Saturday 9 April 2016

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள் !! ஒரு விழிப்புணர்வு பார்வை

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள். 




  • மாப்பிள்ளைச் சம்பா
  • காடைச் சம்பா, 
  • ஒட்டன் சம்பா, 
  • வெற்றிலைச் சம்பா,
  • டொப்பிச் சம்பா
  • குழியடிச்சம்பா, 
  • ஒசுவக்குத்தாலை,
  • சிவப்புக்குடவாழை, 
  • வெள்ளையான், 
  • குருவிகார், 
  • கல்லுருண்டை, 
  • சிவப்பு கவுணி, 
  • கருடன் சம்பா,
  • அறுபதாம் குறுவை
  • பூங்கார்,
  • ஒற்றடையான்
  • வரப்புக் குடைஞ்சான்,
  • பனங்காட்டுக் குடவாழை,
  • நவரா, 
  • காட்டுயானம், 
  • சிறுமணி, 
  • கரிமுண்டு, , 
  • சூரக்குறுவை... 



இதெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும். கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம். வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா... இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும். வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும். இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. நம்ம இயற்கை விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க. உலகத்துக்கே கத்துக்கொடுத்த நாம தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் ஜெயராமன். வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார். பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார். வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் ஜெயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம், குறுவைப் பட்டம்.

தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டம்.

மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால (140 முதல் 200 நாட்கள்) ரகங்கள், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம். ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும். இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் ஜெயராமன்.


தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment