Friday 5 August 2016

பிரேசில் நாட்டில் 31-வது ஒலிம்பிக் திருவிழா !!

ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.
தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது யார் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தீபத்தை ஏற்றும் கவுரவத்தை வழங்க போட்டி அமைப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் தனது பெயரை பயன்படுத்தும் முழு உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு வழங்கியுள்ள பீலே, அந்த நிறுவனம் அனுமதித்தால் நிச்சயம் தீபத்தை ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். என்றாலும் அவர் தான் தீபத்தை கடைசியாக ஏந்தி வந்து ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் அணிகளின் அணிவகுப்பாகும். 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக அணி வகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்குகிறார். அவர் நமது தேசிய கொடியை ஏந்தி செல்வார்.
ஒலிம்பிக் தாயகமான கிரீஸ், அணிவகுப்பில் முதல் நாடாக செல்லும். அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி ஒவ்வொரு அணியாக வீறுநடை போடும். இந்த பட்டியலில் இந்தியா 95-வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கலந்து கொள்ளும் 10 பேர் கொண்ட அகதிகள் அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் வலம் வரும். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசி நாடாக செல்லும். அதற்கு முன்பாக அகதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டு களிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று தெரிகிறது.
பிரேசில் நேரப்படி தொடக்க விழா இரவு 8 மணிக்கு தொடங்கினாலும், நமக்கும் அவர்களுக்கும் இடையே 81/2 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி பார்த்தால் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தான் தொடங்கும். தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் கொண்டாட்டத்தில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் வழக்கம் போல் அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி இருக்கும். அமெரிக்கா 292 பெண்கள் உள்பட 554 பேருடனும், சீனா 413 பேருடனும் ரியோவுக்கு படையெடுத்துள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி 465 பேரை களம் இறக்குகிறது.
இந்த முறை இந்தியா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் கிடைத்தன.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையில் இந்தியா செஞ்சுரி அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரட்டை இலக்கு பதக்க எண்ணிக்கையை தொடுவதே இந்தியாவின் லட்சியமாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஆக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டியையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment