Thursday 19 November 2020

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன?

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள். 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.
அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை
கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.
அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.
காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக வலுவடைகிறது.
காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் மிகத் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்
காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அதி தீவிர புயல்.
புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7ம் எண் கூண்டு: துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை
8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்
9ம் எண் கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11ம் எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம்.

தொகுப்பு : T.Raja (Admin Tamilnadu weather Blog)

No comments:

Post a Comment