Saturday 22 April 2023

குளச்சல் பிறை சர்சையும், விளக்கமும்!! ஒறு இஸ்லாமிய பார்வை...


இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிறை சர்ச்சை.எந்த சார்பும் இல்லாத என் தனிப்பட்ட கருத்தை பதிவிடுகிறேன், குளச்சலால் குழப்பம் தேவையில்லை….

கண்ணியாகுமரி குளச்சலில் பிறை பார்க்கப்பட்டதாக சொன்னாலும் அதை தமிழ்நாட்டில் நாம் ஏன் ஏற்பது இல்லை?

உண்மையிலேயே குளச்சல் தமிழகததின் ஒரு பகுதி தான் என்றாலும் பூகோள அமைப்பில் குளச்சல் தமிழகத்தின் பூகோள அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்டது.

முதலாவது..

தமிழகத்தின் அனைத்து கடலோர ஊர்களும் கிழக்கு நோக்கிய கடற்கரைகளைக் கொண்டிருக்கும்போது நாகர்கோவிலுக்கு மேற்கே உள்ள ஊர்கள் அனைத்தும், அவை தமிழக எல்லைக்குள் வந்தாலும் மேற்கு நோக்கிய கடற்கரையை கொண்டவை. அதாவது இந்திய பெருங்கடலும் அரபிக் கடலும் இணையக்கூடிய பகுதிகளை தாண்டி இருக்கக்கூடிய ஊர்கள் அரபிக் கடலின் கடற்கரையைக் கொண்டவை. அதில் குளச்சலும் ஒன்று.

இரண்டாவது…


உண்மையில் குளச்சல் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே ஒரு காலத்தில் கேரளத்தில் ஒரு பகுதியாகவே இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகும் கூட 1956 வரை கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. பிறகு தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. காரணம் அதன் அமைப்பு.

புவியியல் அடிப்படையில் குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் முதலிய ஊர்களெல்லாம் கேரளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன.

புவி வரைபடத்தில் (Satellite Map) பார்த்தால் கூட கேரளாவிற்கென்ற புவியியல் அமைப்பு (மலைத் தொடர்ச்சி, கடற்மட்ட உயரம்) நாகர்கோவில் பகுதி வரை தொடர்வதை பார்க்க முடியும்.

மூன்றாவது…

கேரளாவின் கடற்கரைகளைப் போன்றே கடற்மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரமான (MSL - Mean Sea Level) ஊர்கள் இவை.

சாதாரணமாக நீண்ட அரபிக்கடற்பகுதியும் கடற்மட்டத்திலிருந்து உயர்ந்த நிலமும் (சராசரி MSL உயரம் 1150 மீட்டர்) கொண்ட கேரள மாநிலத்தில் நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு நாள் முன்பு பிறை தெரிவது இயல்பே..

எனவே, அதிகமான காலங்கள் கேரளாவிற்கு பிறை தென்படும் போது அதன் தொடர்ச்சியாக குளச்சல் நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் தென்படுவது இயற்கையே. ரமழான் பிறை மட்டுமல்ல மற்ற மாதங்களின் பிறைகளும் இங்கு ஒரு நாள் முன்பே தென்பட்டுள்ளன.

எனவே மாநிலம் எல்லையில் இருந்தாலும் பூகோள அமைப்பில் அது மற்ற தமிழகத்தின் பகுதிகளுக்கு மாற்றமாக இருக்கும் காரணத்தால் வெறுமனே குளச்சலில் அல்லது அதன் சுற்று வட்டாரத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு வேறு எங்குமே பார்க்கப்படாத பிறையை முழு தமிழகத்திற்கும் ஏற்றுக் கொள்வது சாத்தியமாகாது.

அதாவது தமிழகத்தின் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள 950 கிலோமீட்டர் நீளத்துக்கும் பல்வேறு இஸ்லாமிய ஊர்கள் வழிநெடுக இருந்தும், எண்ணிலடங்கா மக்கள் பிறையைத் தேடியும், தகவல்களை உடனுக்குடன் பரப்ப வழிகள் இருந்தும் கூட மாநிலத்தில் மட்டுமல்ல நாட்டிலேயே எங்குமே பிறை தெரியாத போது புவியியல் அமைப்பில் வேறுபட்டிருக்கும் ஒரு ஊரின் பிறையை வைத்து ஒன்னரை லட்சம் ச.கிமீ கொண்ட முழு தமிழகத்திற்கும்‌ பிறையை முடிவு செய்வது சரியாகுமா ?

சிந்நியுங்கள் மக்களே....

தலைமை காஜி மற்றும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகிறேன்.

பிறை பார்த்த செய்திக்காக நேற்று மாலையில் தலைமை காஜியுடன் பல மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஊடகவியலர்கள் காத்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து பிறை பார்த்த செய்தி வந்தவுடன் கடிதம் வாயிலாக வாட்ஸ் அப்பில் உறுதி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா "ஷைக்குத் தப்ஸீர்"அல்ஹாஜ் R N K அபுசாலி பாசில் பாகவி, தமிழ்நாடு அரசு தலைமை காஜி, கன்னியாகுமரி மாவட்டம்.அரசாணை கையொப்பமிட்ட கடிதத்தில் குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக ஜமாத் செயலாளர் அறிவித்துள்ளதை மாவட்ட தலைமை காஜியான தான் உறுதி செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் பார்த்ததாக உறுதி செய்யாத நிலையில் அவர் குறிப்பிட்ட செயலாளரை தொடர்பு கொண்ட போதும் அவரும் பார்த்ததாக உறுதி செய்யவில்லை. அங்கிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கடல் கரையில் அல்லது கடலுக்குள் சென்று மூன்று அல்லது ஐந்து வினாடிகள் பிறை தெரிந்ததாக முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதால் அச்சாட்சியத்தை சென்னை வாழ் எளிய தலைமை காஜி ஏற்கவில்லை.

தமிழகத்தின் வேறு பகுதிகளில் இருந்து தகவல் ஒன்றும் வராத நிலையில் வெள்ளியன்று முதல் நோன்பு என்ற அறிவிப்பை காஜி வெளியிட்டார்.

பல தவ்ஹீத் இயக்கங்கள் அவரவர்கள் தனியாக கமிட்டி காஜி என்று அமைத்து அவர்களாகவே பிறை நிர்ணயம் செய்வது பல ஆண்டுகளாக தொடர்வதைப் போல் இந்த ஆண்டும் தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் குமரி சகோதரர்களிடையே இந்த பிறை பார்த்தல் விவாதங்கள் பகிரப்பட்ட போது நான் பெரிதும் மதிக்கும் குளச்சல் சார்ந்த தமிழகம் நன்கு அறிந்த சமூக ஆர்வலரிடம் விளக்கம் கேட்டேன்.

குமரி மாவட்ட ஜமாத்துகள் தமிழக அறிவிப்பை தவிர்த்து கேரள அறிவிப்பின்படி செயல்படுவதை குறிப்பிட்டதற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கேரள முஸலியார் வழி நடத்துவதால் இந்த முறை பின்பற்றுவதாக கூறினார். கேரளத்தில் கோழிக்கோடு காப்பாடு முசலியார் அறிவிப்பில் கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து செயல்படுவதை அவர் கருத்து உறுதி செய்தது.

அப்பகுதி முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்துடன் கேரள பகுதிகளுடன் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடு முழுவதும் முற்றிலும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று பிறை சார்ந்த நிகழ்வுகள் நடத்தி வந்த நிலையில் இவ்வருடம் இப்பிரச்சினை வருவதற்கு காரணத்தை ஆராய்வோம்.

குளச்சல் கடலோரத்தில் பார்த்ததாக ஊர்ஜிதம் செய்யாத பிறை பார்த்ததை இதுவரை தமிழகத்தின் ஏனைய பகுதிகளுடன் இணையாத குமரி மாவட்டம், தமிழ் நாடு முழுவதும் இப் பிறை பார்த்தலை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது எந்த வகையில் பொருந்தும் என்று என் சிற்றறிவுக்கு தெரியவில்லை.

பெரும்பாலும் வானம் தெளிவாக நாடு முழுவதும் இருந்த நிலையில் பிறை பார்த்த அறிவிப்பு எங்கும் வரவில்லை. அறிவியல் சார்ந்தும் அன்றைக்கு பிறை தெரிய வாய்ப்பில்லை என்று பகிரப்பட்டது.

குளச்சலில் பிறை பார்த்த அறிவிப்பு வராமல் இருந்தால் பேசாமல் கேரள காப்பாடு முசலியார் அறிவிப்பை ஏற்று இருப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த கூப்பாடு வந்திருக்க வாய்ப்பில்லை.

அறிவார்ந்த கன்னியாகுமரி மாவட்ட சகோதரர்கள் ஆலோசித்து தமிழக பகுதிகளுடன் பிறை சார்ந்த முடிவெடுத்து நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் விழைகிறேன்.

இச்சூழ் நிலையில் சென்னை தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் 
எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.






யார் இந்த தலைமைகாஜி???அவர் ஏன் பிறை தெரிவதை தீர்மானிக்கவேண்டும்??

அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாப் என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரிய அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.

தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ, சைரன் காரோ, தலைமை அலுவலகமோ பெறாதவர்.

மாநிலம் முழுவதும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று ரமலான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஒற்றுமையுடன் ரமலானை வரவேற்று இறை பொருத்தத்தை பெற வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன்.

உங்கள்  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment