Sunday 10 July 2011

நேர்மையில்லாத தங்க வியாபாரம்!! ஒரு பார்வை..



ங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது.
தங்கத்தைக் கொடுத்த உடனே அதற்குப் பதிலாக வேறு தங்கத்தை மாற்றிக் கொள்வது தவறல்ல. தங்கத்தைக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தைப் பெறுவதையே மார்க்கம் தடைசெய்கின்றது.

நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன்.  தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள்.  அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள்.  பிறகுஃகாபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது! என்றார்கள்.  இதை உமர் (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள்தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்;உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும் ; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! என்று கூறியுள்ளார்கள்என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் பின் அவ்ஸ் (ரலி) நூல் : புகாரி (2174)
பழைய தங்கத்துக்கு புதிய தங்கம் மாற்றுதல் குறித்தும் தங்க வியாவாரம் குறித்தும் மேலும் சில செய்திகளை நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.
ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு சேதாரம் என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான்.ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர்.மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.
இரண்டாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.


நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஹராமாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.
ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.
இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை. இறையச்சமும் இல்லை. ஹராம் ஹலால் பற்றி கடுகளவும் கவலை இல்லை. தங்க நகை வியாபாரிகள் அல்லாஹ்விடம் குற்றவளிகளாக நிற்கக் கூடாது என்பதற்காகவும் அவர்களின் வருமானம் ஹராமாக ஆகி அதனால் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் தகுதியை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இதை நாம் சொல்லியாக வேண்டியுள்ளது. விளம்பரங்கள் நின்று விடும் என்று அஞ்சி அவர்கள் பாவிகளாவதை நாம் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.


அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment