Wednesday 25 July 2012

நோன்பின் சட்டங்கள்,ஒழுக்கங்கள்,பயன்கள்-ஒரு சிறப்பு பார்வை...

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். 

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும். 

தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம். 

பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.ர மழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது.



நோன்பை முறிக்கக்கூடியவை

மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்ற வேண்டும். அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.

சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல்

உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.

உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)

மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.)

வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)

நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை




நோன்பின் பயன்கள்
நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.
உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.
உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படும்.
நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.
உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.
இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது.
தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.
இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள்.
நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன.
நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது.
நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.
நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment