Friday 17 October 2008

பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்டு விடும் பட்டாசு காயங்களுக்கு முதலுதவி !! ஒரு சமூக விழிப்புணர்வு தவகல்..

தீபாவளி நெருங்கிவிட்டது. தெருக்களில் பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி விட்டது. பண்டிகை தினங்களில் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பட்டாசு கொளுத்தும் பழக்கம் தோன்றியது. பட்டாசு வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும் அதிக எச்சரிக்கையுடனும் பட்டாசுகளைக் கையாள வேண்டும். அலட்சியம் ஆகாது. விளையாட்டுத்தனம் கூடாது. அப்போதுதான் ஆபத்து ஏற்படாது.

சரி, என்னதான் கவனமாக இருந்தாலும் எங்கோ தவறு நேர்ந்துவிட்டது. பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு விட்டது. அப்போது என்ன செய்வது?

பட்டாசு காயங்களுக்கு முதலுதவி:

*காயம் ஏற்பட்ட உடல் பகுதியை உடனே தண்ணீரில் மூழ்கவிடுங்கள்.
*அல்லது தண்ணீரில் நனைத்த துணியால் காயத்தை அழுத்தமாக மூடுங்கள். 

பொதுவாக பட்டாசு காயங்கள் முகம், உள்ளங்கை மற்றும் கைவிரல்களில்தான் உண்டாகும். ஆனால், கையைத் தண்ணீரில் நனைப்பதற்குப் பல பேர் பயப்படுவார்கள். தண்ணீரில் நனைத்தால் கொப்புளம் ஏற்பட்டு விடும் என்று ஒரு தவறான எண்ணம் பலரிடம் உள்ளதுதான் இதற்குக் காரணம். இது உண்மையில்லை.  தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்குக் காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தன்மை குறையும். அதில் கொப்புளம் ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே, தீக்காயத்தைத் தண்ணீரில் நனைக்க யோசிக்க வேண்டியதில்லை.மேலும், பட்டாசு காயத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், இவ்வகைக் காயத்தில் வெப்பத்தைக் குறைப்பதே முதலுதவியின் முக்கிய நோக்கமாகும். 

*காயம் பட்ட இடம் முகமென்றால் உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவுங்கள்.
*கையென்றால் குழாய்த் தண்ணீரில் கையை நனையுங்கள்.
*இவ்வாறு சுமார் 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் நனைத்த பின்னர், காயத்தின்மீது ’சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவவும்.
*பிறகு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். 

இப்படிச் செய்யாதீர்கள்!

தீக்காயத்தின்மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து முதலியவற்றைப் பூசுவது நல்லதல்ல. தீக்காயத்துக்குத் துணிக்கட்டுப் போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்டு தேவை என்று எண்ணுபவர்கள் காயத்தில் ஒட்டிக்கொள்ளாத ‘ஃபுராமைசிடின் டூல்’ எனும் மருந்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். அப்போதுதான் கட்டைப் பிரிக்கும்போது வலி உண்டாகாது.


இவற்றை அகற்றுங்கள்!
பட்டாசு காயம் பட்ட இடத்தில் மோதிரம், வளையல், கைக்கடிகாரம் போன்ற ஆபரணங்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள். காயம் வீங்கியபிறகு அவற்றை அகற்றுவது சிரமம் தரும்.
பட்டாசு காயம் கண்ணில் பட்டால்...?
*சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, கண்களைத் திறந்தபடி குறைந்தது 15 நிமிடங்கள் காட்டவும்.

*அல்லது ஓர் அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் பாதிப்புக்குள்ளான கண்களை மட்டும் நனைத்தபடி, கண்களைத் திறந்து திறந்து மூடவும். இதையும் சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.

*மேலே சொன்ன இரண்டு முறைகளையும் செய்ய வழியில்லை என்றால், பாதிக்கப்பட்ட நபரைப் படுக்க வைத்து, கண்ணை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொள்ளவும். பின்பு, பாதிப்புக்குள்ளான கண்ணின் இமைகளை மட்டும் மெதுவாகப் பிரித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, விழியின்மேல் ஊற்றிக் கழுவவும்  

 தொடர்ந்து 15 நிமிடங் களுக்கு இவ்வாறு கண்களைக் கழுவ வேண்டும்.

*காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் உடனே அகற்றிவிடவும்.
*சுத்தமான பஞ்சு மற்றும் பாண்டேஜ் பயன்படுத்தி கண்ணுக்குக் கட்டுப் போடவும்.
*பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

உடலில் தீப்பிடித்துவிட்டால்...?

உடலில் தீப்பிடித்தவரை ஒரு கனத்த போர்வையால் அல்லது கம்பளியால் போர்த்தி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். இதனால் தீ அணைந்துவிடும். அதன் பின்னர், போர்வையை அகற்றி விட்டு, மேலாடைகள், உள்ளாடைகள், பெல்ட் போன்றவற்றையும் அகற்றுங்கள். தண்ணீரில் நனைத்த துணியால் காயங்களைத் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஒற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்துக்கு அவரை அப்புறப்படுத்துங்கள். சுழல்காற்றாடிகளால் அவருடைய வெப்பத்தைத் தணிக்க முயலுங்கள். பிறகு, ஏற்கெனவே சொன்னதுபோல், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவ வேண்டும். காலதாமதம் செய்யாமல் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்புக்கு 10 வழிகள்!
*பட்டாசுகளை வாங்கும்போது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே வாங்குங்கள். தனித்தனியாகப் பிரித்து குவித்து வைத்துள்ளவற்றை வாங்க வேண்டாம். அவை பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.

* வீட்டுக்குள் மற்றும் தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*வீட்டு மாடி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களில் பட்டாசு வெடிப்பது நல்லது.

*டெர்லின், நைலான், பாலிஸ்டர், பட்டு போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.

*பருத்தி ஆடைகளைத் தளர்வாக அணிந்துகொண்டு பட்டாசு வெடியுங்கள்.

*கம்பி மத்தாப்பு தவிர வேறு எந்தப் பட்டாசையும் கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்காதீர்கள். தரையில் வைத்துத் திரியைப் பற்ற வையுங்கள். முகத்தை வெடிக்கு நேராக வைத்துக் கொண்டு கொளுத்தாதீர்கள். பக்கவாட்டில் நின்று கொண்டு திரியைக் கொளுத்துங்கள். தீப்பொறி பட்டாசில் பற்றிக்கொண்டதும் பின்நோக்கி நகர்ந்து கொள்ளுங்கள்.

*பட்டாசுத் திரியில் தீப்பற்றியதும் அது வெடிக்கவில்லை என்றால் அதன் அருகில் சென்று ‘என்ன ஆயிற்று?’ என்று பார்க்காதீர்கள். அருகில் சென்றதும், திடீரென்று அது வெடித்துவிடலாம். மாறாக, அந்தப் பட்டாசின் மீது தண்ணீரை ஊற்றிவிடுங்கள்.

*சட்டைப்பையில் வெடிகளை வைத்துக்கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.
*பட்டாசுகளை வெடிக்கும்போது ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

*குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோர் மேற்பார்வையில் மட்டுமே அவர்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்க வேண்டும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment