Saturday 20 June 2020

தந்தையர் தினம் ஏன் கொண்டாட வேண்டும் ?

 நமது தந்தை தான் நம்மில் பலருக்கும் முதல் ஹீரோ . பல சூழ்நிலைகளில் அவரையே ரோல்மாடலாக பின்பற்றி நமது ஒவ்வொரு செயலும் அமைந்திருக்கும். குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அப்பாக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த தந்தையர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெற்றெடுப்பது தாயாக இருந்தாலும், குழந்தையை வளர்க்கும் கடமை தந்தைக்கு தான் கூடுதல் பொறுப்புகள் அமைந்துவிடுகின்றன. பெற்ற குழந்தையை பண்பில் சிறப்பாகவும், அறிவில் சான்றோர் மெச்சும்படியும் வளர்ப்ப்தில் தாயை விட தந்தைக்கு தான் அதிக பொறுப்புள்ளது.

வீட்டுக்கான கடமையை தாய் கற்றுத் தருகிறார். எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்குமான கடமையை தந்தையின் வழிநின்றே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலேயே தந்தைக்கு கூடுதல் பொறுப்பு கூடிவிடுகிறது.

அதனால் தான் நமது இலக்கியங்களில் தாயிக்கு இணையாக தந்தையும் போற்றப்படுகிறார். அந்த போற்றுதல் இன்றைய நவீன உலகிலும் தொடர்வதை நாம் பார்க்க முடியும். கதைகளின் வாயிலாக, ஒரு கலைப்படைப்பின் வாயிலாக, திரைப்படங்கள் வாயிலாக என தந்தையின் அன்பு என்றும் போற்றப்பட்டு வருகிறது.

தந்தையர் தினம் ஏன் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் கேட்பீர்களானால்... ஆம் கொண்டாடப்பட வேண்டும் என்பதே பதில். அண்மைச்சூழலில், பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. தாயை விட தந்தையை கைவிடும் பிள்ளைகள் இந்திய சமூகத்தில் பெருகிவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற ஒரு கட்டமைப்பில், நம்முடைய தமிழ் சமூகம் தந்தையர் தினத்தை எவ்வாறு அணுகுகிறது என்பது மிக முக்கியம். தந்தையை கொண்டாடுங்கள், கேக் வெட்டி உங்கள் அப்பாவை புத்துணர்ச்சிச் செய்யுங்கள், உடைகள் எடுத்து தாருங்கள், நகைகளை பரிசளியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, அன்றைய நாளில் தந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள்.

அவருக்கு பிடித்த உணவுகளை தெரிந்து வைத்திருந்தால், வீட்டில் சமைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஆண் பிள்ளைகளுக்கு தந்தையோடு விரோதம் ஏற்பட்டிருந்தால், அவற்றை மறக்க முயற்சியுங்கள். தந்தையை நீங்கள் இழந்திருந்தால், அவருடைய நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி வாருங்கள். இவையே தமிழ் சமூகத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான சான்று.

ஃபேஸ்புக்கில் தந்தையர் தினத்திற்கான அன்பை பகிர்வது சுற்றுத்திற்கு தெரிந்தாலும், அதை உங்கள் அப்பா உணர்ந்துக் கொள்வாரா என்பது சந்தேகமே. அதனால் முடிந்தவரையில் வரும் ஜூன் 16ம் தேதி தந்தையோடு இணக்கமாக இருங்கள். அன்று தான் இந்தாண்டுக்கான தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment