Monday 21 July 2014

தாய்மொழியை விடுத்து சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை அனுமதிப்பதா ? ஒரு சமூக பார்வை..

நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய  சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.
சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.
இந்நிலையில்  சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன்  மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது, தமிழர்கள் மீது ஓர் மொழி இன
ஆதிக்கத்தை திணிக்கும் செயலாக அமையும். தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும்  கேடான நோக்கமும் இதில் உள்ளது. 

மத்திய அரசின் மதவாத செயல்களுக்கு மொழிவாத அரசியலை நடத்துகிறார்கள்.
பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தாலும் அமைந்தது அந்நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது.உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.பிஜேபியின் மறு(மறை)முகம் RSS என்பது இப்போதாவது மக்கள் புரிந்துக கொண்டால் சரி.


சமஸ்கிரதம்  தாய் மொழியா ?
மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்பதை ஒரு நிமிடமும் ஏற்ற கொள்ள முடியாது இந்த கருத்தை ஒரு போதும் பொருத்து கொளவும் முடியாது.முதலில் சமஸ்கிரதம் ஒரு குறிபிட்ட உயர் பிரிவு மக்கள் மட்டும் அதை கற்க முடியம்ஆனால் எம்மொழி தமிழ் அப்படியில்லை சாதாரண மனிதரும் படிக்கலாம் கறக்கலாம். 

பொருளீட்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்து மக்களால் பிறர் தொடாவண்ணம், பெசிடாவண்ணம் கோயில் கருவறைகளுக்குள் முடக்கிவைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். சாகுந்தலமும், இறகுவம்சமும், இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்திற்குப் பிறகு, இந்த அழகிய மொழியை பிராமணர்கள் தாம் உடல் உழைப்பில்லாது செழித்து வாழ உதவும் ஒரு கருவிஎனக் கையாண்டனர். விளைவு, சமஸ்கிருதம் எளிய பாமரமக்களின் நாவுக்கு இனிமை தருவதை விடுத்து, பிராமணர் பிழைக்க ஏந்தித் திரியம் தர்ப்பைப் புல் வாடி சருகாக மாறுவதைப்போல் காலக் காற்றில் எங்கோ வீசி எறியப்பட்டுவிட்டது. 

செத்துப்போன மொழிக்கு கோடிகளை கொட்டும் நடுவண் அரசு சாதிக்க நினைப்பது என்ன? சமஸ்கிருதம் படித்து என்ன ஆகப்போகிறது? திண்ணையில் உட்கார்ந்து காவியம் படிக்கும் சுகவாசி சாதிக்கு வேண்டுமானால் சமஸ்கிருதம் தேவைப்படலாம், உலகோடு இணைத்து வாழ விழையும் இனங்களுக்கு அல்ல. சமஸ்கிருதத்துக்கு வீணாக கொட்டி அழும் காசில், மாநில மொழிகள் வளர, நவீன் ஆய்வுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம். ஆர்.எஸ்.எஸ் -in ஹிந்து/ஹிந்தி /இந்தியா என்ற மறைமுக பாசிச செயல் திட்டத்தின் வெளிப்பாடுகளே இதெல்லாம். சமஸ்கிருதத்தை /ஹிந்தியை திணித்து, மற்ற மொழிவழி பண்பாடு, வழக்காறுகளை சிதைத்து ஹிந்து மாயம் / பார்ப்பனீய மயமாக்கும் செயல்பாடுகளே. முளையிலேயே கிள்ளிவிடுதல் வேண்டும்.


முதல்வரின் எதிர்ப்புக் கடிதம்:
தமிழ்நாட்டின் முதல்வர், இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள இந்த எதிர்ப்புக் கடிதம் சற்றுக் காலதாமதமாய் வெளிவந்தாலும், நிச்சயம் வரவேற்கத்தக்க வலிமைமிகும் கருத்தாகும். எதிர்ப்பு இக்கடிதத்தோடு முடிந்துவிடாமல், தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இது நுழைந்து விடாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகும்.


தமிழ் மொழி வாரம்:
உலகில் உள்ள அனைவர்க்கும் நன்கு தெரியும் தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் முதன்மையான மொழி அதிகம் சொல் வளமும்,பொருள் வளமும்,பல சிறப்பு தன்மை பெற்றுது.உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பதுடன், 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் தமிழை விட இனிமையான, செழுமையான, பழமையான மொழி உலகில் இருக்க முடியாது.

தமிழ் மொழியும், அதிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திற்கு தொடர்பேதும் இல்லாமல் தனித் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டவை என்பதை 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கார்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர். 

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்க்கி, அலெக்ஸ் ஒலிவியா உள்ளிட்ட  மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

இனி தமிழ் வாரத்தை தமிழ் நாட்டில் கொண்டாடலாம்.பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழியை தமிழ் நாட்டில் திணிப்பது மத்திய அரசுக்கு சுலபம்.ஏன் என்றல் தமிழர்கள் மடயர்கள்.


முதல்வர் தமிழுக்கு ஆற்றும் தொண்டு :
அவ்வை சண்முகி திரைப்படத்தில் தன மகள் மீனாவைப் பெண் கேட்டுவரும் பாண்டியனாகிய கமல் ஹசானிடம், தன் வீட்டுச் சுவற்றில் தொங்கும் தன் மூதாதையரின் படங்களைச் சுட்டிக்காட்டி, ஜெமினி கணேசன் அவர்கள்,"அவர் என் அப்பா, வெங்கடேஸ் அய்யர். அது என் தாத்த சுப்பிரமணிய அய்யர், அதோ தெரிகிறதே, அது என் கொள்ளுத் தாத்த வெங்கடேச அய்யர். இவர்களின் நடுவே பாண்டியன் என்னும் பெயருடைய நீ. கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியவில்லையா?" - என்று சொல்லி, மகள் மீனாவைத் தர மறுப்பார். 

அப்படித்தான் உள்ளது, முதல்வர்  தமிழ் மொழிக்காக அவ்வப்போது குரல் தரும் இரவல். கொஞ்சம் சிரிப்பும் வருவதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், "தென் தமிழ்ப் பாவையாகிய கண்ணகியின் சிலையைத் தகர்த்த தங்கத் தாரகை இவர். செம்மொழிப்பூன்கவை கருகவிட்ட தமிழ்த் தாய் இவர். தமிழின் அடையாளமான அண்ணாவின் நூறாண்டுவிழா நினைவு நூலகத்தை அகற்ற அரும்பாடு படுபவர் இவர். செம்மொழி தமிழ் நூலகத்தை இருப்பிடம் தெரியாமல் எங்கோ கொண்டு வீசிய வீராங்கணை இவர். அந்தணர் வீட்டு பாண்டியன் போல் அமைந்தது அம்மையாரின் தமிழ்ப் பற்று.

முதல்வருக்கு தமிழர்களின் கோரிக்கை :

சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ.நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட  நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

முதலில் தமிழ்நாட்டிலுள்ள CBSE பள்ளிகளில் தமிழையும் ஒரு கட்டாயபாடமாக்க முதல்வர் மத்திய கல்வித்துறையை வலியுறுத்த வேண்டும். அது தான் உண்மையில் நீங்கள் தமிழுக்கு ஆற்றும் தொண்டு. 

அணைத்து மொழிகளின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும் ஆனால் நாம் நம் தாய் மொழிக்கு ஊறிய சிறப்பினை எப்போதுமே பின்பற்ற வேண்டும். இதனால் தான் ஒரு மனிதன் உலகெங்கிலும் செல்ல முடியும். வெற்றி அடைய முடியும் .

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment