Wednesday 4 July 2007

சகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...

உறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.

ஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.

மகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து "பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொன்னதும், அவன் "என் நாட்டுக்கு காவல் காரனாயிரு" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் "எங்கே போனாய் என் நாதா" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.

இங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயிறு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.

டெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.

இன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.

இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.

நினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என்  மாற்றுமத சகோ தரி  சங்கீதாதான். கர்நாடகாவில் நான்  பெங்களூரில் வேலை செய்யும் போது போன் பூத்தில் பகுதி நேர  பணியாளரான  அவளை, நான் கர்நாடகா மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் போன் பூத்இல் வேலை செய்யும்   ஒவ்வொரு  பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.

இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment