சாதித்துக் காட்டிய அணையினைப் பாருங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணை
       கேரளாவில் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள் பாம்பார்,பவானி, கபினி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. மீதமுள்ள 41 ஆறுகளும் மேற்கு நோக்கிப் பயணித்து அரபிக் கடலிலோ அல்லது ஏரிகளிலோ தங்கள் பயணத்தை முடிக்கின்றன.
     தமிழகத்தின் சிவகிரி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1830 மீட்டர் உயரத்தில் தோற்றம் பெறுவது பெரியாறு நதியாகும். பெரியாறு நதி பயணிக்கும் மொத்த தொலைவு சுமார் 300  கி.மீ., ஆகும். தமிழகத்தில் 56 கி.மீ, தொலைவிற்கும், கேரளாவில் 244 கி.மீ., தொலைவிற்கும் பயணிக்கும் பெரியாறு, இரண்டாகப் பிரிந்து அரபிக் கடலிலும், கொச்சியின் வேம்பநாடு ஏரியிலும் கலக்கின்றது.
     44 ஆறுகள் பாயும் கேரளாவில் 18 அணைகள் உள்ளன. இவற்றுள் மழம்புழா அனணயானது, நமது தமிழக அரசால் கட்டப்பெற்ற அணை என்பது பலருக்கு வியப்பைத் தரலாம் அல்லது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
      கேரளாவின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு போற்றப் படுகிறது. இதற்குக் காரணம் மழம்புழா அணையாகும். இந்த அணையானது இன்று கேரளாவின் மாபெரும் சுற்றுலாத் தலமாகவும், சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிற்கு பாசனத்திற்கும் உதவி நெற்களஞ்சியம் என்னும் பெயரினை பாலக்காட்டிற்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.
    அன்றைய சென்னை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே பாலக்காடு விளங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை அரசாங்கத்தின் பொதுப் பணித்துறை அமைச்சரும், பின்னாளைய தமிழக முதல்வருமாகிய கே.பக்தவசலம் அவர்களால் மழம்புழா அணைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆறே ஆண்டுகளில் அணையின் கட்டுமாணப் பணி நிறைவுற்றது. 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் மழம்புழா அணையின் திறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த அணையினைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? அவர் வேறுயாருமல்ல, அன்றைய தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராசர் அவர்கள்தான்.
      தமிழகத்தின் இத்தகுப் பெருந்தன்மைக்கு கேரளம் காட்டும் நன்றியுணர்வைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 44 ஆறுகள் ஓடியும், 18 அணைகள் இருந்தும், இத்தண்ணீரின் வெறும் 8 சதவீ நீரைத்தான் கேரளம் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றது. இது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள 92 சதவீத நீரும் அரபிக் கடலுக்குள் தஞ்சம் புகுகின்றது.
     கேரளத்தவர் தாங்கள் உண்ணும் சோற்றுக்கும் குழம்புக்கும், காய்கறிகளுக்கும், தின்னும் பழங்களுக்கும், பூஜைக்குப் பூவிற்கும், சமையலுக்கு கறிவேப்பிலைக்கும் கூட தமிழகத்தை நம்பித்தான் இருக்கின்றார்கள். எனவே கேரளத்தவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, தேவையில்லாத இந்த முல்லை பெரியாறு அணை பிரச்சினையினைக் கைவிடல் வேண்டும்.
                     யாதும் ஊரே யாவரும் கேளிர்

                  தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற அமுத மொழிகளை உலகிற்கு வழங்கிய தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற, தமிழின் சேய் மொழி மலையாளம். அவ்வகையில் கேரளத்தவர்கள் யாவரையும், நம் உடன் சகோதரர்களாய் இதுவரை நாம் போற்றி வந்திருக்கின்றோம். அதுபோல் அவர்களும் நம்மை அவர்களது சகோதரர்களாய் போற்றாவிடினும், அன்னியர்போல் கருதாமலாவது இருத்தல் இருவருக்கும் நலம் பயக்கும்.
      தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பெற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தும் தனது மெருகு குலையாமல் கம்பீரமாய் காட்சியளிப்பதைப் பாருங்கள். கரிகாலச் சோழனால் கட்டப் பெற்ற கல்லணையின் வயது ஆண்டுகள் இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது, இருந்தும் கல்லணை என்ன தண்ணீரில் கரைந்தா போய்விட்டது?.
       தமிழனுக்காகக் கட்டப் பெற்ற அணை முல்லைப் பெரியாறு. பல நூறு தமிழர்கள் தம் இன்னுயிரை இழந்து, தங்களின் சமாதிகளின் மேல், தங்களின் சந்ததியினருக்காக, நமக்காகக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு. ஒரு ஆங்கிலேயரின் முயற்சியினால், உதிரத்தால், பல நூறு தமிழர்களின் வியர்வையை, உதிரத்தை, சுண்ணாம்புக் கலவையோடு கலவையாய் சேர்த்து கலந்து உருவாக்கிய அணை முல்லைப் பெரியாறு.இக்காலத் தமிழர்களான நம்மால் ஒரு அணையினைக் கட்டத்தான் முடியவில்லை, ஒரு ஆங்கிலேயன் நமக்காகக் கட்டிய அணையினைப் பாதுகாக்கக் கூடவா நம்மால் முடியாது?
கல்லணை
      நாம் நமது சாதி, மத, இன, அரசியல், பொருளாதார பிரிவினைகளைக் கடந்து தமிழன் என்ற ஒரே உணர்வுடன், வீறு கொண்டு எழுந்து, நமது ஒன்றுமையினை, நமது ஒற்றுமையின் வலிமையினை, இவ்வுலகிற்குப் பறைசாற்ற வேண்டிய கால கட்டம் இது.
1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப் பெரிய கோயில்
     அகிம்சையினை உலகிற்கே போதித்த காந்திய தேசம் இது. ஒத்துழையாமையே, அணுகுண்டினைவிட மிகப் பெரிய ஆயுதம் என்று உலகிற்குக் உணர்த்திய தேசம் இது வன்முறைத் தவிர்ப்போம், காந்திய வழியில் கரம் கோர்த்து ஒன்றிணைவோம். நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்பதை உணர்த்தினாலே போதும், முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு நொடியில் தீரும். நாம் நமது ஒற்றுமையினை, ஒற்றுமையின் வல்லன்மையினை கேரளாவிற்கு மட்டுமல்ல் உலகிற்கே உணர்த்துவோம். ஓரணியில் திரள்வோம்.
                       வீழ்ச்சியுறு  தமிழகத்தில்  எழுச்சி  வேண்டும்
                              விசைஒடிந்த  தேகத்தில்  வன்மை  வேண்டும்
                       சூழ்ச்சிதனை  வஞ்சகத்தைப்  பொறாமை  தன்னைத்
                             தொகையாக  எதிர்நிறுத்தித்  தூள்தூ   ளாக்கும்
                       காழ்சிந்தை,  மறச்செயல்கள் மிகவும்  வேண்டும்
                                                            - பாரதிதாசன

பென்னி  குக் மணிமண்டபம்
முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில், பென்னி குக் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்பெறும் என்றும், அம் மணிமண்டபத்தில் பென்னி குக் சிலையினை அமைத்து, பென்னி குக் பெயரனால் அந்த நினைவு மண்டபம் திறப்பு விழா நடைபெறும் என அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.


தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment