Sunday 15 April 2007

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!


இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்தான். இந்த உலக மக்கள் யாவரும் ஒரே தாய் தந்தையிலிருந்தே பிறந்து பல்கிப் பெருகியவர்கள் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஒத்துக் கொள்கின்றன. இதை நான் முன்பே பல பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன். சமீபத்தில் இந்த ஓரிறைக் கொள்கையை மேலும் வலுவாக்கும் விதமாக இந்து மத வேதங்கள் கூறக் கூடிய கருத்துக்கள் சிலவற்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறியிருக்க நம் நாட்டில் ஊருக்கு ஒரு இறைவனை ஏன் நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். இது எப்பொழுது ஆரம்பமானது என்று எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதான் இல்லை. இனி வேதங்கள் கூறக் கூடிய ஓரிறைக் கொள்கையை பார்ப்போமா?

'ஒரே இறைவனையே வணங்குங்கள். தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' என்று அறிவுறுத்த ஒவ்வொரு சமுதாயத்திற்கும ஒரு தூதரை அனுப்பினோம்.' -குர்ஆன் 16 : 36

நம் எல்லோரையும் படைத்த இறைவன் பாரத நாட்டுக்கும் ஏன் நம் தமிழ் மொழிக்கும் தூதரை அனுப்பியதாக கூறுகிறான்.

இனி பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!

ஈசுவரா சர்வ புதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜீன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ புதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம் : கச்ச
ஸர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
(18 : 61 : 62)

எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும்.

யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)

தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்

நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.
-குர்ஆன் 2 : 186

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18

மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

மேற்கண்ட இந்து இஸ்லாமிய கிறித்தவ வேதங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்ல உலகம் முழுவதும் இன்று நாட்டுக்கு நாடு இறைவனின் உருவங்கள் வேறுபடுவதைப் பார்க்கிறோம். வழிபாட்டு முறைகளிலும் பெருத்த வித்தியாசங்கள். இவை எல்லாம் எதனால் ஏற்ப்பட்டது என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? மதங்களின் பெயரால் வயிறு வளர்த்த மத குருமார்கள் செய்த புரட்டுகளாலேயே இத்தகைய மாற்றங்களைப் பார்க்கிறோம்.

இன்று இந்தியாவில் உள்ள தர்காக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் இஸ்லாத்தின் சட்டங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். சமீபத்தில் என் தாத்தா ஹஜ்ஜீக்கு சென்றபோது மதீனாவும் சென்றுள்ளார். அங்கு முகமது நபியின் அடக்கத்தலத்திற்கு முன்பு கைகளை ஏந்தி பிரார்த்தித்திருக்கிறார். உடனே அங்கு நின்ற காவலர்கள் அவருடைய கைகளை பின்புறம் இருக்கும் பள்ளிவாசலின் பக்கம் திருப்பி 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறியுள்ளனர். இறைவன் நிலைக்கு முகமது நபியை உயர்த்திவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். முகமது நபியை விடவா இங்குள்ள நாகூர் தர்காவும், ஏர்வாடியும், அஜ்மீரும் பெருமை பெற்று விட்டன?

இது மனிதனின் இயல்பு. நாம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை அவர்களின் தகுதிக்கு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்துவதே நமது வழக்கமாகி விட்டது. அரசாங்க காண்ட்ராக்டுகள் தமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளை 'வாழும் தெய்வமே' என்று நாடு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறோம். இவை எல்லாம் நம்மை எங்கு கொண்டு சென்று விடும் என்று அறியாமல் செய்து வருகிறோம். பார்க்கப் போனால் போஸடரில் இருப்பவரை விட போஸ்டர் அடிப்பவர் நியாயவானாக வாழ்வதைப் பார்க்கிறோம்.

இறைவன் பெயரால் செய்யப்படும் மோசடிகளை கண்டித்து நாடு முழுக்க மிகப் பெரும் புரட்சியை உண்டாக்கிய பெரியாருக்கே இன்று சிலைகள் மாலைகள் என்று அமர்க்களப்படுத்துகிறோம். பெரியாரின் சிலையின் முன்னால் சென்று கும்பிடுவதாலோ, அச்சிலைக்கு மாலை இடுவதாலோ அந்த சிலை எதை உணர்ந்ததாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? அந்த பெரியார் சொன்ன கொள்கைகளை வாழ்வில் கடைபிடிப்பது தானே அந்த மனிதருக்கு செய்யும் மரியாதை? இனியாவது இதைப்படிக்கும் பகுத்தறிவாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்.

இந்து கிறித்தவ இஸ்லாமிய மார்க்கங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்லியிருக்க அதை விடுத்து நம் கற்பனைகளையெல்லாம இறைவனாக்காமல் வாழ்வோமாக!

வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1

கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)

தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)

யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)

மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103

வானங்களையும் புமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், புமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,புமிக்கும் இடையே வசப்படுத்தப் பட்டுள்ளமேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
-குர்ஆன் 2 : 164

No comments:

Post a Comment