Sunday 18 November 2012

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன்!! ஒரு வரலாற்று பார்வை....



சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.
எதிரிகளின் பார்வையில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும் சுபாவம் உடையவர். ஆனாலும், ஈராக் மக்களுடைய ஆதரவுடன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியை நடத்திய சதாம், தற்போது அமெரிக்கப் படைகளின் பிடியில். அவருடைய வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்க்கும்போது, நமக்கு கிடைத்தவை:
குழந்தை பருவம் :
1937 ஏப்ரல் 28 தேதியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ள “அல்_ஒளஜா” என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருடைய குழந்தை பருவம் பல கஷ்டங்களுடன் இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்போதே, அப்பா இறந்தார். சதாம் பிறந்த பிறகு, சுபா மற்றொருவரை மணக்க, அந்த மாற்றான் தந்தை சதாமை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். சிறு வயதிலேயே ஆடுகளை மேய்க்கவும், திருடவும் சதாமை அனுப்புவார் அந்த மாற்றாந்தந்தை. இதனால் சதாம் தன்னுடைய 10ஆவது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, தாய் மாமன் கைருல்லா தல்பாவிடம் தஞ்சம் புகுந்தார்.
படிப்பு :
சதாம் உசேனுக்கு பத்து வயது வரைக்கும் “அ, ஆ…” கூட தெரியாது. மாமன் கைருல்லாதான் சதாமுக்கு படிப்பு சொல்லித் தந்தார். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நடந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமறைவாக வாழும்போது, சட்டப் படிப்பை முடித்தார். அங்குதான் ஸ்டாலின் பற்றி முழுமையாகப் படித்தார். அவருடைய மேசையிலும், பீரோக்களிலும் ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். அரபு தேசீய வாதத்தை சதாமிற்கு சொல்லிக் கொடுத்தது மாமன் கைருல்லா தலாஃபாதான் என்பார்கள்.
குடும்பம்:
சதாம் எத்தனை பேரை கல்யாணம் செய்து-கொண்டாரென்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக உலகத்துக்குத் தெரியும். மகன்கள் காஸே உசேன், உதய் உசேன் சதாமுக்கு இடது, வலது கைகள் போன்றவர்கள். அமெரிக்கப் படையெடுப்பின்போது, இவர்கள் கொல்லப்பட்டனர். மருமகன் உசேன் கமால், பல விஷயங்களில் மாமாவுக்கு துணையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும் ஜோர்டான் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.
சுபாவம் :
ஆரம்பத்திலிருந்து சதாம் உசேன் போராட்ட குணம் உடையவர்தான். அந்த போராட்ட குணத்துடனே, கொடூர குணமும் இருந்தது. தன்னை எதிர்த்தவரை ஈவு இரக்கமின்றி கொல்வதுதான் சதாமின் ஸ்டைல். தன்னை அதிபர் பதவியிலிருந்து விலகச் சொன்ன சுகாதார அமைச்சரைக் கொன்றதும், புரட்சி செய்த குர்த்துக்களின் மேல் இராசாயன ஆயுதங்களை பிரயோகித்ததும் இந்த கொடூரம்தான். சதாமுக்கு சிறு வயதலிருந்தே மேற்கத்திய நாடுகள் என்றால் அறவே பிடிக்காது. அரபு நாடுகளையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்பது அவருடைய கனவு.
அரசியலில்…
மாமன் கைருல்லாவிடம் அரசியலை பற்றி கற்றுக் கொண்ட சதாம், 1957_ல் பாத் கட்சியில் சேர்ந்தார். சுயநலத்துடன், நம்பியதைத் துணிச்லாக செய்யும் யுக்தியுடன், பாத் கட்சியின் துணைத் தலைவராக வளர்ந்தார். 1979_ல் ஈராக் நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 2-0 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். ஈராக்கில் பாத் கட்சியை பட்டித்தொட்டியிலும் பரப்பவிட்ட புகழ், சதாம் உசேனைத்தான் சேரும்.
புரட்சிகள்:
1956 ஈராக் மன்னர் ஃபைஜல்_2க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்கேற்றார். 1959_ல் ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜெனரல் காசிம்மை கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோல்வியுற்றார். அப்போது தன் காலில் பாய்ந்த புல்லட்டை கத்தியுடன் அவரே அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு கிடைத்தது. பிறகு கைரோவுக்கு ஓடிப்போனார். 1963_ல் தன் சொந்த நாட்டுக்குள் நுழைந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்களின் புரட்சியை வடக்கு ஈராக்கில் குர்த்துக்களின் புரட்சியை இரும்பு கரங்களுடன் அடக்கினார்.
யுத்தங்கள்:
சதாம் உசேன் அரபு நாடுகளுடன் தோழமையுடன்தான் இருந்தார். ஆனால், அரபு நாடுகள்தான் அவரை தூரமாக வைத்திருந்தன. பக்கத்திலுள்ள குவைத் நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். சௌதீ அரேபியாவுடனும் வைரம்தான். சிரியா, ஜோர்டன் நாடுகளுக்-கு நல்ல நண்பன். இஸ்ரேல் யூத ஐக்கிய வாதமென்றால், எரிச்சல். அமெரிக்கா, இங்கிலாந்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிபரான ஓராண்டிற்குள்ளேயே, ஈரானுடன் போர் தொடங்கினார். அந்தப் போர் 8 ஆண்டுகள் தொடர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் தேதியன்று சதாம் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தன.
1991_ல் அமெரிக்கப் படைகள் தோழமை நாடுகளின் உதவியுடன் ஈராக்கின் மேல் படையெடுத்து குவைத் நாட்டை மீட்டுவிட்டன. ஆனால், அந்தப் போரினால் ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 தேதியன்று, அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக சதாம் தலைமறைவானார்.
சதாம் உசேன் எப்படி பிடிபட்டார்?!
எங்கே : சொந்த ஊர் திக்ரிட் பட்டணத்திற்கு 16 கி.மீ. தொலைவிலுள்ள அத்வரில்…. தன்னுடைய பண்ணை வீட்டின் சுரங்கத்தில் தூங்கிக் கொண்டு.
எப்போது : சனிக்கிழமை இரவு 11 மணி அளவில்.
எப்படி : கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா படைகள் சதாம் பந்துக்களை இண்டராகேட் செய்து வருகின்றன. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்ற அமெரிக்க படைகளுக்கு சில கற்கள், மண்ணும் தெரிந்தன. அந்த மண்ணை எடுத்தபோது, அங்கு ஒரு குழி தெரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக் கொண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் செய்யாமல், அமெரிக்க படைகள் சதாமை பிடித்தன.
சதாம்தானா? : ஈராக்கின் முன்னாள் வெளியுறவுத்துரை அமைச்சர் தாரீக் அஜீஜ் சதாம் உசேனை அடையாளம் கண்டுகொண்டார். வாயிலிருந்து சாம்பில்ஸ் எடுத்து பிடிபட்டவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.


சதாம் உசேன் வாழ்க்கையில் ஏற்பட்ட எழுச்சியும் வீழ்ச்சியும் :

1937 ஏப்ரல். 28:- பாக்தாத் நகருக்கு அருகே உள்ள திக்ரித்தில் அல் அலாஜா கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் சதாம் உசேன் பிறந்தார்.

1956 அக். :- இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசுக்கு எதி ராக போராடினார். `பாத்' கட்சியில் சேர்ந்து தீவிரமாக போராடினார்.

1959:- மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு பிரதமர் அப்துல் கரீம் காசிமை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப் பட்டார். நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

1963 பிப். :- பாத் கட்சி புரட்சி செய்து ஆட்சியை பிடித்ததும் சதாம் நாடு திரும்பினார். ஆனால் 9 மாதத்திலேயே பாத் கட்சி ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் கைது ஆகி சிறையில் அடைக் கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே கட்சியின் துணை பொதுச் செயலாளராக அவரை தேர்ந்தெடுத்தனர்.

1968 ஜுலை:- பாத் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

1979 ஜுலை. 16:- அதிபர் அகமது உசேன் அப்பகர் பதவி விலகியதை தொடர்ந்து புரட்சி படை கவுன்சில் தலைவர் ஆனார்.

1980 செப். 22:- ஈரான் மீது படையெடுத்து சதாம் உசேன் இந்த எல்லைப்போர் 8 ஆண்டுகளாக நீடித்தது.

1988 மார்ச். 16:- ஈராக் படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியது. இதில் ஈராக்கின் ஹால்பூஜா நகரில் உள்ள 5000 பேர் பலியானார்கள்.

1990 அக். 2:- குவைத் மீது போர் தொடுத்தார் சதாம்.

1991 ஜன. 17:- அமெரிக்காவினால் கூட்டுப்படைகள் ஈராக் படையை குவைத்தில் இருந்து விரட்டி அடித்தது. ஈராக் மீது ஐ.நா. பல்வேறு தடைகள் விதித்தது.

1995 :- சதாம் மீண்டும் ஈராக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 சதவீத ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது.

2002 அக். 15:- மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். குவைத் மீது படையெடுத்ததற்காக இதே ஆண்டில் டிசம்பர் 7-ந் தேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

2003 மார்ச். 20:- பேரழிவு ஆயுதங்கள் தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

சதாமின் 2 மகன்களும் மோசல் நகரில் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஜுலை 22-ந் தேதி அறிவித்தது.

2003 டிச. 14:- பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் அமெரிக்க படையினரிடம் சிக்கினார்.

2005 அக்.19:- ஷியா முஸ்லிம்கள் 148 பேரை துஜைல் நகரில் கொன்று குவித்ததாக சதாம் மீது பாக்தாத் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

2006 நவ. 5:- ஷியா மக்கள் 148 பேரை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

2006 டிச. 26:- சதாம்உசேன் அப்பீல் மனுவை நிராகரித்த மேல் கோர்ட்டு உறுதி செய்தது.

2006 டிச. 30:- பல்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சதாம்உசேன் தூக்கில் போடப்பட்டார்.

 24 வருடங்கள் ஈராக்கை ஆண்ட சதாம் உசேன் ரசாயண குண்டுகளைத் தேடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.


தாம் உசேன் உள்ளிட்டவர்கள் மீதான புகார்களை விசாரிக்க அமெரிக்க ஆதரவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு நவம்பர் 5ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பு பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சதாம் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சதாமுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஈராக் அரசு எந்தக் கருத்தையும், முடிவையும் வெளியிடாமல் இருந்த நிலையில் அமெரிக்க தரப்பில் ஈராக் அரசுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற நிர்ப்பந்தம் எழுந்தது.

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்!

தூக்கு மேடைக்கு சதாமை அழைத்துச் சென்றபோது அவர் எந்தவித எதிர்ப்பபும் காட்டாமல் அமைதியாகவும், நிதானமாகவும், திடமாகவும் நடந்து சென்றார். தூக்கு மேடையில் நின்றபோது ஒரு கையில் திருக்குரானை இறுகப் பிடித்தபடி தூக்குக் கயிற்றுக்கு தனது தலையை அவர் காட்டினார் என இராக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.:- பல்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பாக்தாதில் உள்ள ரகசிய இடத்தில் சதாம் உசேன் 2006 டிச. 30  காலை 3 மணிக்கு (இராக்கிய நேரப்படி) தூக்கிலிடப்பட்டார். 

சினிமாவாகிறது சதாம் உசேன் எழுதிய நாவல்கள்!

இவர் அதிபராக இருந்த போது 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெருமளவில் விற்று சாதனை படைத்தன.
 அவர் எழுதிய 'ஷபீபா அண்டு தி கிங்', 'புரூனோ' ஆகிய கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்படுகன்றன. இவற்றை பிரபல பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.சர்வ சக்தி வாய்ந்த ஒரு ஆட்சியாளர் சாதாரண பெண்ணிடம் காதல் வயப்படுவதுதான் சதாமின் கதையின் மையக் கரு.படத்தை இயக்கும் கோகென் ஏற்கெனவே 'பாரோட்' என்ற படத்தை இயக்கி புகழ் பெற்றவர்.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment