Saturday 22 March 2008

இயற்கை நிறைந்த ஏலகிரி மலை (Yelagiri)-ஒரு பார்வை ...

அதென்னங்க... கோடை விடுமுறை விட்டாலே கொடைக்கானல், ஊட்டினு கிளம்பிடுறீங்க... அதே மாதிரி சகல இயற்கை சந்தோஷங்களும் நிறைந்த ஏலகிரி மலைப்பக்கமும் கொஞ்சம் வாங்க...


வேலூர் மாவட்டம் வேலூரில் இருந்து 91 கிலோ மீட்டர் தூரம் திருப்பத்தூர் ரோட்டில் பொன்னேரி கிராமம் வழியாக ஏலகிரி மலைக்கு போகலாம். 14 அழகான, ஆபத்தில்லாத கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் வருவதுதான் ஏலகிரி மலை. மலைப்பாதையில் போகும்போதே இதமான காற்றும், பசுமையான இயற்கை காட்சியும் மனதிற்கும் பரவசத்தை ஏற்படுத்திவிடும். கிட்டதட்ட 30 சதுரகிலோமீட்டர் பரப்பளவில், கடல் மட்டத்தில் இருந்து 1048 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ஏலகிரி மலை வேலூர் அருகே இருக்கிறது. சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே இடது புறம் திரும்பினால் 25 கி.மீ தொலைவில் ஏலகிரி கூட்ரோடு. அங்கே இருந்து 13 கிமீ மலைப்பயணம். மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல ஏலகிரி மலைச்சாலை கடினமானதில்லை. நாமே எளிதில் ஓட்டிச் செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 1410 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரியை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள். 


பழங்குடியின மக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் விவசாயம் பார்த்துக்கொண்டு இந்த ஊரில் உள்ளனர். எப்போதும் இதமான, இனிமையான சீதோஷ்ணம் நிலவுகிறது, இப்போது கீழே அடிக்கும் வெயிலுக்கு இதமாக மேலே குளுமை நிலவுகிறது. சின்ன ஏரியா என்றாலும் வரக்கூடிய மக்களை மகிழ்விக்க தேவையான வசதிகளை பார்த்து, பார்த்து செய்துள்ளனர். தமிழகத்திலேயே இங்குதான் "பாரா கிளைடிங்' எனப்படும் பாரசூட்டில் பறக்கும் பயிற்சி வழங்குகின்றனர்.

அதனாவூர் ஏரியில் படகு சவாரி உண்டு. அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. இன்னும் அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் உண்டு. தங்குவதற்கு பதினைந்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் கழுகு பார்வையில் பார்த்து மகிழலாம்.




பூங்கானூர் ஏரி:
இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 56.7 சதுர மீட்டர். இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம்.  ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன.

Lake

Park
மூலிகை மற்றும் பழ பண்ணைகள்:
பூங்கானூர் ஏரியின் அருகே இந்த அரசு மூலிகை பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சித்த மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கிடைக்கும். மேலும் ஏலகிரியில் உள்ள அரசு பழ பண்ணையில் மலை பழங்கள் கிடைக்கும்.


வேலவன் கோவில்:
இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக விளங்குவபவர் முருகன். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இங்கு மிகப்பெரிய கடோத்கஜன் சிலையும் உள்ளது. மேலும் இங்கிருந்து ஏலகிரியின் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம். இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும். 
Velavan Temple
 தொலைநோக்கி இல்லம்:
லகிரி செல்லும் வழியில் காட் ரோட்டில் அமைந்துள்ளது இந்த தொலைநோக்கி இல்லம்.  ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரியின் அழகை இங்கிருந்து காணலாம்.


ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி:
ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 30 மீ.  இந்த அருவிக்கு நேர்வழி இருந்தாலும் பலநேரங்களில் அந்த வழி மூடியே இருப்பதால், நிலவூர் கிராமத்தில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் ஒரு கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய கடவுளாக முருகப்பெருமானை வழிபடுகின்றனர். 


மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.





வைனு பொப்பு வானிலை ஆய்வுக்கூடம்:(Vainu poppu solar observatory)
ஏலகிரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆய்வுக்கூடம். இந்த மிகப்பெரிய ஆய்வுக்கூடம் கவலூர் என்னும் இடத்தில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடத்தை சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை காணலாம். 


விழாக்கள் கோடை காலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழா நடத்தப்படும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஏலகிரி மலையில் விஷயங்கள் உண்டு. மிக முக்கியமாக உங்க பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய பயணமாக இருக்கும். ஒரு முறை வந்துதான் பாருங்களேன்.


Collection By : M.Ajmal khan

    No comments:

    Post a Comment