Sunday 31 May 2015

பொறுமை என்னும் புதையல் நமக்களித்த வரம் !!

சொந்த கடமைகளின் பொருட்டு, என் வலைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்படுவதால் இந்தத் தொய்வு. வலைப்பூவுக்கான நேரத்தை தினசரி ஒதுக்கும்படியான சூழலை உருவாக்க முயன்றுவருகிறேன். நான் காணாமல் போகும் தருணங்களில் என் நலன் நாடும் நண்பர்களுக்கு மன்னிப்புடனான நன்றிகள் !



பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார்  " எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் !

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் "

எனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் ! ....

" அட என்னங்க ?!... போன் பண்ணினா பத்து நிமிசத்துல பீட்சாவும் பர்கரும் வீட்டுக்கு வர்ற ஸ்பீட் கலாச்சாரத்துல பொறுமையைப் பத்தி மொக்கையா ?!... "

" ஆமாங்க சார் ! பொறுமைன்னு சுவத்துல எழுதியிருக்கற வார்த்தையைகூடப் படிக்கப் பொறுமையில்லாம ஓடுற இன்னைக்குத்தான் பொறுமை ரொம்ப அவசியமா எனக்குப் படுது... ஏன்னா, நாம ஓடுற வேகத்துக்கு எதுலயாவது மோதிட்டோம்ன்னா எதுல மோதிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சிக்கவாவது பொறுமை தேவைங்க...! "

அதனால பொறுமையா இந்தப் பதிவை படிங்க !

பொறுமை என்பது என்ன ?




லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார் காந்தி...

" தோழர்களே... ஹிட்லருக்கு பயந்து ஓடாதீர்கள் ! அவருக்குத் தேவை உங்கள் உயிர் தான் என்றால் உலகின் யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரிடம் செல்லுங்கள்.... "

என்பதாக நீளும் அந்தக் கடிதம்,

" ஹிட்லர் வேண்டுமானால் உங்களின் உயிரை அழிக்கலாம் ஆனால் உங்களின் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது ! நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது ! "

என முடியும் !

மேலை நாட்டினரால் இன்றும் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்படும் வரலாற்றுக் கடிதங்களில் ஒன்று அந்தக் கடிதம் ! ஆனால் காந்தியின் அறிவுரை ஆன்மா சம்மந்தப்பட்டது !

" ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு  " என்ற ஏசுநாதரின் போதனை இன்றளவும் சரி தவறு என விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ! ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ! ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள் என்றே போதிக்கிறார்கள் !!

காந்தி தன் கடித்தத்தில் கூறுவதைப் புரிந்துக்கொள்ள முடியுமானால் ஏசுநாதரின் வார்த்தை சரி என்பது புரியும்...

தெருவில் போகும்போது நம்மை நிறுத்தி அறைபவனைக் கூறவில்லை ஏசுநாதர் ! அவர் குறிப்பிட்ட அடி, உங்கள் நம்பிக்கைக்கு மாற்றான நம்பிக்கை உடையவன் அடிக்கும் அடி...

ஒரு கன்னம் என்ன ? வேண்டுமானால் இரண்டு கன்னங்களிலும் அடித்துக்கொள்... உன்னால் என் உடலைதான் சிதைக்க முடியுமே தவிர, என் ஆன்மா கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க இயலாது என்ற பெருமை செருக்கு மிக்கப் போதனை ! எனக்கான நேரம் வரும்வரை அவசரப்பட்டு என் கொள்கையைக் கொன்றுவிடமாட்டேன் என்ற பொறுமை என்னும் பெரும்பலம் !

ஏசுநாதரின் போதனை புரியுமாயின், உலகம் உருண்டை என ஆதாரத்துடன் நிருபித்த கலிலியோ திருச்சபையின் முன்னால் மண்டியிட்டு தன் கூற்றைத் தானே மறுத்தது பயத்தினால் அல்ல என்பதும் புரியும் !

 சாங்கிய தத்துவம் குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி !

பிள்ளையாரின் யானை முகமும், அவரது காலடி சுண்டெலியும் கற்றுவிக்கும் வாழ்க்கை தத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் ?!...

சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் என்பதே அந்தத் தத்துவம் !

ரபு மொழியில் சபர் என்றொரு வார்த்தை உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று சபர். சபர் என்றால் பொறுமை, சாந்தி எனப் பொருள்படும்.

தென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை ஒன்று...

ஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்ப பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்பவள். எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.

மூத்த மகளின் எளிமையாலும் பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியே குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.

புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டுவர எனக் கேட்கிறான். அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல்... 

காற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை !

கலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை எனக் கூறுகிறார். மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்...

அந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் !

வந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே " சபர்.. சபர்... ! " எனக் கூறுகிறாள் இளவரசி !

அவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது !

அலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன் இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம் என்கிறான் ! மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு சரி என்று சொல்ல, கப்பல் கிளம்புகிறது !

புனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன் தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் திரும்பும் போது மீன்டும் அதே சோதனை ! கப்பல் நகரவில்லை !

அப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்துபோன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான் !

நாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதே சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்...

இதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண் !

" தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால் பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன்... நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய் ! ... சரி, அப்படி வைத்துவிட்டு போ ! "

எனக் கூறுகிறாள். அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்புகிறான்.

அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் !

ஸ்லாமிய மரபின் ஒரு பிரிவான சூபி தத்துவம் மற்றும் ஜென் பெளத்தம் பொறுமையை மனிதன் முழுமை அடைவதற்கான முழுமுதல் தகுதியாய் முன்நிறுத்துகின்றன !

ஜென் தத்துவத்தில் தவம் என்பதின் விளக்கமே பொறுமையுடன் காத்திருத்தல் ! தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது ! ஏனெனில் நாம் பெற விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருக்கும் தருணமே நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றுக்கு தகுதியுடையவராக நம்மை மற்றிக்கொள்ளக் காலம் நமக்களித்த வரம் !

து எப்படி ? எல்லாவற்றுக்கும் பொறுத்து பொறுத்துப் பொறுமை காத்தால் என்ன ஆவது ? நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா ?!... யாருக்கு யார் அடிபணிவது ?...



அடிபணிவது வேறு பொறுமையாய் கடந்து செல்வது வேறு ! மெளனம் காத்து பொறுத்திருப்பதால் நமது மரியாதை குறைந்துவிடாது... வேகமாய் வந்து விழும் வார்த்தைகளின் சப்தத்தைவிடப் பொறுமையான மெளனம் ஏற்படுத்தும் பயமும் தாக்கமும் பெரிது !

அடிபணிதலோ பல்லை கடித்துக் கோபத்தை அடக்கி, பின்னால் நம்மைவிட எளியவரிடம் கொட்டுவதோ பொறுமை அல்ல ! பொறுமை என்பது விருப்பு வெறுப்பற்று சலனமற்ற மனதுடன் இருத்தல்... எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நின்று, நாம் வகுத்துக்கொண்ட நியாயத் தர்மங்களையும் தாண்டிய பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல்.

ணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது ! முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது ! எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் !

கத்தரிக்காய் விலை தொடங்கிச் சினிமா முதல் அரசியல்வரை அடித்துப் பிழிந்து அவசர நொடியில் உடனடி தீர்ப்பு... உடனடியாக அடுத்தச் செய்தி ! நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை ! அதுவே ஜாதி மதச் செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம் !

ஊடகம் ஒரு உதாரணம் மட்டுமே !...

இன்றைய வாழ்க்கை முழுவதுமே பொறுமையற்ற படபடப்பாய் அமைந்துவிட்டது !

" ஐம்பது நாட்களில் அம்பானியாவது எப்படி ?! " என்ற புத்தகத்தை வாங்கும்போதே அம்பானியின் இன்றைய நிலைக்கு அவரது ஐம்பது வருட உழைப்பும், கொஞ்சம் அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவர் வாழ்க்கையில் எவ்வளவு பொறுமையாக யோசித்துக் காய்களை நகர்த்தியிருப்பார் என்பது புரியும் !

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பது விஞ்ஞானப் பூர்வமாய் நிருபிக்கப்பட்ட ஒரு இயற்கை நியதி.

அவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் !

விரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் ! நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது !

வேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே ?!

வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, " எதுவும் மாறும் " என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் !

வாழ்வோம் வளமுடன் !


தொகுப்பு  :  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment