Sunday 26 February 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு !!!


Image result for நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயுநாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக புதியதலைமுறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் 31 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.


தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக நடந்த முயற்சிகளையும் அதற்கெதிரான விவசாயிகளின் போராட்டங்களையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.


இப்போது மீத்தேன் என்று நேரடியாக சொல்லாமல் ஹைட்ரோகார்பன் என்று சுற்றி வளைத்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தான். பெயரை மாற்றிச்சொன்னால் இது ஏதோ வேறு திட்டமென்று நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் படிப்பறிவற்ற தலைமுறையல்ல.


இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போய்விடும். கடல் நீர் புகுந்துவிடும். குளோரைடு, சோடியம், பைகார்பனேட் உள்ளிட்டவை நீரில் கலந்து வெளியேறும். கதிர்வீச்சு பாதிப்பு உண்டாகவும் வாய்ப்பு உண்டு. ஒரு கிணறு ஆண்டுக்கு தலா 20 டன் உப்பை வெளியேற்றும். நிலத்தடி நீரில் உப்பு மற்றும் சோடியம் படிவதால் விவசாய நிலம் பாதிப்படையும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து இவ்வாயு கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்யும் வாயுக்களில் ஒன்று. தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளிலேயே இதுபோன்ற மீத்தேன் வாயுக் கசிவு பெரும் பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


கச்சா எண்ணெய் கடலில் கொட்டியபோதே வாளி வைத்து அள்ளுகின்ற அரசாங்கமும் தொழில்நுட்பமும் இருக்கின்ற ஒரு தேசத்தில் எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க நாங்கள் தயாராக இல்லை.
Image result for நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயுநெடுவாசல் கிராமம் என்பது அடிப்படை வசதிகளிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியிருந்த பகுதி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் அவர்களது பொருளாதார நிலை சற்று மேம்பட்டு வருகிறது. அதற்கு அடிப்படையே விவசாயம் மட்டும்தான். விவசாயத்தைத் தவிர அப்பகுதி மக்களுக்கு வேறெதுவும் தெரியாது. ஆற்றுப் பாசனத்தையும் அதிகம் சாராமல் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் விவசாயத்தினை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவை. இந்த திட்டத்தினை ஒருக்காலும் எங்கள் பகுதியில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.


உடனே நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் என்று ஒரு சாரார் கேள்வியெழுப்பக்கூடும். நியாயம்தான். நாட்டின் வளர்ச்சியென்பது விவசாயத்தில்தான் இருக்கிறது. அந்த விவசாயத்திற்கு ஆதாரமான நிலத்தடி நீரையும், விளைநிலங்களையும் பாழ்படுத்திவிட்டு, நாட்டிற்கே சோறு போடுகின்ற விவசாயிகளை அழித்துவிட்டு யாரை முன்னேற்றிக்கொள்ளப் போகிறீர்கள்.


அதையும் தாண்டி நாட்டின் வளர்ச்சிக்காக இதைத் தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று சொல்பவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். என் வீட்டைக் கொளுத்திவிட்டு ஊருக்கு வெளிச்சம் தர நான் தயாராக இல்லை. நான் தியாகி அல்ல. அற்ப மானிடன் அவ்வளவே. இந்த விஷயத்தில் நாங்கள் சுயநல வாதிகளாகவே  இருந்துவிட்டுப் போகிறோம்.


இந்த விசயத்தில் ஜாதி, மத, அரசியல் பேதம் கடந்து, விவசாயிகளாய் ஒன்றிணைந்து போராடுவோம். இதனை நமது பகுதியினைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாக ஏற்றுக்கொண்டு களமிறங்குவோம். வரும்பொழுது பார்த்துக் கொள்வோம் என்றில்லாமல் உடனே போராடத் தொடங்குவோம்.

இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர்.

மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக நேற்று ஐடி., இளைஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை, திலகர் திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளைய விடியல் நமது தற்காப்பு போராட்டத்திற்கான தொடக்கமாக இருக்கட்டும்.இறுதிவரை உறுதியாகப் போராடுவோம்!!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.



No comments:

Post a Comment