Thursday 13 August 2009

மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் எப்போது ?

Image result for 4 way road in tamilnadu மதுரையில் போக்குவரத்துநெரிசலை குறைக்கும் வகையில், ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. சட்டசபை தேர்தல் நடப்பதற்குள் இப்பணிகளை துவக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மதுரை உத்தங்குடி - கப்பலூர் இடையே 27 கி.மீ., தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்பட்டும், நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. இதை தவிர்க்க, 133 கி.மீ., தூரத்திற்கு புது ரிங் ரோடு அமைக்கும் திட்டம் அரசுக்கு அனுப்பி ஓராண்டாகியும் இன்னும் கிடப்பில் உள்ளது. இதற்கிடையே இருவழிச்சாலையாக (12 மீ.) உள்ள ரிங் ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்ற முன்பே, 30 மீ., அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டது. நான்குவழிச்சாலையாக மாற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தும், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. நில ஆர்ஜித பணிகளால் உத்தங்குடி - சமயநல்லூர் இடையே, 21 கி.மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கும் திட்டம் பத்து ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. 

இதற்கிடையே மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடியில் விரிவு படுத்தும் பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இதில், அழகப்பன்நகர், டி.வி.எஸ்.நகர், ஜீவாநகர், முத்துப்பட்டி வழியாகவும் விமான நிலையத்திற்கு (9.70 கி.மீ.,) புதிய பாதை அமைக்கும் திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இப்பாதை அமையும் பட்சத்தில், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் குறையும்.

மூன்றுமாவடி, அய்யர்பங்களா, ஆனையூர், அலங்காநல்லூர் ரோடுகளை 9.50 கி.மீ.,க்கு விரிவுப்படுத்தும் பணியும், 5.20 கி.மீ., தூரத்திற்கு நிலையூர், பெருங்குடி, விமான நிலைய ரோடு விரிவுப்படுத்தும் பணியும் கிடப்பில் கிடக்கின்றன.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பின்புறத்தில் 2 கி.மீ.,க்கு அண்ணா நகர் 80 அடி ரோடு, ரிங் ரோடு இணைக்கும் பணியும், 2.10 கி.மீ.,க்கு திருநகர், தென்பழஞ்சி ரோட்டை விரிவுப்படுத்தும் பணியும் முடங்கி கிடக்கின்றன. ஐந்து கி.மீ., தூரம் உடைய புதுக்குளம், மாடக்குளம் ரோடு மற்றும் மேலக்கால் ரோடு வளர்ச்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டங்கள், பல ஆண்டுகளாக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், இப்போதே இதற்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்..

மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அடுத்த வாரம் கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையிலான குழு டில்லி செல்கிறது. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், புதிய ரிங் ரோடு மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி எதிர்புறத்திலிருந்து அழகர்கோவில் ரோடு, கடச்சனேந்தல் பாலம், ஜெயவிலாஸ் கார்டன், ஊமச்சிக்குளம் வடபுறம் ஒரு கி.மீ., வழியாக அலங்காநல்லூர், சமயநல்லூர் மேம்பாலம் வழியாக அமையும்.



தொகுப்பு : அ . தையுப அஜ்மல்.

No comments:

Post a Comment