Monday 12 April 2010

கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு





கஜுராஹோ என்றவுடன் எல்லாருக்கும் அந்த அதீத உடலுறவுச் சிற்பங்களே ஞாபகத்துக்கு வரும். ஆனால் இங்கு வந்து பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சிற்பங்கள் பேசும் வார்த்தைகள் புரியும். போருக்குச் செல்லும் வீரர்கள் கூட்டம், யானைப் படையின் அணிவரிசை, உள்ளங்கையில் தன் முகம் பார்த்து அலங்காரம் செய்யும் இந்திர லோகத்து சுந்தரிகள், விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்கள், சிவனின் தாண்டவ நர்த்தனங்கள், திமிறும் காளைகளை அடக்கியாளும் வீரர்கள், குளித்து முடித்து கூந்தலுலர்த்தும் அழகிகள், தனது நிர்வாணத்தை தானே ரசிக்கும் அதீத சுந்தரிகள், மனித உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர்பாலின தீண்டலால் கிளம்பும் காம இன்பத்தை மோகித்து அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் என உலகில் பிறந்த மாந்தர்கள் கண்ணில் படும் அனைத்து காட்சிகளையும் இந்த மணற்கற்களில் சிற்பங்களாக வடித்து விட்டான் ஒரு பெயர் தெரியா சிற்பி.










முதலில் இந்த சிற்பக் கோவில்களின் நகரம் உருவான கதை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், லாங் லாங் எகோ, (டேய், போதுண்டா, ஓவரா பில்டப் குடுக்காத) ஒருநாள், ஹேமவதி என்ற பிராமண சுந்தரி, இன்றைய புனித நகரமான வாரணாசியில் வசித்திருந்தாள். நிலாக்காயும் ஒரு இரவில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாளாம். சொக்க வைக்கும் அவள் மேனியழகில் கலங்கிப் போனது குளத்தின் தண்ணீர் மாத்திரமல்ல. அங்கு மௌன சாட்சியாய் நின்றிருந்த அனனத்து ஜீவ ராசிகளும்தான். தன் மேனியழகின் மீதிருந்த கர்வத்தாலோ, அல்லது தன் அழகை கண்டு தானே வியந்திருந்தததலோ என்னவோ, ஹேமவதிக்கு நிர்வாணம் என்பது ஒரு இன்பம் தரும் யோகநிலையாயிருந்தது. குளத்தின் நீளமும் அகலமும் அவளது பிறந்த மேனிக் கோலத்தில் திளைத்து பேச்சு மூச்சு அற்றுப் போயிருக்க, ஹேமவதியும் ஒரு மோன நிலையிலேயே தண்ணீரை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை வேறு இரு கண்களும் கண்டு ரசிப்பதையோ, அந்த கண்களுக்குரியவர் தன் மீது மையல் கொள்வதையோ அறியாத பேதையாய், குளத்தில் பூத்த மலர்களை மங்கை, குறும்புப் பார்வையால் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.





வானத்தில் வலம் வந்த நிலவரசன் கண்களில் காண்பது நிஜம்தானா அல்லது தேவ லோகத்து கன்னிகைகள் இங்கு பூமியில் நீராட வந்தனரோ என குழம்பிப் போய், சிறிது நேரம் தன் பயணத்தை நிறுத்தி நின்ற இடத்திலிருந்தே பாவையின் அழகை பருகிக் கொண்டிருந்தான். பருகப் பருக, ரசனை காதலாகி, காதல் கலவியில் முடிந்தது. அன்று மாத்திரம் வான ஆராய்ச்சியாளர்கள் சரியாய் குறிப்பெடுத்திருந்தால், ஒரு நாள் இரவில் பௌர்ணமி தினத்தன்று ஒளிவீச வேண்டிய வட்ட நிலவு, வானத்தின் வீதிகளில் இல்லாமல் காணாமல் போயிற்று என எழுதி வைத்திருப்பார்கள். ஆம், அன்று இரவு முழுவதும் தன் பணியினை மறந்து, தன் மேன்மையை துறந்து, நிலவு, பூமியில் வாழும் ஒரு பெண்ணோடு மோகித்திருந்தது.

நிலவினைக் கண்டதும் பாவையும் மயங்க, அந்தக் குளம் இவர்கள் இருவரின் காமத்தைத் தீர்க்க தண்ணீராலே படுக்கை கட்டியது. குளத்தில் பூத்த மலர்களெல்லாம் சுகந்தம் வீச, சுற்றி நின்ற மரங்களெல்லாம் திரைகளாக, இருபது விரல்கள் தாளமிட, இரண்டே இரண்டு பேர் இணைந்து நடிக்க, அந்த கந்தர்வ நாடகம் களிப்புடன் அரங்கேறியது.

பிறகென்ன, நாடகம் முடிந்ததும், வான வீதியில் என்னைத் தேடுவார்களே, சாரதியில்லாமல் ரதம் தடுமாறும் எனச் சொல்லி நிலவரசன் சடுதியில் மறைந்தான். நிலவு பறந்து விட, பாவைக்கு பசலை நோய் கண்டது. நாட்கள் கடந்தது, பழுத்த பலாப்பழமும், இனித்த காமப் பொழுதும் எப்பொழுதும் ரகசியம் காத்ததில்லை. ஆம், ஹேமவதியின் கருவறைக்குள் புதிதாய் ஒருவன் புகுந்து கொண்டான். புதிய வரவு பூரிப்பை தந்தாலும், இந்த வரவுக்கு முகவரி தரும்படி நிலவினை வேண்டினாள் ஹேமவதி.

நிலவிடமிருந்து கட்டளை வந்தது, என் உயிரின் உயிரே, உலகம் தெரிய உன்னைக் கைபிடிக்கவில்லை நான், நமக்கு நாமே மாலை சூடினோம், நட்சத்திரங்களை சாட்சிக்கழைத்தோம், மரங்கள் கூடி அட்சதை தூவ, பட்சிகள் அனைத்தும் மந்திரம் ஓத, கண்களினாலே சம்மதம் சொல்லி கலந்திருந்தோம், நாம் இணைந்திருந்தோம், ஒருவருக்கொருவர் இனித்திருந்தோம். இனி நான் சொல்வதைக் கேள். உன்னிலிருப்பவன் வாளால் உலகை ஆள உதித்தவனல்ல. அவன் கலையால் ஆளப் போகிறவன். அவன் ரத்தம் சிந்தி வெற்றி காண மாட்டான். ஆனால், மொட்டைக் கற்களுக்கு உளியால் உயிர் கொடுத்து பிறர் மனம் வெல்வான். ஆகவே இந்த வாரணாசி என்னும் தேவர்களின் நகரத்தில் அவன் பிறக்க வேண்டாம். அவனை சோலைவனங்களில் பிறக்க வை. மலையும், மரங்களும் அவனுக்கு வீடாகட்டும். இப்பொழுதே கிளம்பி, சூரியன் உதிக்கும் திசைக்கு எதிரே செல். பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த சோலையை காண்பாய். அங்கே என் மகன் பிறக்கட்டும். (பேரீச்சம் பழம் = கஜூர் (ஹிந்தியில்), கஜுராஹோவின் பெயர் காரணம்).

தலைவனின் பேச்சுக்கு மறு பேச்சேது. ஹேமவதி புறப்பட்டாள். வயிற்றில் புரண்ட நிலவின் வித்து, தரையை கண்டதும் சந்திர வர்மன் எனப் பெயர் கொண்டான். இன்றைய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் வலிமை கொண்ட ஆண்மகனாய் உருவெடுத்தான். தன் 16 வது வயதிலேயே, சிங்கத்தையும் புலியையும் வெறும் கரங்களால் கிழித்துப் போடும் கட்டிளம் காளையாய் வடிவெடுத்தான். அவனது கடின உழைப்பில் உருவானதுதான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தின் கோட்டையான “கலிஞ்சர்” கோட்டை. நிலவுதேவனின் கட்டளைப் படி அவன் 85 கோவில்களையும் கட்டினான்.

No comments:

Post a Comment