திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத் அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்! இவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல! உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர். சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.
"லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என்று அந்தக் கொடியில் பொறித்திருப்பது அந்த நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் பிரகடனமாகும். அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும் அந்த நாட்டின் கொடி சாயவில்லை. குடியும் சாகவில்லை!
இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி விட்டது.
சாதாரண அடக்கம்..
இந்த அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும் பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம் என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே! இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம் கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர் இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப் பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.
ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் தான் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்படுவார்.
இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால் அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும் கருதி விடக் கூடாது. பல இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் அவரது ஜனாஷாவிற்கு வருகை தரவிருக்கின்றனர்.
.
தரை மட்டமான தனி நபர் வழிபாடு
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமையப் போகிறது. . பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. அரசுப் பணம் சாம்பலாகும் வகையில் அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக் காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம் தகர்த்தெறிந்தது தான்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி, மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட மேலானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்கள், தாம் இறந்த பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும் வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக தமது வாழ்நாளில் எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1390)
அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன் அடிப்படையில் தான் சரியான முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள் எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை. இது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1609)
இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்..

பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது, இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம் செய்யும் அரக்க குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.
சரியான சிந்தனைத் தெளிவோட்டம், பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான் சரி காணும்.
மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும் இந்த வழி காட்டுதலைத் தான் தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும். அப்போது தான் நடிகராக இருந்தாலும், நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது எந்தக் குடிமகனும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.
அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின் மரண விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப் பிடிப்பதாக அமைகின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களிலும் ஆலிம்கள், பெரிய மனிதர்கள், கொடை வள்ளல்கள் இறந்து விட்டால் வானளாவிய மனாராக்கள் எழுப்பும் இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக் கொடுக்கின்றது.
ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின் சாதாரண அடக்கம் மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல! முஸ்லிம்களுக்கும் தகுந்த பாடத்தையும் படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால் மிகையல்ல!
மன்னர் மர்ஹூம் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ்மரணம் நமக்கு ஒரு படிப்பினை !!
மன்னர் அப்துல்லாஹ்வின் உலக வாழ்க்கை முடிந்து போனது.. அவரது உலக வாழ்வு முடிந்திருக்கிறது… புதிய சீரியசான கட்டமொன்றுக்குள் அவர் நுழைந்திருக்கிறார்… அவர் செய்த நல்லமல்களைத் தவிர வேறெதுவும் அவருக்குப் பயனளிக்கப் போவதில்லை…ராஜ்ஜியமும், மாளிகைகளும், ஆட்சியதிகாரமும் முடிந்து விட்டன…. செல்வங்கள் இன்னொருவருக்கு கைமாறிவிட்டன… அவற்றை எப்படி சம்பாதித்தாய்? எங்கே செலவு செய்தாய்? என்பது பற்றிய விசாரணையே எஞ்சியிருக்கிறது…. எல்லாமே முடிந்து விட்டது… உலகை விட்டு புறப்பட்டுச் சென்றாயிற்று…
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் கிடையாது…
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக!!
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment