Monday 1 December 2014

ஏ.டி.எம். கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்து தப்பிப்பது எப்படி?


 நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. நீங்கள் அடிக்கடி ஏ.டி.எம். செல்லக்கூடியவராக இருந்தால், இனி அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.


ஏ.டி.எம். எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா மையங்களில் பணம் எடுப்பதற்கு கடிவாளம் போடத் தொடங்கிவிட்டது ரிசர்வ் வங்கி.


நீங்கள் உங்களின் கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதம் 3 முறையும் மட்டுமே கட்டணமின்றிப் பணம் எடுக்க முடியும். அதற்குப் பிந்தைய பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ. 20 செலுத்த வேண்டும்.


ஆரம்பகட்டமாக சென்னை போன்ற பெருநகரங்களில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் இருப்பதால் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், பிற வங்கிகளில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான எண்ணிக்கையை குறைத்து இருப்பதால் பெருநகரத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிரமம் எதுவும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சரி, இந்த ஏ.டி.எம். கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ சில யோசனைகள்...

உங்கள் வங்கியின் நிலையை அறியுங்கள்..
ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும், சில வங்கிகள், குறிப்பாக சில தனியார் வங்கிகள் வட்டாரத்தில், தங்கள் வாடிக்கையாளர்கள் 5 முறை மட்டும்தான் கட்டணமின்றிப் பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஏ.டி.எம். விஷயத்தில் உங்களின் சொந்த வங்கியின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். 

அளவை அதிகரித்துக்கொள்ளுங்கள்..
நீங்கள் உங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி ஒருமுறைக்கு ரூ. 10 ஆயிரம் மட்டும்தான் எடுக்க முடியும் என்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எழுதிக் கொடுத்து, ஒருமுறை பணம் எடுக்கும் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

சிறுநகரங்களுக்குச் செல்லும்போது...
பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாதாந்திர அளவான ஐந்து முறையைத் தாண்டிவிட்டால், அவர்கள் சிறுநகரங்களுக்குச் செல்லும்போது சொந்த வங்கி ஏ.டி.எம்.மில் மேலும் 2 முறை கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. எனவே நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்டர்நெட் பாங்கிங்..
பணம் சாராத, குறிப்பிட்ட பணம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் இன்டர்நெட் பாங்கிங் போன்ற நவீனத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, மினி அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் பெறுவது அல்லது இருப்பை சோதிப்பது இன்டர்நெட் பாங்கிங் முறையில் எளிது, கட்டணம் இல்லாதது.

மொபைல் பாங்கிங் வசதி..
தற்போது பல வங்கிகள் மொபைல் பாங்கிங் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளன. நீங்கள் இதுவரை அதை டவுன்லோடு செய்யவில்லை எனில் உடனே டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். இவ்வாறு டவுன்லோடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில வங்கிகள் பரிசுகள் அல்லது தள்ளுபடிக் கூப்பன்களைக் கூட வழங்குகின்றன.

அடிக்கடி வங்கிக்குச் செல்ல வேண்டாம்..
ஏ.டி.எம். பரிவர்த்தனைக்குத்தான் கட்டணம் விதிக்கப்படுகிறதே என்று அடிக்கடி வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான வங்கிக் கிளை பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உண்டு. 

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்..
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்துக்கொள்வதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் உங்கள் வீட்டுக்கு அருகில் ஏ.டி.எம். இருக்கும் வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது நல்லது. தற்போது சில வங்கிகள் 'ஜீரோ பாலன்ஸ்' வங்கிக் கணக்கு வசதியை வழங்குகின்றன. எனவே, கணக்கில் 'சும்மா' பணத்தைப் போட்டு வைக்க வேண்டிய அவசியம் இராது.

கணக்கிட்டுப் பணம் எடுங்கள்..
அடிக்கடி ஏ.டி.எம். செல்வதைத் தவிர்க்கும் வகையில் ஒன்று அல்லது ஒரு சில தவணைகள் அதிகத் தொகையை எடுத்து வீட்டில் வைத்துக்கொள்வதும் பலன் தராது. அப்போது, சேமிப்பு வங்கிக் கணக்குக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே, சராசரியாக மாதம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப பணம் எடுங்கள்.



ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏ.டி.எம். சேவையை  எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது தான் இதுவரை இருந்த நடைமுறையாகும். அதுமட்டுமின்றி, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். சேவையை மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என இருந்தது. ஆனால், ஏ.டி.எம் சேவை பெற ஒவ்வொரு நிலையிலும் கட்டணம் வசூலிக்கும் முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் போதிய வசதிகளை செய்து தராமல், இத்தகைய கட்டுப்பாடுகளையும், கட்டணங்களையும் நடைமுறைப்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. பொதுமக்கள் நலனை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, பிற வங்கி ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றி பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment