Wednesday 11 June 2008

சிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய சிறப்பு பார்வை..

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

தாய்-தந்தையர் 
இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்குஅருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1730ஆம் ஆண்டுஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். 


இளமை பருவம்..
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார்.  

திருமண வாழ்க்கை 
 1746ல் சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.


மன்னர் மரணம்..
இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர்.மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.
கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்துபிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச் சென்றார். 


ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம்..
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

படை திரட்டல்..
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. 
சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. 
இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.
விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.
அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

இறுதி நாட்கள்
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 
1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். 
முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது.பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில்  டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்

இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.




சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்..
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 – 1831 – உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 – 1841 – மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 – 1848 – போ. உடையணத்தேவர்
9. 1848 – 1863 – மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 – 1877 – ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 – முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 – 1883 – துரைசிங்கராஜா
13. 1883 – 1898 – து. உடையணராஜா
14. 1898 – 1941 – தி. துரைசிங்கராஜா
15. 1941 – 1963 – து. சண்முகராஜா
16. 1963 – 1985 – து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
17. 1986 – முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார். 

முடிவுரை :

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.


ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் 

No comments:

Post a Comment