Tuesday 30 June 2015

வெளிநாட்டு நாளிதழ்களில் அப்துல் கலாம் பற்றிய புகழ்!!

முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியை வெளிநாட்டு நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த, அனைவராலும் நேசிக்கப்பட்ட அவரைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ள சில நாளிதழ்களைப் பார்ப்போம். அப்பெருமகனாருக்கு அஞ்சலி செலுத்துவோம்


ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களோடு உரையாடி அவர்கள் தம் கனவுகளை செயல்படுத்த தூண்டுகோலாக இருந்தார்.....
தன் பணியை நிறைவு செய்துவந்த பின்னரும் அவருக்கு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருந்தன. பெரும்பாலானவர்களுக்கு அவர் மறுமொழி அனுப்பிவிடுவார்...........
கார்டியன், லண்டன்

எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தைக்கு பல படகுகள் இருந்தன. அவர் அதனை உள்ளூரிலுள்ள மீனவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கலாம் தன்னை இந்தியாவில் உருவானவர் என்று கூறிக்கொள்வார். அவர் வெளிநாட்டில் எவ்வித படிப்போ, பயிற்சியோ மேற்கொள்ளவில்லை....
டெய்லி மெயில், லண்டன்
Mail, London: Abdul Kalam was a true Karam Yogi and raised the status of the presidency
1998இல் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முக்கிய காரணமாக இருந்தார். சுகோய் விமானத்தில் முதன்முதலாகப் பறந்தவர், நீர்மூழ்கிக்கப்பலுக்குள் சென்றவர், எல்லைப்பகுதியில் உள்ள சியாசன் பனிப்பகுதியைப் பார்வையிட்டவர் என்ற பெருமைகளைக் கொண்டவர். 90 வருட இந்தியன் அறிவியல் காங்கிரசில் சொற்பொழிவாற்றிய முதல் குடியரசுத்தலைவர் என்ற சிறப்பைப் பெற்றவர்....மாணவர்களுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுடன், விவாதிக்கும் எந்த ஒரு சூழலையும் பயன்படுத்திக்கொள்வார். அவர்களை அதிகம் கனவு காணச்சொல்வார். அப்போதுதான் அவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக ஆக முடியும் என்பார்.......

பல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தம்மை ஆம் ஆத்மி என்று கூறிக்கொள்வர். ஆனால் மக்களுக்காக ஒருவர் உண்டென்றால் அவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மட்டுமே. எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உண்மையான மக்கள் ஜனாதிபதியான பெருமை அவருக்கு உண்டு..... இந்தியாவின் மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர். அவர் ஒரு அரசியல் ஜனாதிபதி அல்லர். தேசப்பற்று மிக்க இவர், தன் நாடு பலமான நாடாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். தமிழ்ப்பண்பாட்டில் ஊறித்திளைத்தவர். தமிழ்க் கவிதைகள் எழுதினார், ருத்ர வீணை வாசித்தார். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு கர்மயோகி என்று கூறப்படுவதுண்டு.  அவ்வாறு இருப்பது உண்மையாயின் கலாம்தான் உண்மையான கர்மயோகி (ஆங்கிலத்தில் கரம்யோகி என்று உள்ளது)

இன்டிபென்டண்ட், லண்டன்
Independent: APJ Abdul Kalam: Physicist known as the father of India's missile programme who also served as the country's President

மக்கள் ஜனாதிபதி என்ற பெருமைக்குரிய இவர் கிராமப்புறத்திலுள்ளோரின் முன்னேற்றத்திற்காக தன் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியுள்ளார்.  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இவர், இந்திய ஏவுகணைத்திட்டத்தின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்..........

இவர் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்தார்.................போர் விமானியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் குறுகிய இடைவெளியில் அவ்விலக்கை அடையமுடியாமல் போனார்..........

டான், பாகிஸ்தான்
Dawn: Former Indian president Abdul Kalam dies aged 83
Ignited Minds என்னும் நூலை எழுதிய கலாம் இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து விலையுயர்ந்த இறக்குமதிகளைத் தவிர்க்கவேண்டும் என்றார். நாட்டின் ஏவுகணைத்தந்தை என்று அழைக்கப்படும் இவர் இரண்டாவது முறை இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது பெரும்பங்காற்றியுள்ளார். 1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனை நடத்த உதவியாக இருந்த நிலையில் பெரும் புகழ் பெற்றார்.

நியூயார்க் டைம்ஸ், அமெரிக்கா
New York Times: APJ Abdul Kalam, Ex-President who pushed a Nuclear India, Dies at 83
Ignited Minds இந்தியாவின் 11ஆவது ஜனாதிபதியான ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இந்தியாவின் அணு ஆயுதத்திட்டத்தை முன்னுக்கு எடுத்துச்சென்ற நிலையில் நாட்டின் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார். ஏவுகணை மனிதர் என்றழைக்கப்பட்ட அவர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளால் மதிக்கப்பட்டார். அவரது மரணம் இந்தியாவிற்கு பெரும் சோகத்தைத் தந்துவிட்டது.

எளிமையான தென்னிந்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை மீனவர்களுக்குப் படகை வாடகைக்கு விட்டவர்...கலாம் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தவர்....

அணுகுண்டு சோதனைக்குப் பின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர், 2500 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு நாட்டையும் பிடித்ததில்லை. மாறாக பிற நாட்டவர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார்........

ஜனாதிபதியான பின்னர் தன்னுடைய ஐந்தாண்டுப் பதவிக் காலத்திற்குள் 5,00,000 இளைஞர்களை நேரடியாகச் சந்திக்க இலக்கு வைத்தார்...பலர் இவரை கலாம் மாமா என்றனர்.இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அதற்கு முன்னர் மாமா என அழைக்கப்பட்டார்...கலாமின் பேச்சில் ஒரு உத்வேகத்தைக் காணமுடியும்....

வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்கா
1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது மிக முக்கியமான பங்காற்றியவர். அச்சோதனையின் காரணமாக இந்தியாவின்மீது பல பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அச்சோதனை அவரை மிகச் சிறந்த கதாநாயகராக ஆக்கிவிட்டது..........

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், அக்கனவுகளை நினைவாக்குங்கள். அந்நினைவுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்றார் அவர்.....
------------------------------------------
எங்களை கனவு காணவைத்துவிட்டு, கண்ணீரில் விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களே ஐயா. அனைவருடைய இதயங்களிலும் தாங்கள் குடியிருக்கின்றீர்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது எங்களுக்குப் பெருமையே. தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகளவில் உயர்த்திப் பிடித்தவரே. உங்களுக்கு நிகர் நீங்களே. உங்களால் நீங்கள் ஏற்ற பதவிகள் பெருமை பெற்றன. உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம். இவ்வாறாக ஒரு மனிதன் இப்பூமியில் பிறந்து வாழ்ந்து மக்களின் இதயங்களில் கலந்துவிட்டார் என்று பல தலைமுறைகள் தங்களின் பெயரைக் கூறிக்கொண்டேயிருக்கும். 

எனது நூலைப் பாராட்டித் தாங்கள் எழுதிய கடிதம் அலுவலகத்தில் நான் பணியாற்றுமிடத்திலும், எங்களது இல்ல நூலகத்திலும் எப்பொழுதும் இருந்துகொண்டு எங்களை மென்மேலும் கனவு காண வைத்துக்கொண்டிருக்கும். கனவுகளை நினைவாக்குவோம். வாழ்க தங்களின் புகழ்.  
------------------------------------------

நன்றி :  கார்டியன், மெயில், டான், இன்டிபென்டண்ட், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் 

Courtesy: The Guardian, The Mail, Dawn, The Independent, New York Times and Washington Post

No comments:

Post a Comment