Saturday 31 December 2011

மூலிகையில் கொட்டும் பணம் !! அள்ளநீங்க தயாரா?


ஆவாரை செடி
"வாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள்.

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும்  தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது.  வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே.

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு  விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும்  அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம்,
அரும்பாக்கம், சென்னை-06.
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம்.


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?
தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.  எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )
மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)
அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)
கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.

கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்...

Friday 30 December 2011

Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips ...

Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது   எப்படி? Blogger Tips
 
 
 
ஆராய்ச்சியை புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை விவரம்.


Blogger-ல் (Blogspot) நமக்கு தேவையான வலைப்பூவை இரண்டு விதமாக Follow செய்யலாம்.

1. வெளிப்படையாக (Publicly)

2. இரகசியமாக ( Privately or Anonymously or Secretly)


எந்த விதமாக Follow செய்தாலும், அந்த வலைப்பூவின் புதிய பதிவுகளை Blogger Dashboard-ல் உள்ள ‘Reading List' வழியாக Follow செய்பவர் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.


’Public Followers" எத்தனை என்பதை Followers Widget-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் “Secret Followers" எத்தனை என்பதை நேரடியாக தெரிந்துகொள்ள வழி இல்லை.

குறிப்பிட்ட Follower நமக்கு தேவையில்லை என்றால் அவரை Block செய்துவிடலாம். அவர் ”Blocked Followers" லிஸ்ட்டுக்கு போய்விடுவார்.

ஆராய்ச்சியில் இறங்கியது ஏன்?

”யாராவது என் வலைப்பூவை இரகசியமாக Follow செய்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா? ”

இது எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கும் ஒரு சந்தேகம். அதிர்ஷ்டவசமாக அந்த சந்தேகத்தில் பாதியை நானாகவே Solve செய்துவிட்டேன்.

எனக்கு தெரிந்து இதற்கு முன் யாரும் இதை Solve செய்யவில்லை. (தற்பெருமை அடித்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். சான்ஸை விட்டுடாதே! சரி.... டும் டும் டும்).

இதற்கு விடை கூகிளில் எவ்வளவு நேரம் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்.

அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவு தமிழில் முதல்முதலாக வெளிவருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

துப்பறியும் காண்டம்.

முதலில் உங்கள் கூகிள் கணக்கில் Login செய்துகொள்ளவும்.

"Blocked Followers" எண்ணிக்கையை (If any) தெரிந்துகொள்ள Blogger Dashboard-ல் உள்ள Followers கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் Show Blocked Followers கிளிக் செய்து Blocked Followers எண்ணிக்கையை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.



உங்கள் வலைப்பூவின் "Secret Followers"-ன் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள உங்கள் "Public Followers" எண்ணிக்கையையும், “Blocked Followers" எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளவும் (SUM1).

அடுத்து http://www.google.com/friendconnect/ செல்லவும்.


உச்சகட்டம் (Climax)


Google FriendConnect இடது பக்கத்தில் உங்கள் பிளாக் பெயரை கிளிக் செய்து Community Data கிளிக் செய்யவும். மேலும் Membership Tab கிளிக் செய்யவும். Total Members என்று ஒரு எண்ணிக்கை வரும். அதில் SUM1 கழித்துவிட்டால் மீதி வருவதுதான் உங்கள் வலைப்பூவின் Secret Followers-ன் எண்ணிக்கை.

எடுத்துக்காட்டாக எனக்கு

Total Members கூகிள் FriendConnect-படி .... 129
Public Followers ................................................118
Blocked Followers................................................. 7

அப்படியானால் ஃபார்முலா பின்வருமாறு

Total Members - Public Followers - Blocked Followers = Secret Followers.

129 - 118 - 7 = 4 Secret Followers.

நானே என்னை இரகசியமாக Follow செய்து கொள்கிறேன். (Blogger Reading List-லே என் பதிவுகள் ஒழுங்கா வருதான்னு செக் பண்ண வேணாமா?). அப்படின்னா என்னை கழித்த பிறகு 3 வருகிறது.

இப்ப கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 3 பேர் இரகசியமாக Follow செய்கிறார்கள் என்று.

எங்கேப்பா Claps / விருது / பட்டம் / ஓட்டு?

இப்படிக்கு துப்பறியும் புலி எலி.

உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்....

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.
இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.
பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.
இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.
அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.
முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.
கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.
ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)
ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.
வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.
ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.

நன்றி : The 100
ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்

இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா? ...

இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா?

இதை ஒரு ஆலிமிடம் நீங்கள் கேட்டால் அவர் சட்டென இஸ்லாமியக் கல்வியென்று பதில் சொல்வார். ஆனால் இந்த விடை நிச்சயமாக தவறு.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இருவிதமான கல்வி என்ற பாகுபாடே கிடையாது.இஸ்லாமியக் கல்வியும் சரி உலகக் கல்வியும் சரி சமமே. இந்த பாகுபாடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கவில்லை. இது பிற்பாடு மாற்றுமதத்தவர்களால் குறிப்பாக மேற்கத்தியர்களால் தோற்றுவிக்கப்பட்டது.எதற்காக இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக!

ஆங்கிலத்திலே ஒரு வாக்கியம் உண்டு "Give to Caesar what is Caesar's and to God what is God's" அதாவது "அரசருக்கு கொடுப்பதை அரசருக்கு கொடு கடவுளுக்கு கொடுப்பதை கடவுளுக்கு கொடு".

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவழிபாடு, மதம், அரசியல், குடும்பம் என அனைத்துமே ஒன்றுதான். இதன் காரணமாகவே இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் மிக வேகமாக அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறக் கூடியளவு வளர்ந்தது.இதை நன்கு உணர்ந்த மேற்கத்தியர்கள் முஸ்லிம்களை இதுபோன்ற நிலையில் நிச்சயம் வெற்றிகொள்ள முடியாது என முடிவு செய்து அவர்கள் செய்த குழப்பமே இன்று நாம் இஸ்லாமியக் கல்வியா உலகக் கல்வியா என்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கல்வியை பிரித்துப் பார்த்ததின் விளைவு இன்று ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கின்றோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரிலே சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை தங்களுக்கு தெரிந்த கல்வியை தம் மக்களுக்கு கற்றுக்கொடுக்கச் சொல்லி விடுவித்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சற்று சிந்தித்து பாருங்கள் காபிர்களிடம் மார்க்கக் கல்வியா அந்த ஸ்ஹாபாக்கள் கற்றிருப்பார்கள்.

சீனா சென்றாயினும் கல்வியை பயின்றுகொள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களே அதுவும் என்ன மார்க்கக் கல்வியை கற்கவா? முஹம்மது (ஸல்) அவர்களைவிட வேறு யாரிடம் அந்த ஸஹாபாக்கள் மார்க்கம் பயிலப்போகிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பார்த்தோமேயானால் நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் யூதனால் கழுத்தை நெறிக்கப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
அகல்போரின் போது ஸஹாபாக்கள் தங்களது வயிற்றிலே ஒரு கல்லை கட்டிக் கொண்டு அகல் தோண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இரண்டு கற்களை கட்டிக்கொண்டு அகல் தோண்டினார்களே அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் புராக் வாகனத்திலே விண்ணுலகப் பயணம் சென்றார்கள் என்பதை நம்மால் ம்றுக்க முடியுமா?

அனைத்திற்கும் மேலாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்ற மக்கா வெற்றியைச் சிந்தித்துப்பாருங்கள். இஸ்லாத்தை எத்தி வைத்ததற்காக தங்களை கல்லால் அடித்தவர்கள், தங்களை ஊரை விட்டே துரத்தியவர்கள், மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்று தெரிந்து ஓடி ஒழிந்து கொண்டார்கள். எந்தவித சண்டையும் இல்லாமல் மக்கா வெற்றிகொள்ளப்படுகிறது.வெற்றிகொண்டுவிட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து குறைஷிகளையும் மன்னித்தார்கள் என்பதை எந்த சரித்திர ஆய்வாளர்களும் ஆச்சரியத்துடன் குறிபிட மறந்ததில்லை.இது உலக சரித்திரத்தில் எங்கும் நடந்ததில்லை நடக்கப்போவதுமில்லை என்பதே உண்மை. அன்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அத்தனை மக்காவாசிகளையும் கொன்று குவித்திருக்கலாம் ஆனால் இஸ்லாம் வளர்ந்திருக்காது.

இதன் மூலம் முஹம்மது நபி (ஸல்) இஸ்லாம் உலகம் என்று எதையுமே பிரித்துப்பார்த்ததில்லை என்பதை நாம் உணர முடியும். அதன் காரணமாகவே பிற்காலத்தில் இஸ்லாம் மத்திய ஆசியா முழுவதும் பரவிற்று என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்பொழுது இன்று நாம் இஸ்லாமியக் கல்வி உலகக் கல்வியென்று பிரித்துப்பார்ததினால் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை பாருங்கள். பெற்ற மகனை கணிப்பொறி விஞ்ஞானியாக படிக்கவைத்தோம் ஆனால் இஸ்லாத்தை விட்டுவிட்டொம் விளைவு நிறைய சம்பாதிக்கிறான் ஆனால் பப் என்றும் டிச்கோ என்றும் சுற்றி வாழ்க்கையை இழந்து நிற்கக்காண்கிறோம். பெற்ற மகளை கல்லூரியிலே படிக்க வைத்தோம் இஸ்லாத்தை விட்டுவிட்டோம் விளைவு யாரோ ஒரு காபிருடன் குடும்பம் நடத்தும் இழிநிலையை காண்கின்றோம்.
சரி இதுதான் இப்படி மார்கக்கல்வி பயின்றவர்களாவது நன்றாக இருக்கிறார்களா என்றால் நிச்சயம் அதுவுமில்லை. ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஜமாத் கடிதத்தை கொடுத்து என் பெண் பிள்ளைக்கு கல்யாணம் உதவி செய்யுங்கள் என்று கையேந்த விட்டுவிட்டோம்.
சற்று சிந்தித்த்ப்பாருங்கள் சகோதரர்களே உங்களுடைய பிள்ளை கணிப்பொறி விஞ்ஞானியாக அதே சமயம் மார்க்கமும் தெரிந்திருந்தால் நிச்சயம் பப், டிஸ்கோ என்று வாழ்க்கை சீரழிந்திருக்குமா? உங்கள் பெண் பிள்ளை காபிருடன் ஓடிப்போகும் இழிநிலைதான் ஏற்பட்டிருக்குமா? அதுபோல இமாம்கள் உலகக் கல்வி பயின்றிருந்தால் இப்படி கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?
ஆகவே இனிமேலாவாது நாம் அனைவரும் உலகக் கல்வி இஸ்லாமியக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்தையும் கற்று அல்லாஹ்வும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன வழிமுறைப்படி வாழ ஏக இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்.

உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர-.டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks)



உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...

டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.
பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்
சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுபானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.
இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்....
"நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன். ஆனால், ஏசு (அலை) அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.
என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.
எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து, "நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?" என்று கேட்டார்.
உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.
ஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.
காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa'el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன், "என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? "
நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.
நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.
குரானைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur'an).
அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).
இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குரான் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.
இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.
அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,
"உங்கள் மதம் என்ன?"
"கிருத்துவன்" என்று பூர்த்தி செய்தேன்.
சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,
"மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?"
இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.
"என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?" என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.
நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.
* அப்படி என்ன டென்ஷன் எனக்கு?
* அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.
* இதையெல்லாம் விட, நான் ஏன் "நாமென்ன முஸ்லிமா?" என்று கேட்க வேண்டும்.
எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.
பிறகு என் மனைவி சொன்னார், "இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்".
பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குரான் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.
அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.
ஆக, குரானைப் படிக்கிறேன், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.
என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,
"நீங்கள் முஸ்லிமா?" என்று பணிவுடன் கேட்டார்.
ஆனால் நானோ மிகக் கடுமையாக,
"NOoooooooooooooooooooooooooo............."
என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.
ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?. இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?
இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
"உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.
நீங்கள் என்னிடம், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்"
நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.
என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.
"ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்" என்று சொல்லி விடைபெற்றார் அவர்.
நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கில்த்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.
இப்போது நான்,
* ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.
* இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.
* முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.
* ஐந்து வேலை தொழுகிறேன்.
* நோன்பு நோற்கிறேன்...
இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.
என்னைப் பார்த்து "நீங்கள் முஸ்லிமா?" என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.
இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.
ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.
எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.
எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள. ஆம். அதே கேள்விதான்.
"நீங்கள் முஸ்லிமா?"
இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.
எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,
* ஒன்று "நாம்" (N'am, அரபியில் "ஆம்" என்று அர்த்தம்),
* மற்றொன்று "லா" ( La, "இல்லை" என்று அர்த்தம்).
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.
இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,
"திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்"
ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?
அல்ஹம்துலில்லாஹ்...சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது....
"நாம்".......................
இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்..."
சுபானல்லாஹ். இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.
இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.
முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).
டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, "Islam Our Choice: Portraits of Modern American Muslim Women" என்ற புத்தகத்தை எழுதியவர்.
அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,
* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,
* ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,
* தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்
என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.
இறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்
டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், "Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam".
இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.
இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட புத்தகம் தான் இது.
இதில்,
* முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,
* பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,
* எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்
என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.
CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக...ஆமின்
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் ? > Dr.Jeffrey Lamg




நாத்திகம் To இஸ்லாம்
டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.
நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.
"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான்.

என் தந்தையால் என் தாய்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.
இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன.
* என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்?
* ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்?
* உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
* இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
* நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?
இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.
நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது.
ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது.
வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன்.
குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...
முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...
அதில் ஒரு வசனம்,
தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3
என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...
முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...
அதன் இரண்டாது வசனம்,
இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2
என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.
படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது.
ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...
என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.
இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள். --- Qur'an 2:30
இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு.

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன்.
அதே வசனத்தின் இறுதியில்,
அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30.
என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா?
இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.
என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.
குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை.
பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.
ஒருமுறை என் மகள் கேட்டாள்,
"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?"
இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.
நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.
ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.
என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று.
குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.
பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.
நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.
தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.
இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.
ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,
நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க்கொள்கிறதே, அதுபோல தான்" என்று...
வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள்.
உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம்.
அதனால் தேடுவதை தொடருங்கள்...."
இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ்.
நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.
அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...
டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர்.
பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள்
* "Losing my religion, A call for Help",
* "Struggling to Surrender" மற்றும்
* "Even Angels Ask:: A Journey to Islam in America"
இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது.
நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ்.
இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.
அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங்.
For the believers, there is always a bright spot at the end of the tunnel.....
இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Thursday 29 December 2011

காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து.....

காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து!.இதயத்தைத் துளைக்காதே?- டாக்டர் ஹர்ஷவர்தன்.


கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்.  கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விட்டபாடில்லை.
"காய்ச்சலோட எதுவும் சாப்பிட முடியல. எது சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்துல வாந்தி வந்துடும். வெறும் பாலும் தண்ணியும்தான். உடம்பு பலகீனமாயிடுச்சி"  என்று சொல்லும் வெள்ளைக்கண்ணுவின் உடல்நிலை, கடந்த நவம்பர் 4ம் தேதி மூச்சு கூட விட முடியாத அளவுக்கு  மிகவும் மோசமானது. அவசரமாக சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘மிகவும் அபூர்வமான ஒரு பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  இன்று இரவே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கஷ்டம். நீங்கள் சென்னைக்குப் போய்விடுவது நல்லது’என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வெள்ளைக்கண்ணுவிற்குத் திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளைக்கண்ணு நலமா இருக்கிறார். அறுவைச் சிகிச்சை செய்த எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இதய நுரையீரல் பிரிவுத் தலைவர் டாக்டர் கே. ஹர்ஷவர்தனைச் சந்தித்துப் பேசினோம்.
"நவம்பர் 4ம் தேதி மாலை, புதுச்சேரி டாக்டர்களே எனக்கு போன் செய்து பேசினார்கள். ‘இவருக்கு புரூசெல்லோசிஸ் (brucellosis) மாதிரி தெரியுது. இங்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ‘சரி, உடனடியாக அனுப்புங்கள்’ என்றேன். தொடர்ந்து 9 மாதங்களாக ஜுரம் இருந்ததற்குக்  காரணம், புரூசெல்லோ என்ற பாக்டீரியா. கால்நடைகள் மூலம் பரவும் இந்த நுண்ணுயிரி, உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இந்தக் கிருமி வெள்ளைக்கண்ணுவின் இதயத்தில் போய் தங்கிவிட்டது. அவரின் இதயத் தசைகளைப் பாதித்து இதயத்தின் பிரதான இதய வால்வுகளான அயோட்டா, மைட்ரல் போன்ற 3 வால்வுகளில் துளைகளை ஏற்படுத்தி இருந்தது. மற்ற வால்வுகளில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்திவிட்டது. இரவு 10 மணிக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து ஏழு மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட அயோட்டா வால்வை நீக்கி, அதற்குப் பதிலாக செயற்கை வால்வைப் பொருத்தினோம். அறுவைச் சிகிச்சையின்போது, மற்ற உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்படாமல் இதயத் துடிப்பை மட்டும் நிறுத்தி, இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையைச் செய்தோம். பாதிக்கப்பட்ட மற்ற வால்வுகளில் உள்ள குறைகளையும் பிறகு சரி செய்தோம்.
சிகிச்சைக்குப் பிறகு, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் வெள்ளைக்கண்ணுவின் ரத்தத்தைப் பரிசோதனைசெய்து, எந்த நோய்த் தொற்றும் தற்போது அவர் உடலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். இனி அவருக்கு அந்த நுண்ணுயிரியின் மூலம் எந்தப் பாதிப்பும் இருக்காது.  சராசரி வாழ்க்கையை இனி அவர் வாழலாம். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ள எனக்கு, இதைவிட சிக்கலான அறுவைச் சிகிச்சை எல்லாம் செய்துள்ளதால் இந்தச் சிகிச்சை எளிதாக இருந்தது. நம் நாட்டில் இந்தக் கிருமியின் தொற்று மிக அபூர்வம் என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் செய்த இந்த அறுவைச் சிகிச்சை பற்றி சர்வதேச மருத்துவ இதழில் எழுத உள்ளேன்" என்றார் டாக்டர் ஹர்ஷவர்தன்.
வெல்டன் சார்..!
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து...டாக்டர் ஹர்ஷவர்தன் சொன்னார்: "வெள்ளைக்கண்ணுவிற்கு ரியாத்தில் ஒரு வயலில் வேலை. அங்கு விளையும் காகறிகளை விற்பனைக்கு அனுப்புவதும் பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதும் அவரின் தினப்படி வேலை. பாலைக் காச்சாமல் அப்படியே குடிப்பது அவரின் பழக்கம். காய்ச்சாத, பதப்படுத்தப்படாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் இருக்கும். இந்தக் கிருமி தாக்கிய மாடுகள் கருவுற்றால் 2 மாதங்களில் அப்படியே கரு சிதைந்து, தானாகவே வெளியில் விழுந்துவிடும். இதனை நாய், பன்றி போன்ற உயிரினங்கள் சாப்பிடும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் வந்துவிடும். நம் நாட்டில் இப்படிப்பட்ட கால்நடைகளைக் கவனித்து, ஏன் கரு தங்கவில்லை என்று உடனடியாக கால்நடை டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து விடுவார்கள். பச்சை இறைச்சி சாப்பிட்டாலும் இந்த நுண்ணுயிரி தாக்கும் அபாயம் உண்டு. வறட்டி தட்டுபவர்களுக்கும் வரலாம். இதயம் மட்டுமல்ல மூளை, நரம்பு மண்டலம் என்று உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இது தாக்கலாம். எந்த இடத்தில் போய் தங்கிவிடுமோ அந்த உறுப்பை, தசைகளை, எலும்பை  கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிடும்" என்கிறார்.

ஜிஜி-- டாக்டர் ஹர்ஷவர்தன்.

இக்ராமுல் முஸ்லிமீன்(நற் குணங்கள்/தீய குணங்கள்)!...

                    இக்ராமுல் முஸ்லிமீன்(நற் குணங்கள்/தீய குணங்கள்)!...

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.
(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)
சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.
(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,
மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)
பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான் (இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

தீய குணங்கள்

1 . தற்பெருமை(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமைஅநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)
முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி – நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டைஅல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)
கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)
செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


நற் குணங்கள்

1. நிதானம்இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)
உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)
(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)
எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)
தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்

.

Wednesday 28 December 2011

Where Two Salty and Sweet Seas Meet?.....


Two Seas in Quran
"He releases the two seas 9meeting) side by side, between the a barrier (so) neither of then transgresses" (Quran, 55: 19-20)

"And it is He who has released (simultaneously) one fresh sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition" (Quran, 25:53)

"It is He Who has let free the two bodies of flowing water: one palatable and sweet, and the other salty and bitter; yet has He made a barrier between them, and a partition that is forbidden to be passed" (Quran, 25:53)

How can it be?
Modern science find this myth while Quran state it in more than 1400 years ago. For a Muslim phenomenon like it was not unusual because all happens with the power of almighty God. This does not mean a Muslim did not want to pay attention to the scientific facts about natural events like these two seas, because of this phenomenon requires a Muslim to do research and take the wisdom and knowledge.

Many of the power of God in the form of phenomena which according to most humans strange, can be a source of science research to generate substantial benefits for human life.

Modern Science has discovered that in the places where two different seas meet, there is a barrier between them. This barrier divides the two seas so that each sea has its own temperature, salinity and density. This phenomenon occurs in several places, including the divider between the Mediterranean and the Atlantic Ocean at Gibralter. A white bar can also be clearly seen at Cape Point, Cape Peninsula, South Africa where the Atlantic Ocean meets the Indian Ocean. But when the Qur’an speaks about the divider between fresh and salt water, it mentions the existence of  “a forbidding partition” with the barrier.

This phenomenon occurs in several places, including Egypt, where the river Nile flows into the Mediterranean Sea. These scientific phenomena mentioned in the Qur’an was also confirmed by Dr. William Hay, a well known marine scientist and Professor of Geological Sciences at the University of Colorado, U.S.A. (Muslim Ways)









Egyptian Pharaoh Preserved is one of Proof of God's Existance...


The Body of PharaohOne more sign that proves God exists and powerful is was the discovery of the pharaoh's body in the red sea. The Qur'an tells of the prophet Moses and his followers were chased by the pharaoh and his army. By His power, God splits the sea and drowned Pharaoh and his followers.

All creatures including sea was submissive and obedient to God. How about we as human beings much more perfect?
  • "This is a book whereof this no doubt a guidance to those who fear their Lord much" (Quran, 2:2)
  • "We brought the tribe of Israel across the sea and Pharaoh and his troops pursued them out of tyranny and enmity. Then when he was on the point of drowning, he (Pharaoh) said, "I believe that there is no god but Him in whom of the tribe of Israel believe. I am one of the Muslims. What, now! When previously you rebelled and were one of the corrupter? To day We will preserve your body so you can be a sign for people who come after you." (Quran, 10:90-92)
  • Surely many people are heedless of our signs (Quran, 10:92)
This body (Pharaoh's body) was only discovered in 1898 but the Quran existed nearly 1400 years ago. That is the dead body of Ramses II, The Egyptian King in the era of Prophet Moses (PBUH), it's age is approximately 3000 years old and it was found by the Red Sea at the place called Jabalain. Now in the Royal Mummies Chamber of Egyptian Museum in Cairo.

What is the secret of such good preservation of this body?
Dr. Maurice Bucaille was a head and the leader of a group of physicians concern on rebuilding in France. That was in 1981. The result has shown that the residue of salt inside his body was evidence that he died by drowning.

Morris was preparing on final report on what was believed to be a "new discovery" in a Pharaoh's body. Till he was told that Muslims talk about drowning of this mummy he was very surprised!! after he read the story of Pharaoh's drowning in the Quran.

Islam is not the enemy. Islam is religion of all prophets. "So if you (Muhammad PBUH) are in doubt concerning that which we revealed unto you, the ask those you are reading the book (the Taurat) and the Injeel before you. Verily the truth has come to you from your Lord. So be not of those who doubt (it). And be not one of those who belie that Ayat (signs, proofs, evidences) of Allah, for then you shall the one of the losers. Truly! Those, against whom the word (wrath) of your Lord has been justified, will not believe. Even if every sign should come to them until they see the painful torment." (Quran, 10: 94-77)

Egyptian Pharaoh Preserved is one of Proof of God's Existance

,,, 

Source : Ahmad Deedat Channel

Family Tree of Holy Prophet Muhammad PBUH...



Family Tree of Holy Prophet Muhammad PBUH .....




Family Tree of Hazrat Muhammad SAW (Sallahu Alaihi Wasallam)

Shajra  Nawab a Nabi Hazrat Muhammad S.A.W

Shajrah a Mubarik of Holy Prophet Muhammad P.B.U.H (Silsalah a Rasoo