Saturday 4 January 2014

அதிக மதிப்பெண்கள் பெற ஆண்டுத்தேர்வுகளுக்கு நம் குழந்தைகளை தயார்படுத்துவோம்!

ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன.

அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி சிறப்பாக படிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.



திட்டத்தை மேம்படுத்துங்கள்
டிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக, அதற்கான சிறப்பான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். சரியான திட்டமிடல் இல்லையெனில், எதிர்பாராத திடீர் நெருக்கடி ஏற்படுகையில் சமாளிப்பது கடினம். உங்களின் நேரம், உங்களின் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும். உங்களின் திட்டத்தில், தேவை மற்றும் சூழலுக்கேற்ப மாறுதல்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், உங்களின் திட்டத்தை, தவறாமல் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

அதிக கற்பனை வேண்டாம்
தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஆனால், அதேநேரத்தில், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை நிச்சயம் கெடுதலையே தரும். படித்தல் என்பது, அதிக கவனம் தேவைப்படும் ஒரு விஷயம் என்பதால், இதற்கு மூலதனமாக, அதிக ஆற்றலும் தேவை. எனவே, பல மணிநேரங்கள், ஒரே விஷயத்தை எளிதாக படித்துவிட முடியாது.

உங்களுக்கான சரியான நேரம்
எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்ற வாதம் நீடித்த ஒன்றாக உள்ளது. இதற்கான பதில் என்னவென்றால், யாருக்கு எந்த நேரம் ஒத்துவருமோ அந்த நேரத்தில் படிக்கலாம் என்பதுதான். சிலருக்கு காலை வேளையில் படிப்பது பிடிக்கும். சிலருக்கோ, இரவு நேரம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். காலையில் படித்தால்தான் நன்றாக நினைவில் நிற்கும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. காலை நேரத்தைவிட, இரவு என்பது அமைதியான நேரம்.
உங்களுக்கு பிடித்தமான நேரத்தை, சீரிய கவனம் செலுத்தி சிறப்பாக படித்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில், வேறு எந்த தொந்தரவையும் அனுமதிக்கக்கூடாது.

பொருத்தமான இடம்
சிறப்பாக படிப்பதற்கு, சரியான இடம் என்பதும் முக்கியமான ஒன்று. எனவே, உங்களின் இல்லத்திலோ அல்லது நண்பர் இல்லம் அல்லது வேறு இடங்களிலோ, படிப்பதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து கொள்வது உங்களின் பொறுப்பு. எந்த இடம், அமைதியாகவும், தொந்தரவின்றியும், நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளதோ, அது படிப்பதற்கு சிறந்த இடம்.

ஒரே பாடம் வேண்டாம்
நீங்கள், ஒரே பாடப் புத்தகத்தை, ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால், அதில் சலிப்பு ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு ஒரு பாடப்புத்தகமோ அல்லது சில மணி நேரங்களுக்கு ஒரு பாடப்புத்தகத்தை மாற்றியோ, படிக்கலாம். மேலும், இடைபட்ட நேரங்களில் மாதிரி தேர்வுகளையும் எழுதிப் பார்க்கலாம்.

சரியான நுட்பங்களைப் பயன்படுத்தல்
உங்களின் படித்தல் செயல்பாட்டை சிறப்பாக்கும் வகையில், பல நுட்பங்கள் உள்ளன. எனவே, அவற்றில் உங்களுக்குப் பொருத்தான நுட்பத்தை பின்பற்ற வேண்டும். படிக்கும்போதே, முக்கியமான பாயின்டுகளை, அடிக்கோடிட்டு, அர்த்தம் தெரியாத வார்த்தைகளுக்கு, புத்தகத்தின் ஓரத்திலேயே அர்த்தம் எழுதிவைத்து படிப்பது ஒரு சிறந்த நுட்பம்.

உங்களின் செயல்பாட்டை மதிப்பிடுதல்
நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட பாடங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட்டீர்களா? மாதிரி தேர்வுகளை சிறப்பாக செய்துள்ளீர்களா? கடினமான பகுதிகளை சரியாகப் புரிந்து கொண்டீர்களா போன்ற மதிப்பீடுகளை செய்துகொள்வது அவசியம்.

சுய மதிப்பீடு
நீங்கள் சரியாக படித்து தயாராகி விட்டீர்களா என்பதை சுய மதிப்பீடு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். மாதிரி தேர்வுகள் இவற்றில் முக்கியமானவை. இல்லையெனில், பிறரை கேள்விகள் கேட்கவிட்டு, அதற்கு பதில் சொல்லி, படித்ததை தெளிவாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம். படிக்கிறேன் என்ற பெயரில், அதிக நேரம் புத்தகமும், கையுமாக அமர்ந்து, பெற்றோரை ஏமாற்ற தயவுசெய்து நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களின் தேர்வு மதிப்பெண்கள் நீங்கள், உண்மையிலேயே என்ன செய்தீர்கள் என்பதை தெளிவாக கூறிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்



இனிதே வரவிருக்கின்றன மாணவச்செல்வங்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள். நம் குழந்தைகள் சிறப்பான முறையில் வெற்றி பெற வேண்டுமெனில் குழந்தைகள் மட்டும் உழைத்தால் போதாது. அதற்காக பெற்றோர்களும் பொறுப்பை உணர்ந்தவர்களாக குழந்தைகளுக்கு உதவி புரிய வேண்டும். அதற்கான சில யோசனைகள்.
  1. குழந்தைகளுக்கு ஆர்வத்தையும், ஊக்கத்தையும், தைரியத்தையும் அதிகமதிகம் கற்பிக்க வேண்டும்.
  2. குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் மீது அச்சத்தையும், நம்பிக்கையையும் கற்பிக்க வேண்டும்
  3. குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு இடங்களையும் சூழ்நிலையையும் அமைத்து தரவேண்டும்.
  4. குழந்தைகள் விளையாடவே போகக்கூடாது என்று கண்டிப்புடன் இல்லாமல் கட்டுப்பாடுடனும் சிறிய நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.
  5. படிப்பதற்கு தேவையான புத்தகங்கள்,நோட்டுகள், எழுதுகோள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலம் தாழ்த்தாமல் வாங்கிகொடுக்க வேண்டும்.
  6. வீட்டு வேலைகளிலிருந்து அறவே விடுதலை கொடுக்காமல் நேரம் கிடைக்கும் போது சிறிய சிறிய வேலைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை.
  7. மாணவர்கள் ஈடுபாட்டுடன் தான் படிக்கிறார்களா என்பதை கண்கானிக்க வேண்டும்.
  8. பெற்றோர்களில் இருவரில் ஒருவரோ மாணவர்களுடன் உட்கார்ந்து அவர்கள் படிப்பதற்கு உதவி புரிந்தால் அதுவும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
  9. குழந்தைகள் என்னென்ன பாடங்கள் படித்தார்கள் என்று தெரிந்துக்கொள்வது நல்லது.
  10. என்னென்ன வீட்டுபாடம் கொடுத்திருக்கிறார்கள் என்று தினமும் தவறாமல் அறிந்துக்கொண்டு அவற்றை குழந்தைகள் சரிவர முடித்துவிட்டார்களா என்றும் மறவாமல் கண்கானிக்க வேண்டும்.
  11. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை குழந்தைகளிடம் பெரிதாக காட்டிகொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  12. உறவினர் திருமணத்திற்கு செல்கிறோம், விருந்திற்கு செல்கிறோம் என்று தேர்வு நேரங்களில் குழந்தைகளை அலைகழிக்காமல்  இருப்பதும் அவசியம்.
  13. தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று காரணம் கூறி தொழுகைக்கு கூட அனுப்பாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  14. குழந்தைகள் படிப்பதற்கு அமைதியான சூழ்நிலை மிகவும் அவசியம். அதை ஏற்படுத்திக்கொடுப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகம்.
  15. குழந்தைகளை "படி படி" என்று சொல்லிக்கொண்டு பொறுப்பில்லாமல் வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு இடையூறு தறும்வகையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  16. குழந்தைகளை 'படி' என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு அருகில் இல்லாமல் உற்றார் உறவினர்களுடன் தொலைபேசியில் தேவையில்லாத நீண்ட பேச்சுகளையும் தவிர்க்க வேண்டும்.
  17. சரியான நேரத்தில் உண்வு ஏற்பாடு செய்து தருவதை மறந்துவிடவும் கூடாது. மறுத்துவிடவும்  கூடாது.
  18. பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை இருக்குமேயானால் தயவு செய்து அதனை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கும் முன்பு காண்பிக்க வேண்டாம்.
  19. தொலைக்காட்சிகள், மொபைல் போன் விளையாட்டுகள், கம்புயூட்டர் விளையாட்டுகளை முழுவதும் குழந்தைகளிடமிருந்து அப்புறப்படுத்தி வைப்பது சிறந்தது.
  20. குழந்தைகள் மனநிலையை நன்கு ஆராய்ந்து அதன் படி செயல்பட முயற்சிக்க வேண்டும்.
  21. குழந்தைகள் எந்தெந்த பாடங்களில் பலகீனமாக இருக்கிறார்களோ அவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்க வேண்டும்.

மேற்கூரிய ஆலோசனைகள் மட்டுமின்றி பெற்றோர்கள் தமக்கிருக்கும் பொறுப்புகளை நன்கு உணர்ந்து தமது குழந்தைச்செல்வங்கள் வரவிருக்கும் ஆண்டு இறுதித்தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிபெற உறுதுணையாக இருப்பதற்கு முயல்வோம்.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



No comments:

Post a Comment