Monday 15 April 2013

சிறுவர்கள் சீரழிந்து வருவதற்கு முதல் காரணம் செல்போன் !! ஒரு அதிர்ச்சி தவகல்...




சிறுவர்கள் சீரழிந்து வருவதற்கு பல்வேறு கரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக, அற்புதமான அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஒன்றான செல் போன் திகழ்கிறது என்று சொல்லலாம்.அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றை,நன்மையான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தீய விஷயங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் ஒரு மாணவனிடம் இருந்த கைப்பேசியைச் சோதித்தபோது அதில் ஆபாசப் படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பிறகு அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளனர்.செல் போனில் சிக்கி சிறுவர்கள் சீரழிந்து சின்னாபின்னாமாகி வருவதற்கு பலசம்பவங்களில் இந்த உண்மை சம்பவம் ஒன்றும் சான்றாக உள்ளது.

அறிவியல் ஆட்சி செய்யும் இன்றைய நவநாகரிக உலகில் செல்போன் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும் , இளைய சமுதாயத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை எண்ணும்போது அறிவியலின் வளர்ச்சியால் எதிர்காலச் சந்ததியினர் பாதிக்கப்படுவார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

நேரத்தை வீணடித்தல் :

பெரும்பாலான மாணவர்கள் கூட்டாக அமர்ந்துகொண்டு செல்போனில் உள்ள நடிகர் - நடிகைகளின் படங்களைப் பார்த்து ரசிப்பது, விடியோ கேம்ஸ் விளையாடுவது என தங்களது பொன்னான நேரத்தை மட்டுமல்லாது, எதிர்காலத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய காலத்தில் சிறுவர்களின் விளையாட்டு என்பது ஒரே இடத்தில் உட்க்கார்ந்து விளையாடும் விளையாட்டாக இல்லாமல் ஓடி ஆடி விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்தது.தாங்கள் விளையாடும் விளையாட்டுக்கு வித விதமான பெயர்களை சூட்டி சிறுவர்கள் மகிழ்ந்தனர்.[கோலாட்டம், கொரங்காட்டம்] அது அவர்களுக்கு உடற்ப்பயிர்ச்சியாகவும் , அருமையான பொழுபோக்கு அம்சமாகவும் அமைந்தது.அது மாத்திரமில்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்று வளமாகவும் வளர்ந்தனர்.இப்படிப்பட்ட அற்ப்புதமான விளையாட்டுகள் எல்லாம் இன்றைய நவீன உலகில் மறைந்தே போயின.மாறாக ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி பொழுதுகளை கழிக்கும் படியான கருவிகள்,சாதனங்கள் வியாபித்துவிட்டன.அந்த வகையில் தனது பொழுது போக்கை போக்கும் கருவியாக செல்போனை பயன்படுத்துக்ன்றனர் சிறுவர்கள்.இதனால் சிறுவர்களின் பொழுது மட்டுமல்ல எதிர்காலமும் போய்விடும் என்பது தான் உச்சகட்ட உண்மை.

குறுந்தகவல்களை அனுப்பி மகிழ்தல் :

அதுபோல புத்தகங்களைத் தேட வேண்டிய வயதில்[ஆபாச] குறுந்தகவல்களைஅனுப்பி மகிழ்கின்றனர்.நண்பர்களோடு அதிலும் குறிப்பாக, எதிர்பாலரோடு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதில் பெற்றோரின் பணத்தையும், அவர்களது நம்பிக்கையையும் வீணடிக்கிறார்கள். விடியோ செல்போன் மூலம் மாணவிகளை ஆபாசமாகப் படம் எடுப்பதும், அதை நண்பர்களோடு பார்த்துமகிழ்வதும் போன்ற நாளேட்டுச் செய்திகள் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன. போதைப் பொருள்களுக்கு அடிமையாவதற்கும், பல்வேறு குற்றச்செயல்பாடுகளுக்குத் துணைபோவதற்கும் செல்போன்கள் இன்றைய இளைஞர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது என்றால் நாளைய இந்தியா என்னவாகும்?

தடை இருந்தும் தடுக்க முடிவதில்லை : 

பள்ளிகளில் செல்போன் உபயோகிக்கத் தடை உள்ளபோதிலும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளி வளாகத்திலும், டியூஷன் என்ற பெயரில் மாணவர்கள் சங்கமிக்கும் இடங்களிலும் இதுபோன்ற செயல்களால் ஆட்டிவைக்கப்படுகிறார்கள். கிராமப்புற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்டுகொள்ளாததற்கு அறியாமையும் ஒரு காரணமாகும். இந்தக் கொடுமையிலிருந்து இளையோரை மீட்க பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அவர்களை கண்காணிக்க வேண்டிய கடமை உள்ளது.

விடியோவசதி இல்லாத ,மெமரிகார்டு இல்லாத :

செல்போன் அவசியம் எனக் கருதும் பெற்றோர்கள் குறைந்தபட்சம் விடியோவசதி இல்லாத, மெமரிகார்டு இல்லாத எளிமையான சாதனத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். இன்னும் ஒருபடி மேலேபோய் "இன்கம்மிங்' வசதி மட்டும் உள்ளவாறு பார்த்துக்கொள்ளலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக, வேண்டிய நபராக ஏற்றுக்கொள்ளும்படி நடந்துகொள்ள வேண்டும். அதிகமான நேரம் அவர்களோடு கலந்துரையாடி ஊக்கப்படுத்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும். சமூகத்தில் பிரிக்கமுடியாத அங்கமாகிப் போன செல்போனை உபயோகிப்பது குறித்து நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் செல்போன் என்ற ஒருபொருள் விலைமதிக்க முடியாத இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.
இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.
அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.
ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.
குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.
தொகுப்பு : மு.அஜ்மல்ம் கான்.

No comments:

Post a Comment