Wednesday 23 April 2014

மதுரை சித்திரைத் திருவிழா !! ஒரு அனுபவ பார்வை..

விழாக்களின் நகரான மதுரையில் வருடத்திற்கு 293 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கெல்லாம் மணி மகுடமாக விளங்குவது சித்திரைத் திருவிழா தான். தென் மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை மீனாட்சியம்மனின் சித்திரைத் திருவிழா.எல்லா ஊரிலும் திருவிழாக்கள் என்றாலே கொண்டாட்டந்தான். அதுவும் நம்ம ‘விழாமலிமூதூரில்’ சித்திரை திருவிழா என்றால் பெருங் கொண்டாட்டமாகத்தானிருக்கும். 

சித்திரைத் திருவிழா தொடங்கியதும் பெரும்பாலும் மாலை வேளைகளில் மீனாட்சியம்மன் கோயில்கிட்ட  உள்ள என்  சின்ன மாமனார் சைக்கிள் கடைக்கு (பாபுலர் ட்ரேடர்ஸ் ) போயிருவேன். கோயிலில் சாமி கிளம்பும்முன் மேல மாசி  வீதி  மற்றும் அம்மன் சன்னதி வாசலில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை வேடிக்கை பார்க்கவே போய்விடுவேன். சென்ற ஆண்டு வரை செண்டைமேளம் வைத்திருந்தார்கள். இம்முறை அதை மாற்றி தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் வைத்திருந்தனர். அதற்கே இம்முறை விழாக்குழுவினர்க்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மேலும், சிறுவர் சிறுமியர்களை வைத்து நிறைய கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். சின்ன குழந்தைகள் கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம், அனுமன்ஆட்டம், கருப்புச்சாமியாட்டம், தெய்வங்களைப் போல் மாறுவேடம் என போட்டு ஆடிக்கொண்டே மாசிவீதிகள் முழுக்க சுற்றி வருகின்றனர். மேலமாசி வீதி முருகன்கோயில்கிட்ட பூக்கொட்டும் பொம்மைகளை காணவே பெருங்கூட்டமிருக்கும். ஒரு பொம்மை மாலையோடும் மற்ற பொம்மை ஒரு கூடையில் பூவோடும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும். சாமி வந்ததும் பூ கொட்டி மாலைகளை கொடுத்ததும் மக்கள் மகிழ்ச்சியாக கை தட்டுவர். இருபது நாட்கள் கிட்ட நடக்கும் சித்திரை திருவிழாவை தங்கள் இல்லத்திருவிழா போல மதுரை மக்கள் கொண்டாடி மகிழ்வர்.

தமிழகத்திலேயே அதிக மக்கள் கூடும் சித்திரை திருவிழா சிறப்பை எல்லாம் ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது, தனி வலைத்தளமே வேண்டும். மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும், சித்திரை மாதத்தில் தேனூருக்கருகில் வைகையில் இறங்கி கொண்டிருந்த அழகர் திருவிழாவையும் ஒருங்கிணைத்துப் பெருந்திருவிழாவாக்கிய பெருமை திருமலை நாயக்கரையே சேரும். இதை மக்கள் தங்கை மீனாட்சி திருமணத்திற்கு அண்ணன் அழகர் வரும்முன் திருமணம் முடிந்து விடுவதால் கோவித்துக் கொண்டு அழகர் திரும்பிச்செல்வதாகவும் கதைகளை கட்டிவிட்டனர். தமிழண்ணல் தொகுத்த தாலாட்டில் இக்கதை வேறு விதமாய் கூறப்படுகிறது.மதுரையே மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேறியதும் உற்சாகமாகிவிடுகிறது. காலையும் மாலையும் அம்மையும், அப்பனும் மாசிவீதிகளில் வலம் வருவதைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் நகரவீதிகளில் கூடுவர். எத்தனை ஊர்களுக்கு மதுரை போல் அழகான வீதிகள் வாய்த்திருக்கிறது எனத் தெரியவில்லை. நான்கு பக்கமும் கோபுரத்தை நோக்கி செல்லும் வீதிகள். அதுவும் மாலை நேரங்களில் மதுரை நகரவீதிகளின் அழகே தனி. ஒவ்வொரு வீதியும் அழகான சித்திரத்தை கொண்டிருக்கும்.


 
இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டுமே மதுரைக்கு சுமார் பத்து லட்சம் மக்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். "கோவிந்தா" என்று லட்சக்கணக்கான மக்கள் முழங்க அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையில் நடந்த வைணவ மற்றும் சைவ மதத்தினருக்கு இடையேயான சண்டையை தவிர்க்க திருமலை நாயக்கரால் முதல் முதலாக இரு மதத்தினருக்கும் பொதுவான திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். மீனாட்சி அம்மன் திருகல்யாணம், எதிர் சேவை, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவது என்று நீண்ட நாட்களாக நடைபெறும். இந்த விழாவின் உச்சகட்டம் அழகர் ஆற்றில் இறங்குவது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். எதிர் சேவையின் போது அழகர் அணிய ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

அழகர் தங்க குதிரையில் மதுரைக்கு தன் தங்கை கல்யாணத்திற்காக பவனி வருவார். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை வரை வருவார். வரும் வழயில் இருக்கும் 18 மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வலம் வருவார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழகர் வருவதற்கு முன்னால் அவரது உண்டியல்கள் வரும். அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் அழகர் வாய்காலில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில். அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க. சற்று வசதியானவர்கள் ரஸ்ணா கூட வழங்குவார்கள். இந்த வருட விழாவில் தாகம் கொண்ட யானை ஒன்று ஒரு பந்தலுக்குள் சென்று ஒரு ரஸ்ணா அண்டாவையே காலிசெய்தது. பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும். அழகர் திருவிழா நடைபெறும் பொழுது மட்டுமே மதுரையில் சீரணி விற்கப்படும். அதிலும் கருப்பட்டி சீரணி அமிர்தமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். கோடைகாலத்தில் மதுரைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சித்திரைப் பொருட்காட்சி.
அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்."சாமி இன்னிக்கு எங்க இருக்குது" என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

சித்திரைத் திருவிழா நிகழ்வுகள்....
சித்திரை 18  - கொடியேற்றம் 
சித்திரை 19 - பூதஅன்ன வாகனம் 
சித்திரை 20 - கைலாச பர்வதம்காமதேனு வாகனம் 
சித்திரை 21 - தங்கப்பல்லக்கு 
சித்திரை 22  - தங்கக்குதிரை வாகனம் 
சித்திரை 23  - ரிஷப வாகனம் 
சித்திரை 24  - நந்திகேசுவரர் - யாளி 
சித்திரை 25 - பட்டாபிஷேகம் 
சித்திரை 26 - திக்விஜயம் 
சித்திரை 27  - மீனாட்சி திருக்கல்யாணம் 
சித்திரை 28 - திருத்தேரோட்டம் 
சித்திரை 29  - தீர்த்தம் 
சித்திரை 30  - அழகர் எதிர் சேவை 
சித்திரை 31  - அழகர் ஆற்றில் இறங்குதல் 
வைகாசி 1 - மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம் அளித்தல்தசாவதாரக் காட்சி 
வைகாசி 2  - புஷ்பப் பல்லக்கு 
வைகாசி 3  - அழகர் மலையில் எழுந்தருளல்



புராண வரலாறு..
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

துணை சித்திரைத் திருவிழா..

மதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே வைகைக் கரையில் அமைந்துள்ள மானாமதுரை யிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.

வீரபாண்டி சித்திரைத் திருவிழா..

தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

மதுரையை சுற்றி உள்ள  380 கிராம ஊர்   மக்கள் அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு திருவிழா காண வருவார்கள். சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வண்டி அது. அதில் எல்லா வசதிகளும் இறக்கும். மாடு மட்டும் சுமார் எட்டு அடி உயரம் இருக்கும். சமையல் செய்ய பாத்திரம், அடுப்பு மற்றும் தூங்கும் வசதி எல்லாமே அதில் இருக்கும். மதுரையில் பொங்கல் அல்லது சித்திரைத் திருவிழாவிற்கு மட்டுமே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். ஊரே புத்தம் புதிதாக மாறி இறக்கும். சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே ஒரு விழா சித்திரைத் திருவிழா ஆகும்.

ஆக்கம்  & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment