Monday 25 February 2008

நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய்!! ஒரு சிறப்பு பார்வை..

நாம் அனைவரும் எண்ணெயிலேயே ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் இந்த ஆலிவ் எண்ணெய் பற்றி தெரியாத நம் முன்னோர்கள், அந்த ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயைத் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் இன்றும் நம் பாட்டி, தாத்தாக்கள் வலிமையோடு இருக்கின்றனர். அதிலும் இந்த எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். \


இதுப் போன்று இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி, இந்த எண்ணெய் கொடண்டு நாள்பட்ட நோய்களை சரிசெய்ய முடியும். சரி, இப்போது இந்த நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!  

ஆரோக்கிய இதயம்..
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு..
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்..
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. 


பருவமடைந்த பெண் குழந்தைகள்களுக்கு..
பொதுவாக பூப்பெய்த இளம்பெண்களுக்கு பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது. மேலும் இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள்


செரிமான பிரச்சனை..
மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு..
நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்..
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்..
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் செய்யும் முறை..
சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

புற்றுநோய் 
நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அழகான சருமம்
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

புரோட்டீன்
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.


கண் நோய்கள்  நீக்கும் 
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக்  கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு,  கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்


நல்லெண்ணை குளியல்..
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில்  நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை.நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.  பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி  பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. 


போலி நல்லெண்ணெய்  விழிப்புணர்வு 

மாடுகள் சுற்றிவர செக்குகளில் ஆட்டியெடுத்த இந்த எள் எண்ணெய் கால மாற்றத்தில் பவர்கனி, லோட்டரி மிஷின், எக்ஸ்பிளர் என இயந்திரச் செக்குகளில் இப்போது ஆட்டியெடுக்கப்படுகிறது. முன்பு 10 கிலோ எள்ளுக்கு அரை கிலோ கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து ஆட்டி நல்லெண்ணெய் தயாரானது. இப்போது வணிக வருவாய் கருதி கிலோ ரூ.120 வரை விற்பதால் கருப்பட்டிக்குப் பதில் கிலோ ரூ.20க்குள் கிடைக்கும் மொலாசஸ் என்ற சர்க்கரை ஆலைக் கழிவைக் கொட்டி ஆட்டி நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதைவிட கொடுமையாக, சமீபகாலமாக எள் இல்லாமலேயே நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.

குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரி கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் நல்லெண்ணெய் வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது. ரூ.60க்குள் தயாராகும் இந்த போலி எண்ணெய்யை, நல்லெண்ணெய் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் லிட்டர் ரூ.180க்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இந்த கலப்பட எண்ணெய்யை அதிகாரிகள் கண்டுபிடித்தாலும், குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக சிலர் இந்த எண்ணெய் டின் மீது பார்வைக்குத் தெரியாத ஒரு ஓரத்தில் தீப உபயோகத்திற்கு மட்டும் எனும் பொருள்பட லைட்டிங் பர்ப்பஸ் என போட்டுக் கொள்கின்றனர். பொதுவாக அடர்த்தியான பிரவுன் நிறத்திலான தரமான நல்லெண்ணெய்யை பிரிட்ஜில் வைத்தால் உறையாது. ஆனால் பாமாயில், முந்திரி கழிவெண்ணெய்யில் தயாராகும் இந்த போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்ததும் உறைந்து விடும்.

எனவே பிறர் போலி என்று கண்டுபிடிக்காமல் இருக்க கலப்படக் கும்பல் ஒரு நூதன வழியைக் கையாள்கிறது. அதாவது, பாம் ஒலி பெயரில் ரீபைண்ட் செய்யப்பட்ட பாமாயில் விற்கிறது. இதனை கும்பல் வாங்கி, இதனுடன் முந்திரிக் கழிவெண்ணெய் கலந்து போலி நல்லெண்ணெய் தயாரிக்கின்றன. இந்த எண்ணெய் தெளிவாக இருப்பதால் இதனை தும்பை எள் எண்ணெய் எனக்கூறி லிட்டர் ரூ.290 வரை விற்று ஐந்து மடங்கு லாபம் பார்க்கின்றனர். இவ்வகையில் தயராகும் போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்தால் உறைவதில்லை. மக்களும், அதிகாரிகளும் இதைப் போலி என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நல்லெண்ணெய்யாகவே இது இருக்கிறது.

நம் பண்பாட்டு அடையாளமாக, மருந்தே உணவாக உள்ள நல்லெண்ணெய் வாங்குவோர் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து, போலி எண்ணெய்யைத் தவிர்ப்பது அவசியம். அதேபோல், இதுபோன்ற போலி எண்ணெய் தயாரித்து விற்போர் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் மிக அவசியம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment