Wednesday 7 August 2019

ஜம்மு-காஷ்மீர் பற்றி அவசியம் படியுங்கள் ! தெளியுங்கள் ! நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் !!!


Image may contain: one or more people, table and indoor

1952 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்துடன், இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைந்த அந்த மகத்தான தருணத்தில், தில்லியில், பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரத்து சிங்கம் எனப் போற்றப்படும் ஷேக் அப்துல்லா. (கோப்பு படம்)
மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது; அதை நீக்கியது சரியானது தான் என பாஜகவினரும் அவர்களது அடிவருடிகளும், தினமலர் போன்ற ஊதுகுழல் ஏடுகளும், அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளும் பேசுகின்றன. ஆதரித்துள்ளன. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலுக்கு சிறப்பு அந்தஸ்தும், அதை வழங்கும் 370வது பிரிவும் தான் காரணம் என்றும், அதை நீக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் கண்மூடித்தனமாக இவர்கள் வாதிடுகின்றார்கள். காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் பாஜகவின் வாதம் சரிதானே என்று கூட எண்ணக்கூடும்.தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது.
நாடு விடுதலைபெற்ற போது...
இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோ டும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன.
1.ஜுனாகட் சமஸ்தானம்
2.ஹைதராபாத் சமஸ்தானம்
3.காஷ்மீர் சமஸ்தானம்
ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை. ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணுவத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார். இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13ல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து,நிஜாமின் இராணு வத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 - ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் ஹைதராபாத் நிஜாம் கையெழுத்திட்டார். ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும் பான்மையாக இந்துமக்கள் வசிப்பவையாக இருந்தன. ஆனால் மன்னர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
காஷ்மீரின் வரலாறு என்ன?
காஷ்மீர் சமஸ்தானத்தில் 90 சதவீதம் முஸ்லிம் மக்கள். ஆனால் மன்னன் இந்து. டோக்ராவம்சத்தை சேர்ந்தவர் ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவல மானது. அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் ராணுவத்தில் அவரது சதி வேலைகளுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப்பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணை போனார். பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர் கள், இழப்பீட்டுத்தொகையாக சீக்கியர்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு விட்டுத்தர வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர். 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்த தால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்ட்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார். ஹரிசிங் அதற்கு சம்மதிக்கவில்லை. மறுபக்கம், ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங்கோலாட்சிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சி
1924- முதலே தீவிரமடைந்திருந்த மக்கள் போராட்ட த்தில்,1931ல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939ல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளை யருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடிய நிலையில், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் என்ற அமைப்பு செயல்பட்டது. பிரஜாபரிஷத் என்பது வேறு எதுவுமல்ல; ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் அந்தப் பெயரில்தான் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் இடையே ஆயுதப்போரை மூட்டி விட்டார்கள். வெள்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறோம் என்ற கோஷத்துடன் நுழைந்த அவர்கள் முசாபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர். அக்டோபர் 26ல் பட்டாணியர்கள் படை காஷ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கியது. அதை எதிர்கொள்வதற்கு பதிலாக மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
மாறாக, ஸ்ரீநகரை பட்டாணியர் படை கைப்பற்றாமல் தடுக்க காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சித் தலைமையும் இந்திய இராணுவ உதவியை நாடினர். படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் எனக் கூறினார். இந்த நெருக்கடிக்குப்பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்ப மிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார். இந்திய அரசு அக்டோபர் 27 அன்று ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப்பிரிவு படையுடன், பாகிஸ்தானின் ராணுவமும் நுழைந்து, இந்திய ராணுவத்துடன் மோதியது. இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணு வத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவன்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவன். ஊடுருவல் படைகளை காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஷ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா. மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி “ஆசாத்காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம். இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத் காஷ்மீர்தான்.
பிரிட்டிஷ் - அமெரிக்க சூழ்ச்சிகள்
காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டது. ஐ.நா.சபை கமிஷன் ஒன்றை அமைத்தது. அமெரிக்காவும் - இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948ல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக்கட்சியும் நிராகரித்தன. இந்தியா, ஐ.நா. மூலமாக ஏவப்படும் அமெரிக்க சதியை நிராகரித்தபின்பு, 1950 மார்ச் 14ல் ஐ.நா பாது காப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;
1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
2.காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும். இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.
ஷேக் அப்துல்லா உறுதி
காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல்காரணம் ஷேக் அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக்கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது: “இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கைகளும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கைகளுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்”-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 1948 அக்டோபர் - 16). இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக் அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரண்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆகவும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த அன்றைய பிரதமர் நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார்.
370வது பிரிவு ஏன் வந்தது?
ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக்கூட்டம் 1951 நவம்பர் 5 ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை உருவாக்குவது.
2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
3. நிலச்சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது. இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் - நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952ல் நேரு – ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.
காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு – ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:
1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங்களைப்போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்களின் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம்தான் தீர்மானிக்கும்.
3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்கமுடியாது.இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவு
370வது பிரிவின் படுகொலை
இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர் மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே, இன்றைக்கு மோடி அரசால் ரத்து செய்யப் பட்டுள்ள 370 வது ஷரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப்பட்டது.
1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
2.ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளை காஷ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958ல் கொண்டுவரப்பட்டது.
3. மாநில அரசைக் கலைக்கும் 356,357 வது பிரிவுகள் அங்கும் பொருந்தும் என்ற நிலை 1964ல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.படிப்படியாக அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பின்னணியில்தான், 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. மேற்படி பிரிவு 370ன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுவிட்டது.
370வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்தது மூன்று விசயங்கள்தான்.
1. காஷ்மீருக்கான அரசியல் சட்ட விதிகள்.
2. காஷ்மீருக்கான தனிக்கொடி
3. வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை.
மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கூப்பாடு போட்டது காவிக்கூட்டம். இந்தியாவுடன் இணையும்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித் தவிக்கிறது. எனவே காஷ்மீர் மக்களின் பக்கம் நிற்க வேண்டியது ஒட்டு மொத்த இந்திய மக்களின் கடமை.
நன்றி : சூர்யா சேவியர்,தீக்கதிர் , 6 /08/2019.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment