Saturday 16 October 2021

இந்த காலத்தில் சராசரி குடும்பத் தலைவர்வர்களுக்கான ஓர் தரமான படம் தான் " விநோதய சித்தம்"


இந்த காலத்தில் இப்படி ஒரு படமா என்று நினைக்கும் அளவுக்கு ஓர் தரமான படம் தான் " விநோதய சித்தம்"

தம்பி இராமையா தான் சேர்ந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து முன்னேற்றத்தில் பங்கு வதித்து பெரிய நிறுவனமாக உயரச்செய்து மேல் அதிகாரியாக கார், பங்களா என்று அனைத்து வசதியான சலுகைகளையும் பெற்று மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று சந்தோஷமாக வாழ்கிறார். தன் 25வது மணநாளை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அவசர வேலையாக வெளியூருக்கு செல்லும் தம்பி ராமையாவிற்கு விமான டிக்கெட் கிடைக்காததால் வேலை முடித்து விட்டு காரில் திரும்பி வருகிறார். வரும் வழியில் விபத்தில் சிக்கி தம்பி ராமையாவின் உயிர் பிரிகிறது. அதில் சிறிது சிறிதாக அவரது உயிர்பிரிந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது ஆன்மா ஒரு அமானுஷ்ய உலகில் கண்விழிக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை தனக்கு டைம் இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் அவர் அங்கு காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) பார்க்கிறார்.

அந்த சமயத்தில் காலம் என்கிற எமனாக வரும் சமுத்திரகனியிடம் கெஞ்சி 90 நாட்கள் உயிரோடு இருக்க வரம் பெற்று மீண்டும் அவருடன் சென்னைக்கு பயணிக்கிறார். தான் இல்லை என்றால் எதுவும் வீட்டில் இயங்காது என்று மமதையுடன் இருக்கும் தம்பிராமையாவிற்கு காலம் வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆசைப்பட, அது நிறைவேறாமல் போகிறது. மகள் காதல் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகிறார், வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் வேலை இழந்து தனது காதலியுடன் வீட்டிற்கு வருகிறார். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனால் அதிர்ச்சியடையும் தம்பி ராமையா அனைத்து பிரச்னைகளையும் 90 நாட்களில் சரி செய்தாரா? இறுதியில் நடந்தது என்ன? என்பதே மீதிக்கதை.


இறந்தபின்பு வாய்ப்பு வழங்கப்படுவது, மறுபிறவி என தமிழில் ஏகப்பட்ட படங்கள் இதற்கு முன்பு வந்துள்ளன. ஆனால் வழக்கமான மறுபிறவி டெம்ப்ளேட் படங்களில் இருந்து ‘விநோதய சித்தம்’ மாறுபட்டு நிற்கிறது. படம் தொடங்கிய 10 நிமிடத்திலேயே மெயின் கதைக்குள் பயணிக்க தொடங்கி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. மொத்த படமும் தம்பி ராமையாவின் முதுகில் தான் சவாரி செய்யப் போகிறது என்பதை அந்த முதல் பத்து நிமிடங்களிலேயே இயக்குநர் சமுத்திரக்கனி நமக்கு சொல்லிவிடுகிறார்.

நாம் அனைவரும் உணர வேண்டிய ஒரு உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த படம். தான் இல்லாட்டி என் குடும்பமே ரோட்ல நிக்கும்.’ என நினைக்கும் பல சராசரி குடும்பத் தலைவர்வர்களுக்கு இந்த சினிமாவில் நல்ல மெசேஜ் இருக்கிறது. உண்மையில் தனி மனித வாழ்வை வித்யாசமான கோணத்தில் காட்டுகிறது இந்த சினிமாமொத்தத்தில் ரொம்ப நாள் கழித்து மிக நல்ல படம் ஒன்றை பார்த்த மனத்திருப்தி !!

குடும்பத்துடம் சேர்ந்து பார்த்து, மனதில் இருத்திக் கொள்ளக்கூடிய கருத்துக்கள் ஏராளம்!!

காலனாக இல்லையில்லை "காலமாக" வரும் சமுத்திரகனியின் வசனங்கள் கூர்மை.. 

கடைசியாக, சமுத்திரகனி தம்பி இராமையாவிடம் சொல்லும் வசனம் தான் ஹைலைட்!!

"உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இருக்கும் வித்யாசம்..

உங்க மனைவிக்கு எல்லாம் தெரிஞ்சும், ஒண்ணும் தெரியாதமாதிரி இருப்பாங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாத போதும் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே உருளுவீங்க..!!"

ரம்பத்தில், விமான டிக்கெட் எடுக்காத ஊழியரை வேலையை விட்டு தூக்கும் நபர், கடைசியில், அவர்கள் செய்யும் தவறுகளை பொறுமையாக மன்னிக்கும் மனம் படைத்தவராக மாறுகிறார்!!

அன்பு, அருளாக மாறி, காலனின் மனதுக்கு பிடித்தவராகவும் மாறுகிறார் பாருங்கள் அது தனிச் சிறப்பு

"நம்மால் நாலு பேருக்கு சந்தோஷம் என்றால், நமக்கும் சந்தோஷம் தானே!!"

தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக புரட்சிகரமான வசனங்களை பேசும் சமுத்திரக்கனி, இந்த படத்தில் வாழ்க்கையின் நிதர்சனங்களை சொல்லி ஸ்கோர் செய்திருக்கிறார்.

நேரமில்லை என்று சொல்பவருக்கு, நேரம் எவ்வளவு பொன்னானது, யார் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் இயங்கிக்கொண்டே தான் இருக்கும், அவரை சார்ந்தவர்கள் வாழ்க்கை தடைபடாமல் ஒடிக்கொண்டே தான் இருக்கும் என்பதை தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து புதிய முயற்சியோடு, புதிய சிந்தனையோடு நகைச்சுவை கலந்து அசாத்திய திறமையோடு கனகச்சிதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி

முந்தைய சமுத்திரக்கனி படங்களில் இருக்கும் பாடல், சண்டைக்காட்சிகள் என எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களில் படத்தில் இல்லாதது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.ஆபாச வசனம் ,பாடல்கள் ,வன்முறை, முத்தம் காட்சிகள் போன்றவை இல்லாமல் ஒரு தரமான படம் தரமுடியும் என்று திரு சமுத்திரக்கனி நிரூபித்து உள்ளார் .வாயால் மட்டும் வசனம் பேசிவிட்டு தமிழகமக்களுக்கு எதுவும் செய்யாமல் ட்யரெக்டாக முதல்வர் ஆசையில் இருக்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில் ஒரு குணச்சிட்டாரா நடிகரை கதாநாயகனாக நடிக வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர்.

இதுதான் 1442 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இஸ்லாமிய உபதேசம்:

  "நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தீங்கிழைக்காமல் நல்லவனாக வாழ்ந்தாலே போதும் நமக்குரிய பலன் நம்மை வந்து சேரும்"


ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday 3 October 2021

கொழுப்பை குறைக்கும் உணவுகள் !! ஒரு தவகள்..

 




கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும்.


கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.
சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.


இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிற்றை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.


தாகம், பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகிறது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.


பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும், குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தல் சிறந்தது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு, அதிமதுரச்சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய்
முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து
கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற செய்வது,
ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால்
இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில்
இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம்
ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது.

எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு
ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.


கொழுப்பை குறைக்கும் உணவுகள்:


* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

* வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும்
குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை
எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

* சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

* கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

* சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும்.

இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம்
செய்து சாப்பிடுங்கள். 

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். ஏனெனில் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீரின் வழியாக வெளியேறும். எனவே உடலுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. 

இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பைத் தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு, கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கி மிதமாகப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்வதை தவிர்க்க முடியும்.


காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்திருக்க முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து, உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி இவ்வாறு உடலுக்கு தேவையான நீர் அருந்துவதால் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் உடலிற்கு புத்துணர்வையும் தருகிறது. ஏனெனில் குளிர்ந்த நீர் அதிக கலோரிகளை எரிக்கிறது.

நட்ஸ், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் இவை அனைத்திலும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. இவை அனைத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சாப்பிடுவதால் பசி உணர்வு ஏற்படாது. ஏனெனில் இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஓடுதல், நடனம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியாக இருக்கலாம் (அ) ஜிம் பயிற்சிகளாக இருக்கலாம். இவ்வாறு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு இதயத்தின் வேலையை வேகப்படுத்த வேண்டும்.

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே குறிக்கோளைப் பெற தொடர்ந்து ஈடுபாட்டோடு இருக்க வேண்டும்.

உடல் எடை சீராக இருக்க, தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.

தொகுப்பு  : திருமதி தையுபா அஜ்மல்