Wednesday 14 December 2011

ஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது?

ஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது?

அல்லாஹ் வின் திருப்பெயரால்....


நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு
துவங்கப்பட்டது.
இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துகள் மக்களிடம் இருந்தன.

Ø நபிகளாரின் பிறப்பு
Ø நபித்துவம் கிடைத்த ஆண்டு
Ø நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு
Ø நபிகளாரின் இறப்பு

இதில் பிறந்த தேதியிலும், நபித்துவம் கிடைத்த ஆண்டிலும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்குள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக ஹிஜ்ரத் செய்த ஆண்டை தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம்.7, பக்கம் 268)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி (3934)
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)

உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயித் பின் முஸய்யப்(ரலி) நூல்: ஹாகிம் (4287)

நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

வருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தை கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை தேர்வு செய்தார்கள்.
எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268) இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்படி என்றால் நபிகளார் காலத்தில் எப்படி கணக்கிடப்பட்டது?நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே ஆண்டின் முதல் மாதம் என்பது குறிப்பிட்டு வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஅபத்துல்லாவை அழிக்க வந்த போது அல்லாஹ் பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாக பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது). இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

நானும் நபி(ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம் என்று கைஸ் பின் மக்ரமா(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: திர்மிதி 3552, அஹ்மத் 17218)
இந்த செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததை தெளிவாக எடுத்துரைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்குச் சென்றபோது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப்பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லில் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையை சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம் 7 பக்கம் 268)

No comments:

Post a Comment