Tuesday 21 August 2012

இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து!


2007 மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன்
தில்லியில் நடந்த
மத நல்லிணக்கக் கலந்துரையாடல்
நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி
ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை...

"இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய 
வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில
 வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய
 அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் 
முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது! 
மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் 
மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு 
இதன் மூலம் உணர்த்த முடியும்."


இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் 
முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் 
மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக
 மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக 
இருக்க முடியாது.

இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே 'வணக்கத்திற்குத் 
தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை' எனும்
 'லாஇலாஹா இல்லல்லாஹ்' என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் 
பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் 
முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரி
ய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?

குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி 
செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் 
இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த
 மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.

குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் 
சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் 
ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.

இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில்
 ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு 
வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின்
 கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.

ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் 
வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, "முஸ்லிம்கள் கடுமையானவர்கள்,
 இரக்கமற்றவர்கள்" என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக
 (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை
 விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன்.
 இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்;
 இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.

என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத
 வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர்
 முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால்
 என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். "முட்டை (புலால்)
 சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்" என்று 
(கூறினர்). நான் அவர்களிடம் கூறினேன் "உங்களுக்குப் 
புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) 
ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர்,
 புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை 
வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.

நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள்.
 ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய
 உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது
 முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும். நீங்கள் 
ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் 
உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் 
தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம்
 என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும்
 இருக்க முடியாது.

ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் 
உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான
 விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் 
இதைப்பற்றி கேட்கப் படுகிறது. "நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில்
 ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?" என்று. நான் 
அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் 
இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு 
இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.

அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: "நாங்கள் உங்களுக்கு அன்பு
 தரவில்லையா?" என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; 
நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.

நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன்
 சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள்
 இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச்
 சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக
 பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், 'இஸ்லாம்' என்றால்
 என்ன 'சனாதன தர்மம்' என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.

சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. 
மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். 
சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் 'இஸ்லாம்' 
என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும்.
 சனாதன தர்மம் கூறுகிறது "இறைவன் ஒருவனே" என்று. "இறைவன் 
அனைவருக்கும் இறைவனாவான்" என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும்
 தந்தனர். இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய 
முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன்
வேற்றுமை பாராட்ட வேண்டும்?
இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: 
இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள்
தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க 
வேண்டுமெனில்  இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா 
விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும். இன்னுமொரு விஷயம் நான் 
அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான 
சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு 
முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) 
குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு 
உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் 
கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த
 மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய
 மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு 
உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு 
உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப்
 பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் 
அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் 
இந்தத் தயக்கத்தினால், இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின்
 சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. 
நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்;
 உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது 
இதயத்தையும் எனது தலையையும் - இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது
 தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய 
கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான
 மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் 
குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் 
கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. 
அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் 
படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் 
அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. 
ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் 
அனைவரையும் நேசியுங்கள்.

டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! 
டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான்
 அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
 மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் 
இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள்
 அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை
 இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).

நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம்.
இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை 
அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை
நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.

மொழியாக்கம்: இப்னு ஆதம்

No comments:

Post a Comment