Saturday 14 June 2014

மதுரை ஹாஜி முகமது மெளலானா சாகிப் (இந்திய விடுதலைப் போராட்ட தியாகி)!! ஒரு சிறப்பு பார்வை..

ஹாஜி முகமது மெளலானா சாகிப் என்ற மதுரை மௌலானா சாகிப் (1886 - 1957) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமியர். 

 பிறப்பும்இளமையும் : 
காங்கிரஸ் பேரியக்கம் தோன்றி ஓராண்டு கழிந்தபோது மதுரை முனிச்சாலையில் வாழ்ந்த ஹாஜி முகம்மது அசனுதீன் - மாஜான் பீவி இணையருக்கு 1886 ஆம் ஆண்டு ஹாஜிமுகம்மது பிறந்தார். இவரது குடும்பம் இசுலாமிய நெறிமுறைகளைப் பின்பற்றும் இறைப்பற்று மிக்க குடும்பமாகும். தனது தொடக்கக் கல்வியை ஆங்கிலவழிக்கல்வி மூலம் பெற்ற ஹாஜிமுகம்மது பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜிமுகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில்பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிக்க காரணத்தால் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை ஹாஜிமுகம்மது படித்து அன்றாடம் தேச நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனித்து வந்தார். ஆங்கிலேயக் கப்பல் கம்பனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மௌலானாவின் தேசப்பற்று ஆர்வத்தை அதிகமாக்கின. முகமது மெளலானா 1910இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பர். பல அறிஞ்சர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. இவர் அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பேசினால், அரசுத் தரப்பினர் அச்சம் கொள்வர்.

சுதந்திர வீராவேசம்:
1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. அப்போது மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலர் கள்ளுக்கடை முதலாளிகளின் ஏவலால் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்த அங்கு ஓர் கலவரம் உருவாகி, கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறை தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுக்காக, மக்களைத் தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு மறுமுறை இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தீவிரமான மதப் பற்று உள்ளவர் இவர். அதே அளவுக்கு தேசபக்தியும் மிகுந்தவர். 

மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மன் :
இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்திருக்கிறார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.
அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

 இவரது இரண்டு கண்கள் என்றால் தேசபக்தி, மதபக்தி!
தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

தொழுகை தவறாதவர் :
எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment