Friday, 4 April 2014

வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விழிபுணர்வு கட்டுரை ...

ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பலர் யாரோ வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏற நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாளில் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் வாக்களிப்பது என்பது குறைந்து வருகிறது.ஓட்டு என்பது வெறும் விரல் மை அல்ல; அது ஒரு பெருவெள்ளத்தின் சிறுதுளி.
உங்கள் ஓட்டு தான் உங்கள் தொகுதியின் எம்பியை, அடுத்த மத்திய அரசைத் தீர்மானிக்கப் போகிறது. ஆனால் வாக்களிக்கும் அந்த பெரும் உரிமையை நாம் சம்மந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து, அதன் பின் தர்க்கப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சிந்தித்துப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே. அதைச்செய்ய ஒரு சிறிய வழிகாட்டியாகவே இக்கட்டுரையை எழுத விழைந்தேன்.
வரும் 24 ஏப்ரல் 2014 அன்று தமிழம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு குடிமகனாக நீங்கள் இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும், உங்கள் வாக்கு யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு என்று முடிவு செய்யும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதே இதன் நோக்கம் மற்றும் எல்லை.
அதாவது யாரை ஆதரிக்க வேண்டும் என்று இது சொல்லித் தரப் போவதில்லை. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் விவாதப் பொருள்.
முதலில் இது என்ன தேர்தல்? லோக்சபா தேர்தல். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல். இதன் பிரதான நோக்கங்கள் இரண்டு. ஒன்று உங்கள் மக்களவைத் தொகுதிக்கு எம்பியைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது அப்படி இந்தியா முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பெரும்பாம்பான்மையினர் முடிவுப்படி ஓர் அரசையும், அமைச்சர்களையும், பிரதமரையும் தீர்மானிப்பது.
இதில் மக்களுக்கு நேரடியாய் வழங்கப்பட்டிருக்கும் உரிமை மக்களவைத் தொகுதிக்கான எம்பியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே. மற்றது மறைமுகம்.

தர்க்கப்படி தேர்தலை சந்திக்கும் எந்தக் கட்சியும் யார் பிரதமராகப் போகிறார் என்று அறிவிக்க வேண்டியதே இல்லை. கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்வைக்க வேண்டும், ஓட்டுக் கேட்கும் வேட்பாளர் மக்கள் நம்பிக்கைக்கு உரியவராய் இருக்க வேண்டும், அதுவே போதுமானது. சரியான (அல்லது அவரவர்க்கு உவப்பான) கொள்கை கொண்ட கட்சியை, தகுதியான வேட்பாளரை ஆதரித்தாலே திறமையான அரசு அமையும் என்பதுதான் நம்பிக்கை. நமது இந்திய அரசியல் சாசனம் இந்த bottom up approach-ஐத் தான் அறிவுறுத்துகிறது.
மாறாக தனி நபரை முன் வைப்பது சர்வாதிகாரத்துக்கே வழி வகுக்கும். மத்திய அரசு என்ற பிரம்மாண்ட எந்திரம் சரியாக ஓட அதன் அத்தனை எம்பிக்களும்தான் காரணமாய் இருக்க வேண்டுமே ஒழிய, ஒற்றை ஆசாமி மட்டும் பொறுப்பாக இருக்கலாகா. நாளை ஏதாவது காரணத்தால் அவர் அதைச் செய்ய முடியாமல் போனால் ஒட்டுமொத்த அமைப்பும் தோற்று நிற்கும். அதனால் நல்ல பிரதமரைத் தேர்ந்தெடுப்பதை விட நல்ல மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதே நீண்ட கால அடிப்படையில் அரசு செம்மையாகச் செயல்பட வழிவகுக்கும்.
இது தான் ஜனநாயகத்தின் அடிப்படை விதி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இந்தியா எப்போதும் சித்தாந்தங்களின் வலிமையை விட முகங்களின் வசீகரத்தையே நம்பி வந்திருக்கிறது. மக்களுக்கு அஹிம்சையை விட காந்தியே முக்கியம். சோஸியலிசத்தை விட நேருவே பிடிக்கும். தலித்தியத்தை விட அம்பேத்கரே பிரதானம். திராவிடத்தை விட பெரியாரே வசீகரம். அந்தப் பழக்கத்தின் வழியாகவே கட்சிகள் பிரதமர் வேட்பாளரை முன்வைக்கின்றன.
சுதந்திரத்தின் போது இந்தியாவின் கல்வியறிவு வெறும் 12% தான் இருந்தது. அதனால் படிப்பறிவற்ற பாமர ஜனங்களே அரசைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை. அதனால் காங்கிரஸ் என்ற கட்சியின் கொள்கைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதைவிட நேரு, படேல் என்ற தலைவர்களைக் காட்டி ஓட்டு வாங்குவது எளிமையானதாக இருந்தது. அப்போதைய சூழலுக்கு அது வேண்டி இருந்தது.
ஆனால் இன்று இந்தியாவின் கல்வியறிவு 75%. அதாவது பெரும்பான்மையானோர் தான் தேந்தெடுக்கும் அரசின் கொள்கைகள் என்னவாய் இருக்க வேண்டும், எது தேசத்துக்கு நன்மை பயக்கும் என்று ஓரளவேனும் சிந்திக்கத் திராணி உள்ளவர்கள் (செய்கிறார்களா என்பது வேறு விஷயம்). அதை நிராகரித்து இப்போதும் அதே பாமர மோஸ்தரில் ஓர் ஆசாமியைக் காட்டி ஓட்டு கேட்பது கேலிக்கூத்தானது. தேசிய சிந்தனை வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாது பின்னிழுக்கும் வேலை.
சுருக்கமாகச் சொன்னால் மக்களவைத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கம் இரண்டாம் பட்சமே. நமக்குத் ஒத்துப்போகும் கொள்கைகளை முன் வைக்கும் கட்சிகளை, அவற்றிலிருந்தோ அல்லது வெளியேவோ தகுதியான மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பவதே சிந்திக்கக்கூடிய ஒரு நல்ல குடிமகன் இத்தேர்தலில் செய்யக்கூடிய விஷயம்.
0
நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மொத்தம் உறுப்பினர்கள் 543. இதில் பாதிக்கு மேலான எண்ணிக்கையில் (அதாவது 272) எம்பிக்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். இதில் தமிழகம் மற்றும் புதுவையின் சார்பாக அனுப்பப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் 40. அதாவது இந்தியாவுக்கான இந்த ஆட்டத்தின் செல்வாக்கில் கிட்டத்தட்ட 7.5% தமிழனின் கையில் தான் இருக்கிறது. ஒருவர் இந்த 40 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு பிரதமர் கனவு காணும் போதே நம் வீரியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பலத்தையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதனால் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பற்றி பார்க்கப் புகும் முன் தேசிய அளவில் கட்சிகள் நிற்கும் நிலை (larger scheme of things) பற்றி கொஞ்சம் பார்க்கலாம். தமிழகத்துக்கான முடிவை ஒரு வாக்காளர் எடுக்கும் முன்பு இதையும் ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் தற்போது தேர்தல் களத்தில் இருக்கும் கட்சிகள் / கூட்டணிகள்:
  1. பிஜேபி தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி
  2. காங்கிரஸின் 10 கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
  3. அதிமுக, கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிஷத் உள்ளிட்ட 11 கட்சிகள் கொண்ட ஓர் இன்ஸ்டண்ட் மூன்றாம் அணி
  4. தனித்து நிற்கும் ஆம் ஆத்மி கட்சி (வேட்பாளர்களின் அதீத எண்ணிக்கை காரணமாக இதை ஒரு போட்டி முனையாகக் கொள்ள வேண்டியுள்ளது).
  5. இவை போக அந்தந்த மாநிலங்களில் தனியாக நிற்கும் திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மற்றும் உதிரிகள்.
இதில் அதிமுக, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மூன்றாவது அணியில் இருந்தாலும் இவற்றின் தலைவர்களான ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோருக்கு தனித்தனியே பிரதமர் கனவுகள் உண்டு. இது போக கூட்டணி சேராமல் நிற்கும் மாயாவதி (பகுஜன் சமாஜ்), மம்தா பேனர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோருக்கும் பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது.
இப்படி பிரதமர் கனவு காண்பவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அது முடியாது போகும் போது பிரதான கட்சிகளான பிஜேபியையோ காங்கிரஸையோ ஆதரித்து விட வாய்ப்புண்டு. அதிக எம்பிக்கள் வைத்திருந்தால் துணைப் பிரதமர் பதவி கூடக் கேட்டுப் பார்ப்பார்கள். அதனால் மூன்றாவது அணியும் மிச்சமிருக்கும் கட்சிகளும் எந்த அளவுக்கு உண்மையாகவே பிஜேபிக்கும் காங்கிரஸுக்கும் மாற்றாய் ஓர் அரசை உருவாக்க முயல்கின்றன என்பது சொல்ல முடியாது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான போட்டிக் கட்சிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட எல்லாக் கூட்டணிகளுமே முடிவாகிவிட்ட நிலையில் இந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்த்து ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கு முன் தமிழக லோக்சபா தேர்தல்களில் இத்தனை பிரிவாக கட்சிகள் நின்றனவா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் இப்படி இவர்கள் பிரிந்து நிற்பதால் வாக்காளருக்குத் தான் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கான பதிலை அறிவதில் கூடுதல் சிக்கல் ஏற்படுகிறது.
  1. தனித்து நிற்கும் அதிமுக
  2. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக கூட்டணி
  3. தனித்து நிற்கும் காங்கிரஸ்
  4. தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஜேபி கூட்டணி
  5. 18 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்
  6. (இதுவரை) 8 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் எளிய மக்கள் கட்சி என்ற ஆம் ஆத்மி கட்சி
இது தான் தற்போதைய தமிழக நிலவரம். வேட்பு மனு தாக்கல் முடிய நாட்கள் இருக்கும் சூழலில் இதில் சிறிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

இப்போது வாக்களிக்கும் முன் நம் முன் இருக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு தேர்வை எழுதும் மாணவனின் சிரத்தையுடன் இவற்றுக்கு பதில்களைக் கண்டடைந்தால் தான் நம்மால் சரியாக வாக்களிக்க இயலும்.
தேர்வு நம் எதிர்காலத்தை மட்டுமே தீர்மானிக்கும். தேர்தல் தேசத்தையே!
1) மாநிலமா தேசியமா?
தமிழர்கள் முன் இருக்கும் முதல் வேள்வியே இந்தத் தேர்தலில் தேசிய கட்சியை ஆதரிப்பதா மாநிலக் கட்சியை ஆதரிப்பதா என்பது தான். இது மக்களவைத் தேர்தல் என்பதால் பொதுவாய் தேசியக் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும் எனற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். உண்மையில் அப்படி ஏதும் அவசியம் இல்லை.
மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளுக்கு மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் எனில் எந்த பிராந்தியக் கட்சியும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்கவே செய்யாதே! தேசியக் கட்சியோ பிராந்தியக் கட்சியோ அவர்களது பொதுவான கொள்கைகளும் அந்தத் தேர்தலுக்கென முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகளையும் கொண்டே நாம் முடிவெடுக்கவேண்டும். தேசிய கட்சியாக இருப்பது மாநிலக் கட்சியாக இருப்பதைக் காட்டிலும் எந்த வகையிலும் உயர்வானதில்லை. முடிவில் அவர்களின் கொள்கைகளே முக்கியமாகின்றன.
மாநில அளவில் மட்டுமில்லாது தேசிய அளவிலும் நம்மை பாதிக்கக்கூடிய விஷயங்களில் இக்கட்சிகளின் நிலைப்பாடினை ஆராய வேண்டும். உதாரணமாக ஈழப் பிரச்சனை, அணு உலைகள், இட ஒதுக்கீடு, அந்நிய நேரடி முதலீடு, எல்லைப் பிரச்னைகள், சிறுபான்மையினர் நலன். தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்.
அதனால் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்ற லேபிள் தாண்டி அவரவர்க்கு உவப்பான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள கட்சியை ஆதரிப்பதே சரியானது.
2) ஸ்திரத்தன்மை?
இம்முறை பிஜேபி ஒருபடி மேலே போய் ஐந்து ஆண்டுகள் நிலைக்கும் ஸ்திரமான ஆட்சி வேண்டுமானால் மோடிக்கே ஆதரவு அளியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறது. அதாவது காங்கிரஸுக்கோ மற்ற பிராந்தியக் கட்சிகளுக்கோ ஆதவரவளித்தால் தொங்கு நாடாளுமன்றம் வந்து மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்ல முயல்கிறார்கள்.
மேலோட்டமாய்ப் பார்த்தால் இது சரி தான் என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இதுவும் உண்மை இல்லை. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமார் 22 கட்சிகள் உள்ளன. அவர்களில் கணிசமானோர் விலகும் போது அதிலும் இதே பிரச்சனை வரும். இதைத் தவிர்க்கவே முடியாது (இப்போது திமுக விலகிய பின் மன் மோகன் சிங் அரசுக்கே அது தான் நிலை).
தவிர பிஜேபிக்குள்ளேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சௌகான் என மோடியின் செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லாத நிறைய அதிருப்தி ஆசாமிகள் இருக்கிறார்கள். நாளை அவர்கள் வெளியேறினாலோ ராஜினாமோ செய்தாலோ கூட இதே பிரச்சனை உண்டு.
அதனால் பிஜேபிக்கு வாக்களித்தால் மட்டுமே ஸ்திரமான அரசு அமையும் என்பது மோசடி பிரச்சாரம். அந்த விஷயத்தையே கணக்கில் கொள்ள வேண்டியவில்லை.
3)  நிராகரிப்பு அவசியம்
அடுத்து நாம் எதை / யாரை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.
அதாவது எந்த சித்தாந்தத்தை அல்லது செயலை எதிர்க்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். அது பிஜேபியின் மத வெறியாக இருக்கலாம் அல்லது காங்கிரஸின் ஊழலாக இருக்கலாம். ஜெயலலிதாவின் நிர்வாகக் குறையாக இருக்கலாம் அல்லது கருணாநிதியின் குடும்ப அரசியலாக இருக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே ஏதாவது குறைகளோடு / கறைகளோடு தான் இருக்கிறன. இருப்பதிலேயே மோசமானதை ஒதுக்குவதே இதன் நோக்கம்.
அவற்றை எல்லாம் பட்டியலிட்டு நம் பார்வையில் இந்த தேர்தலில் வெற்றி பெற விடவே கூடாத கட்சிகள் / ஆட்கள் யார் யார் என முடிவெடுக்க வேண்டும். 
4) எதிர்ப்பு மட்டுமே போதாது...
யாரை எதிர்க்கிறோம் என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை பிஜேபியை எதிர்க்கலாம். அதிமுக உங்களுக்கு உவப்பானதாய் இருக்கக்கூடும். ஆனால் அதிமுகவும் திமுகவும் இப்போதைக்கு எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்காவிடினும் தேர்தலுக்குப் பின் சேர வாய்ப்புண்டு (குறிப்பாக பிஜேபியுடன்). அதிமுக, திமுக இரண்டு கட்சித் தலைவர்களுமே பிஜேபியையோ நரேந்திர மோடியையோ தம் பிரச்சாரங்களில் விமர்சிப்பதில்லை. அதனால் பிஜேபியையும் காங்கிரஸையும் எதிர்க்க நினைக்கும் ஒருவர் தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டி இருக்கும். வாக்கு அளிக்கையில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5) யாரை ஆதரிப்பது?
மீதமிருக்கும் கட்சிகளில் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அக்கட்சிகளைப் பற்றி அவற்றின் நிலைப்பாடுகள் பற்றிய புரிதல் அவசியம். அக்கட்சிகளின் சமீபத்திய பத்தாண்டு செயல்பாடுகளை மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும். அது முக்கியம்.
உதாரணமாக ராகுல் காந்தியை ஆதரிக்கிறீர்கள் எனில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஆராய வேண்டும். அவரது பலவீனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நரேந்திர மோடியை அவரது நிர்வாகத் திறனுக்காக ஆதரிக்கிறீர்கள் எனில் அதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்று அறிய முயல வேண்டும்.
வாக்களிக்கும் முன் முடிந்த அளவு எல்லா கட்சிகளின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கைகளை வாசித்து விட வேண்டும். அவை தேர்தலுக்காக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிகளாக இருக்க வாய்ப்புண்டு தான். ஆனால் நமக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.
உதாரணமாக காங்கிரஸ் சொல்லும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதோ, மதிமுகவின் இந்தியக் குடியரசை ஐக்கிய இந்திய நாடுகள் ஆக்கும் விஷயமோ உங்களுக்குப் பிடித்திருக்கக்கூடும். அதற்கு இதெல்லாம் தெரிய வேண்டும்.
இந்த அறிதலின் முடிவில் இருப்பவற்றில் நீங்கள் உங்கள் விருப்பங்களுக்கேற்ற உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.
6) நிரந்தரமில்லை
ஆதரவு அளிப்பதிலும் ஒரு உள்விஷயம் இருக்கிறது. நீங்கள் விரும்பும் கட்சி உங்கள் தொகுதியில் நிற்கவில்லை. பதிலாக அதன் கூட்டணி கட்சி நிற்கிறது என்றால் அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்குப் பிடித்த கட்சியை நீங்கள் தேர்ந்தெடுக்க நீங்கள் என்னென்ன எல்லாம் கவனித்தீர்களோ அதை இக்கட்சிக்கும் செய்ய வேண்டும்.
காரணம் அரசியலில் எந்தக் கூட்டணியும் நிரந்தரம் அல்ல. அதனால் நீங்கள் அந்தந்த கட்சியைக் கவனித்து திருப்தி அடைந்த பிறகே ஓட்டை அளியுங்கள்.
7) கட்சியா வேட்பாளரா?
அடுத்த குழப்பம் கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடுவதா அல்லது வேட்பாளரைப் பார்த்து ஓட்டுப் போடுவதா என்பது. இதற்கு பதில் இரண்டுமே சம அளவில் முக்கியமானது என்பதுதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்பியின் கட்சியே மத்தியில் அரசு அமைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர் எதிர்கட்சியாக உட்காரவும் நேரலாம். ஆனால் அவர் தன் வேலையின் ஒரு பகுதியாக உங்கள் தொகுதிக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.
அதற்கு அவர் தொகுதிக்கு வந்து போகிறவராக இருக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டிருப்பவராக அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் நின்றால் கட்சி விருப்பு தாண்டி அவருக்கு வாக்களிப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும்.
வேட்பாளரின் படிப்பு, அவர் இதற்கு முன்பு செய்திருக்கும் சமூகப் பணிகள் வகித்த பதவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையையும் கணக்கில் கொள்ளவும்.
அதாவது நீங்கள் விரும்பும் கட்சி மோசமான வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஒதுக்குங்கள். அல்லது உங்களுக்கு பிடிக்காத கட்சி உங்கள் இடத்தில்  யாரேனும் நல்ல ஆள் ஒருவரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பதைப் பற்றிப் பரிசீலிக்கங்கலாம்.
இந்த அடிப்படையில் நீங்கள் ஒரு சுயேட்சையை ஆதரிப்பது கூட சரியானதே!
8) காசு வாங்கலாமா?
அடுத்து ஓட்டுக்கு காசு வாங்குவது குறித்த விஷயம். ஒரு வேட்பாளர் அல்லது கட்சி உங்களுக்கு காசு கொடுக்கிறது எனில் இரண்டு விஷயங்கள் உறுதி ஆகிறது: (i) நிச்சயம் அது நேர்மையான வழியில் சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பே இல்லை. (ii) அவருக்கு தன் கட்சிக் கொள்கைகளை விட செயல்பாடுகளை விட பணத்தைக் கொடுத்து தான் ஓட்டு வாங்க முடியும் என நம்புகிறார்.
அவர் கொடுக்கும் பணத்தை வாங்குவதும் வாங்காததும் உங்கள் இஷ்டம். அதனால் எந்த யோசனையும் இன்றி அந்த வேட்பாளரை நிராகரித்து விடலாம்.
9) தோற்கும் கட்சி
தோற்கிற கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம். இது தான் இன்று இந்தியாவில் பெரும்பாலான தேர்தல் முடிவுகளைத் திருத்தி அமைத்து விடுகிறது. மேலோட்டமான ஊர்வாய் என்பதைத் தாண்டி இன்று ஊடகங்கள் சர்வேக்களின் வழி இந்தக் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது முதல் இந்தத் தொகுதியில் இவர் தான் ஜெயிப்பார் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். அதன் நேர்மையும் துல்லியமும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவை இருந்தாலுமே இது வாக்களிக்கும் மக்களின் மனநிலையை ஓர் எல்லை வரை பாதித்து முடிவை மாற்றி விடுகிறது.
ஊரும் நாடும் என்ன சொன்னால் என்ன? அவரவர் பிரச்சனை அவரவர்க்கு.
அதனால் நீங்கள் விரும்பும் கட்சிக்கு வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள். அது தான் மனநிறைவான விஷயம். உதாரணமாய் உங்கள் தொகுதியில் நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கோ ஆம் ஆத்மிக்கோ தான் போட விரும்புகிறீர்கள் என்றால் அவர் ஜெயிப்பதையோ அக்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதையோ பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வாக்கினை அவர்களுக்கே பதிவு செய்யுங்கள்.
உங்களைப் போல ஒவ்வொருவரும் செய்தால் அவர்கள் வெற்றி பெறவும் கூடும். ஒருவேளை அவர்கள் தோற்றாலும் உங்கள் வாக்கு கணக்கு தான். அடுத்த முறை வியூகம் அமைக்க, அவர்களை மக்கள் / கட்சிகள் மதிக்க இது முக்கியமானது.
யார் கண்டார், அடுத்த தேர்தல் சர்வேக்களில் அக்கட்சி ஜெயிக்கும் என்று வர இம்முறை உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் வாக்கு காரணமாக இருக்கலாம்.
ஜெயிக்காதவருக்கு ஏன் ஓட்டுப் போட வேண்டும் என நினைத்து யாருக்கோ மாற்றிப் போட்டால் உங்கள் ஓட்டை இன்னொருவர் போடுவதாகவே அர்த்தம்.
10) நோட்டா?
அடுத்து தொகுதியில் யாருமே தகுதியான வேட்பாளர்கள் இல்லை, அதனால் ‘நோட்டா’ (NOTA – None Of The Above) எனப்படும் 49-ஓ போடுவது பற்றிய கேள்வி. ‘நோட்டா’  எவ்வளவு பதிவானாலும் மீதமிருக்கும் ஓட்டுகளை வைத்து அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பிறகு ‘நோட்டா’ போட்டும் என்ன பயன் என்பதே பரவலாக இருக்கும் அந்தக் கேள்வி.
நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையே. ‘நோட்டா’வினால் நேரடி ஆதாயம் ஏதும் இல்லை தான். ஆனால் அதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் இருக்கும் அத்தனை வேட்பாளர்களும் தகுதியற்றவர்கள் என இத்தனை சதவிகிதம் பேர் நினைக்கிறார்கள் என்கிற முக்கியமான தகவல்.
ஒருவேளை அந்த எண்ணிக்கை கணிசமான சதவிகிதம் எனில் கட்சிகள் அடுத்து வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என மக்களிடமிருந்து அறிய முயலும். இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்.
இதுவரை நடந்த எந்த தேர்தலையும் போல் அல்லாது இம்முறை ‘நோட்டா’ பதிவு செய்வது எளிமையானது, ரகசியமானது. அதனால் முன்பை விட அதிக ‘நோட்டா’ பதிவாக வாய்ப்பு உள்ளது. கட்சிகளே இதை உணர்ந்து தான் இருக்கின்றன.
அதனால் தகுதியான வேட்பாளரே இல்லை எனும் பட்சத்தில் ‘நோட்டா’ போடத் தயங்காதீர். ஜனநாயகத்தில் மாற்றம் விரைவில் வராதுதான். ஆனால் வரும்.

_45638507_d9e0bb6f-5583-4bf1-8e5c-b34bac6567feஜார்ர்ஜ் பெர்னார்ட்ஷா சொல்வதைப் போல் “Democracy is a device that insures we shall be governed no better than we deserve”. அதாவது ஒரு தேச மக்களின் தகுதி என்ன என்பதையே மக்களாட்சி பிரதிபலிக்கும். நாம் யோசிக்கக் கூடியவர்கள் எனில் சந்தேகமே இல்லாமல் நமக்கு நல்ல அரசு அமையும். அவ்வளவு தான் சங்கதி.
கடைசியாக ஒரு விஷயம். உங்கள் மனைவி, மக்கள், பெற்றோர், நண்பர்கள், மாணவர்கள், பணியாளர்களிடம் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள். குறிப்பிட்ட கட்சிக்கு / வேட்பாளருக்கு ஓட்டுப் போடு என மொட்டைக் கட்டளை இடாதீர்கள்.
அவர்களுக்கு யோசிக்க கற்றுக் கொடுங்கள், ஓட்டுப் போடும் முன் என்னென்ன விஷயங்களை எல்லாம் யோசிக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். தேவைப்பட்டால் விவாதம் செய்யுங்கள். நிறைகுறைகளை எடுத்துக் கூறுங்கள். அவர்கள் யோசிக்கட்டும் அவர்கள் தீர்மானிக்கட்டும். அது அவர்கள் உரிமை. அவர்கள் ஓட்டை நீங்கள் போட முயற்சிக்காதீர். ஜனநாயகத்தின் சாரமே அதுதான்.

ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பலர் யாரோ வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏற நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாளில் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் வாக்களிப்பது என்பது குறைந்து வருகிறது.

ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
முந்திச் செல்லுங்கள்   காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம். வரிசைக்கு மரியாதை வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.
இப்போது நான் இந்தக் கட்டுரையையும் அதே தொனியில் தான் எழுதுகிறேன். நான் வேலை விடுமுறைக்காக இந்திய செல்ல உள்ளேன் . இந்த விழிப்புணர்வு உங்களுக்கு  போதும் என்று நினைக்கிறன்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday, 3 April 2014

பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்ன ? ஒரு ஜனநாயக பார்வை..

election : Vote ribbon Illustration
தேர்தல் திருவிழா முன்பு போல களைகட்ட வாய்ப்பில்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் ‘கட்ட’ ஆரம்பித்து விட்டது. இந்தக் களையில் குறையிருந்தாலும் ஜனநாயக ‘தீவிரவாதிகளின்’ கடமை உணர்ச்சிக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை.வரும் 24 ஏப்ரல் 2014 அன்று தமிழம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு குடிமகனாக நீங்கள் இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும், உங்கள் வாக்கு யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு என்று முடிவு செய்யும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதே இதன் நோக்கம் மற்றும் எல்லை. தேர்தல் ஆணையத்தில் ஆரம்பித்து,  கருப்புப் பண சினிமா நட்சத்திரங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம்  குறித்து மக்களுக்கு ‘ஜனநாயக’ வகுப்பெடுக்கிறார்கள். 

அதாவது யாரை ஆதரிக்க வேண்டும் என்று இது சொல்லித் தரப் போவதில்லை. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் விவாதப் பொருள்.

முதலில் இது என்ன தேர்தல்? 
லோக்சபா தேர்தல். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல். இதன் பிரதான நோக்கங்கள் இரண்டு. ஒன்று உங்கள் மக்களவைத் தொகுதிக்கு எம்பியைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது அப்படி இந்தியா முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பெரும்பாம்பான்மையினர் முடிவுப்படி ஓர் அரசையும், அமைச்சர்களையும், பிரதமரையும் தீர்மானிப்பது.

வாக்களிப்பது என்பது நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ஜனநாயக உரிமையுமாகும்.வாக்குரிமையே நம்மை இந்நாட்டின் மைந்தர்களாக நமது அதிகாரபூர்வ உரிமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நாடு சீர்படுவதும், சீர்கெடுவதும் நாட்டு மக்களால் அளிக்கப்படும் வாக்குச்சீட்டு தான் தாங்கி நிற்கிறது. இன்னும் சொல்வதானால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி வாக்குச்சீட்டுக்குத்தான் உண்டு. என்று கூடச் சொல்லலாம்.அத்தனை பலம் மிக்க இந்த வாக்களிப்பின் நோக்கம், பயன் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மிகத்தெளிவாய் யோசித்து யாருடைய நிர்பந்தமுமில்லாமல் நம்மனதிற்க்கு மனசாட்சிக்கு தமது அனுபவத்தில் ஏற்ப்பட்ட நாட்டு நிலைமைகளை மனக்கண்முன் கொண்டுவந்து யாருக்கு வாக்களிப்பதென்ற நிலைபாட்டினை மனதினில் நிலைபடுத்திக் கொள்ளவேண்டும்.

தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய சூழலில் எண்ணிலடங்காத கட்சிகள் உருவாகி கட்சிகளும் வியாபாரமாக்கப் பட்டு விட்டது. அதுபோன்று நிறங்களில் அனைத்து நிறங்களும் ஹவுஸ் புல் போர்டு போடும் அளவுக்கு எல்லாக்கலர்களிலும் கட்சிக்கொடிகள் கம்பத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன.

கணக்கில்லாமல் கட்சிகள் உருவாகி அரசியலின் தகுதியையும், அந்தஸ்த்தையும், பலத்தையும் இழந்து கொண்டுவருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இந்த நிலைமையில் மக்கள் தான் மிக உஷாராக இருக்கவேண்டும். யாருக்கும் விலை போய் விடாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் நடந்து கொள்ள பக்குவப்படவேண்டும்.

வருமானத்திற்கு வழியில்லாதவர்களின் சிந்தனையில்கூட கட்சி ஆரம்பித்தால் காசு சம்பாரிக்கலாம் என்ற எண்ணம்வரும் அளவுக்கு அரசியல் கட்சிகள் அவல நிலையில் உள்ளது.ஆகவே பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

ஜாதிமத பேதமின்றி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்தாலும் ஒரு சில சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் சுய இலாப நோக்கில் நம்மை பிரித்து வைப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அத்தகையோரை இனம்கண்டு வீழ்த்துவது நாட்டுமக்களின் கடமையாகும்.ஜனநாயகத்தை நிலைபடுத்தவேண்டும். ஜனநாயகம் நிலைபட்டு விட்டால் நமது நாடு என்றென்றும் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அடுத்து கவனிக்கவேண்டியது தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளில் மயங்கி வாக்களிப்பது அறியாமையாகும். அது மக்களை திருப்திப்படுத்தி வாக்குப் பெற வேண்டி நடத்தும் சூழ்ச்சி என்றே சொல்லலாம்.ஆகவே பொதுமக்கள் தான் அனைத்தையும் தீர ஆராய்ந்து இத்தேசத்தை ஆழ்வதற்கு தகுதியான தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  
                                                  
தேர்தலில் வாக்களிப்பது என்பது, நாம் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ அல்ல. வேட்பாளராக நிற்பவர்களுக்குள், இவர் வந்தால் பரவாயில்லை - மற்றவர்களை விட இவர் வருவது நல்லது என்று "நான்" நினைக்கின்றேன் என்பதுதான் நாம் போடுகின்ற வோட்டு.

இந்த ஒவ்வொரு வோட்டும், நாட்டின் மீது, நம் மாநிலத்தின் மீது, நம் எதிர்காலத்தின் மீது நாம் வைக்கின்ற அக்கறையை, உலகிற்குக் காட்டுகின்றது.

ஒரு தொகுதியில் பதினைந்து சதவிகிதம் வோட்டுகள்தான் பதிவாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நிற்கின்ற யாராவது ஒரு வேட்பாளர், பதிவான வோட்டுகளில் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதி மீது விஷேஷ கவனம் எதுவும் செலுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் தொகுதி மக்கள் உறக்கத்தில் உள்ளவர்கள் அல்லது சமூகத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள்.

வேறொரு தொகுதியில், எண்பத்தைந்து சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் வெற்றி பெறுகின்ற வாக்காளர் தமக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட ஆயிரம் வோட்டுகள் / அல்லது அதற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகுதி மீது, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே எப்பொழுதும் அக்கறை செலுத்தும். தங்கள் கட்சி பக்கம், இந்தத் தொகுதியை இழுக்க, முழு கவனம் செலுத்துவார்கள்.

தப்பித் தவறி (அன்னா ஹசாரே புண்ணியத்தில்) இப்பொழுது வரைவு வடிவம் பெற்று வருகின்ற, லோக்பால் / லோகாயுக்த் அமைப்புகள் சட்டமாக்கப் பட்டு, இந்த சட்டங்கள் மக்களுக்கு / மக்கள் சக்தி ஆயுதமாக மாறினால், அரசியல்வாதிகளைக் கண்டு சாதாரண மக்கள் பயந்து வந்த காலம் மாறி, மக்களைக் கண்டு பயப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம், அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். இந்த நிலைமை, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.

என்னுரை :
வாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.          
  
வோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.

இன்றையகாலகட்டத்தில் நூறு சதமானம் மக்கள் நலுனுக்காக பாடுபடுவோர் அரிதிலும் அரிதாகவே தென்படுகின்றனர். இருந்தாலும் கொஞ்சமாவது பொதுநலனில் அக்கறை கொண்டு முழுக்க சுயநலவாதிகளின் கையில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தேசப்பற்றுடன் செயல்பட்டு, ஜாதி,இன,மத,மொழிக்கு அப்பாற்பட்டு நம்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நல்ல ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பது இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகவே மக்களே அலட்சியப் போக்கு வேண்டாம். ஆழமாக சிந்திப்பீர். மக்களின்பால் இந்த தேசத்தின்பால் உண்மையான அக்கறை கொள்பவரை தேர்ந்தெடுப்பீர்.!!!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 2 April 2014

நம்மூர் மக்களவை உறுப்பினருக்கு (எம்.பி.க்கு) என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

ரேசன் கடைகளில் போடப்படும் விலையில்லா அரிசிக்கும், மண்ணெண்ணெய்க்கும் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு மணி கணக்கில் காத்திருந்து வாங்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் ஏளனமாக பார்க்கும் அந்த அரிசியை வைத்து நாட்களை நகர்த்தும் அன்றாடங்காய்ச்சிகள்,  மூன்று வேலை சாப்பாடு  சாப்பிட முடியாத மனிதப்பிறவிகள், போதிய உணவின்றி மடியும் மக்கள், வறுமை காரணமாக எலும்பும் தோலுமாய் பிறக்கும் குழந்தைகள், 36 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என நடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் தான் ஒரு தரப்பினர் நமக்கு ஊழியம் செய்தவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் தான் நமது அரசியல்வாதிகள். ஓட்டு வாங்க வரும் போது உங்கள் தொண்டன் என்று கூறி விட்டு மக்கள் பிரதிநிதி என்பதையே மறந்து விட்டு நிதிகளைச் சேர்ப்பதே கொள்கையாகக் கொண்ட, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நாம் தரும் சலுகைகள் என்னென்ன என்பது தெரியுமா!

தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு :அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 1 April 2014

முத்துபேட்டை (அலையாத்தி காடுகள்,ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா) ஊர் பற்றிய வரலாறு !! ஒரு தவகல்

முன்னூறு ஆண்டுகளுக்கு  முன்பு முத்துபேட்டைக்கு நமது முன்னோர்கள், சூட்டிய  முழு முதற்பெயர்தான் இது,தமிழகத்தின்   கீழ்த்திசையில் நீண்டு,பரந்து,விரிந்து நீரினால் நிறைந்து  சூழ்ந்திருக்கும் வாங்கக்கடலை  ஒட்டி வடக்கே சுமார் 3 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கின்ற "பேட்டை" எனும் இடம்தான் நமது முத்துபேட்டையின் துவக்க கால ஊராகும்,

கடலில் மீன் பிடிப்பது,முத்துகுளிப்பது பறவைகளை வேட்டையாடுவது,அவற்றை விற்பது,வாங்குவது போன்ற செயல்கள் நடந்து வந்ததால் அது பேட்டையானது,இந்த பேட்டையின் வடக்கே,இப்போதைய ஊரின் நடுபகுதி பெரும் காடாக இருந்தது,

இங்கே துறவிகள் தவம் புரிந்து வந்தனர் அதனால் "துறவிகள்காடு" என்று அழைத்தார்கள்,
காலங்கள் ஓடுகின்றன,தலைமுறைகள் மாறுகின்றன,மக்கள் கூட்டம் பெருக பெருக ஊரின் மத்திய பகுதியான துறவிகாடுகள் அழிக்கப்பட்டு,குடியேற்ற இடங்களாக மாற்றப்பட்டு,வீடுகள் கட்டினர்,வணிக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இடம்,தங்கி வாழ்வதற்கும் ஏற்ற வகையில் மாறியது.

தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்குச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்க ஆரம்பித்தர்கள்,இந்த மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பரவலாக வாழும் ஊர்களுள் ஒன்றாக முத்துபேட்டை மாறி இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் இறைவனை வணங்குவதற்காக பேட்டையில் ஒரு பள்ளிவாசல் கூரை குடிசையாக கட்டப்பட்டது,அதுவே முத்துபேட்டையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்,அப்பகுதிக்கு துறவி காடு என்று பெயர் ஏற்பட்டு இப்பொழுது "துறைகாடு" என்று மாறிவிட்டது. 

தற்போதைய முத்துபேட்டை;

கடந்த 2011 ஆம்  ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முத்துபேட்டையின் மக்கள்தொகை 40,000 ஆகும்,இதில் ஆண்கள் 47%  பெண்கள் 53% ஆகும்,முத்துபேட்டை மக்களின் சராசரி படிப்பறிவு 71% ஆகும்,இது நாட்டின் படிப்பறிவை விட அதிகம் ஆகும், ஆண்களின்  படிப்பறிவு 78%,  பெண்களின்  படிப்பறிவு 65% ஆகும்.இங்குள்ள காயலில் (உப்பங்கழி) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன.  நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப் பறைவகளை இங்கு வந்து சங்கமிக்கின்றன.


ஜாம்பவானோடை ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா..

முத்துப்பேட்டை ஜாம்பவானோடையில் உள்ள ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா 712 ஆண்டுகள் பழைமையானது. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்யும் சிறப்புடையது.இத்தர்கா, மராட்டியர் கட்டிட கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது.மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், மதமாச்சரியமின்றி இந்த தர்காவில் தங்கி குணமடைந்து வருவது தனிச்சிறப்பு.ஆண்டுதோறும் நடைபெறும் பெரிய கந்தூரி விழாவின் தொடக்கமாக புனிதக் கொடியேற்றும் விழா ஜுமதா அவ்வல் 1-ம் தேதி நடைபெரும் .
மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, விஸ்வகர்ம சங்கத்தினர் ஆண்டுதோறும் கந்தூரி விழாவுக்கான புனிதக் கொடியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றம் நடைபெற்ற தினத்திலிருந்து தினசரி சிறப்பு தொழுகைகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும்.

அலையாத்தி காடுகள்...
முத்துபேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு "தேர்வுநிலை பேரூராட்சி" ஆகும், இது சென்னையில் இருந்து 360 கி.மி தொலைவில்,பட்டுக்கோட்டை அருகிலுள்ள உள்ளது. இங்கு  உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும்.  ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன. கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள். கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை. வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவி, சென்னியா, மெனரனா எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்பு நில காடுகளில்தான் உள்ளது. புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப் பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் குறிப்பிடப்படுகின்றன.

நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீத காடுகள் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29,713 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ளது. அலையாத்தி காடுகளை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்களின் படகு மூலம்தான் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும். 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும். பார்வை கோபுரங்களில் ஏறி லகூன் அழகை காணலாம். யாழ்பாணத்தான்கோரி, சீப் கார்னர், செல்லிமுனை பார்வை கோபுரங்கள், நடுவாய்க்கால், உப்புத்தோட்டம், வவ்வால் தோட்டம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் இந்த பகுதிக்கு வருகின்றன. இப்பறவைகள் சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன. மேலும் பூநாரை,செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகளைக் குறிப்பிடலாம். கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள நீர்ப்பறவைகள் இப்பகுதியில் நிலையாக வசிக்கின்றன. முத்துப்பேட்டை நில பறவைகளான பருந்து, சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா வகைகள் உள்ளன. முத்துப் பேட்டை சதுப்பு நிலக்காடுகளில் பாலுட்டி வகைகளான காட்டுப் பூனைகள், குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வெளவ்வால்கள் காணப்படுகின்றன. கீப் கார்னர் செல்லி முனை, லகடன் கடல் முகத்துவாரம் சேத்குடா உப்புத் தேரோட்டம் ஆகியன இங்குள்ள அழகுமிகு பகுதிகள்.
சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி காடுகள்தான். திருவாரூர் மாவட்டத்தை இயற்கை கீற்றங்களில் இருந்து காக்க கூடிய அரணாகவும் அலையாத்திக் காடுகள் உள்ளன. சாம்புவானோடை படகு துறையில் இருந்து இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 6கீ.மீ தூரத்தை கடந்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும். இப்பாதையில் ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாகக் காட்சி அளிப்பது அழகு.
சதுப்பு நிலக் காடுகளின் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 162 மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற அமைப்பு வேறு எந்த சதுப்பு நிலக் காடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி...
முத்துப்பேட்டையிலிருந்து  தஞ்சாவூர் 65 கீ.மீ. தொலைவிலும், திருவாரூர் 60 கீ.மீ தொலைவில் நாகப்பட்டினம் 70கீ.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, இதற்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி 130 கீ.மீ, மற்றும்  மதுரை 180 கீ.மீ,ஆகும். நடுத்தர வசதியுள்ள விடுதிகள் பட்டுக்கோட்டை மற்றும்  முத்துப்பேட்டையிலும் நட்சத்திர விடுதிகள் திருவாரூர் தஞ்சாவூரிலும் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம்.  மதுரைலிருந்து  காரைக்குடி, அறந்தாங்கி வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம். வேதாரண்யம்,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்தும்  முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. முத்துப்பேட்டையில் இருந்து  செல்ல படகு ஒன்றுக்கு (10 பேர் செல்லலாம்) ரூ.800 முதல் 1000 வரை வசூல் செய்யப்படுகிறது.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.