இருப்பினும், மனித நுண்ணறிவுத்திறன் என்பது ஒற்றை தன்மை கொண்டதன்று என்ற கோட்பாட்டை, ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner), தமது ஆய்வின் மூலம் 1980-களில் நிறுவினார். கார்ட்னர் கூற்றுப்படி (Theory of Multiple Intelligences) ஒரு மனிதனின் திறன் 9 பகுப்புகளாக அமையப்பெற்றுள்ளது. அவை முறையே Spatial, Linguistic, Logical-mathematical, Bodily-kinesthetic, Musical, Interpersonal, Intrapersonal Naturalistic மற்றும் Existential. மரபார்ந்த நுண்ணறிவுத்திறன் (IQ) சோதனைகள், ஒரு மனிதனின் மொழி மற்றும் தர்க்கரீதியிலான சிக்கல்களை களையும் ஆற்றலை மட்டுமே சோதிக்கின்றன. அது முழுமையான திறன் மதிப்பீடு அல்ல என்கிறார் கார்ட்னர். தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல் (Interpersonal), அடுத்தவரை அறிந்து கொள்ளுதல் (Intrapersonal) ஆகிய இரண்டும் கார்ட்னரின் திறன் பகுப்பை ஒட்டி பின்னாளில் தனிபெரும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், டேனியல் கோல்மென் (Daniel Goleman), "உணர்வுசார் நுண்ணறிவு: ஏன் அது ஐக்யூவை விட மேலானதாகக் கருதப்படுகிறது (1995)" என்ற தனது புத்தகத்தின் மூலம் உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Quotiant) என்ற திறனை பிரபலப்படுத்தியவராக அறியப்படுகிறார். கோல்மெனுக்கு முன்பு வேறு சிலர் இத்திறனை முன்வைத்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும், வெகுமக்கள் தளத்தில் இத்திறன் குறித்து விவாதங்களையும், புரிதலையும் பரவலாக ஏற்படுத்தியவர் என்ற வகையில் கோல்மென் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
ஒருவர் தமது உணர்வுகளையும், மற்றவர்கள் / குழுக்களின் உணர்வுகளையும் அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றலே உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. டேனியல் கோல்மெனின் கூற்றுப்படி உணர்வுசார் நுண்ணறிவின் கூறுகள் பின்வருமாறு:
1) ஒருவர் தனது உணர்வுநிலையை துல்லியமாக அறிதல்
2) ஒருவர் தன்னுடைய உணர்வுநிலையை திறம்பட மேலாண்மை செய்தல்
3) ஒருவர் தம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொள்ளுதல்
4) இன்னொருவருடைய உணர்வுநிலையை புரிந்து கொண்டு அங்கீகரித்தல்
5) இன்னொருவருடனான உறவைம் பேணுதல்
உணர்வுசார் நுண்ணறிவு குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
இன்று பெருமளவில் நடைபெறும் குற்றச்செயல்கள், தற்கொலைகள், மணவிலக்குகள் போன்றவற்றிற்கு உணர்வுசார் நுண்ணறிவின் போதாமையே காரணம். அண்மைய புள்ளிவிபரப்படி மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக இருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். (காண்க: http://thestar.com.my/news/story.asp?file=/2011/2/10/nation/8035599&sec=nation) பதினாறு வயதிலிருந்து இருபத்து ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் விஞ்ஞானத்தின் உச்சகட்ட வளர்ச்சி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே கைக்குள் அடக்கிக்கொள்கின்ற வசதி நமக்கு இப்போது வாய்த்துள்ளது. வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படும் நிலையே இன்றுள்ளது. இருப்பினும் எது நம்மை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது?
மேலும், மலேசியாவில் நடைபெறும் மணவிலக்குகளின் எண்ணிக்கையும் கவலைகொள்ளும் விதத்திலேயே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது புள்ளிவிபரம். 2000 - 2009 வருட கணக்குப்படி மொத்தம் 217,909 மணவிலக்குகள் மலேசிய பதிவிலாகாவால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 1,698,375 திருமணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மணவிலக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 13 சதவிகிதமாகும். மணவிலக்குகள் இரண்டு தனிநபர்களை மட்டும் பாதிப்பவை அல்ல. அவர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்கள், தொடர்ந்து அது சமூகத்தளத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் ஆகியவற்றை நாம் அறிந்து வைத்துள்ளோமா?
ஒரு மனிதனின் நுண்ணறிவுத்திறன் (IQ) குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு பெருமளவில் மாற்றமடையாமல் சீராகவே இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக, தேர்வுகளின் அடிப்படையில் ஒரு மனிதனின் நுண்ணறிவுத்திறன் (IQ) 120 என்று கணக்கிடப்பட்டால், அவரின் வாழ்நாள் முழுவதும் இந்த மதிப்பீடு தொடரும் என்கின்றனர். இருப்பினும், உணர்வுசார் நுண்ணறிவு (EQ) என்பது அத்தகையதன்று. உணர்வுசார் நுண்ணறிவை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்றைய நமது வாழ்வின் ஆகச் சிக்கலான விசயமாக நான் நினைப்பது, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் ஏற்படும் நெருக்கடியேயாகும். ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்ளாததற்கும், சக மனிதனை புரிந்து கொள்ள முடியாததற்கும், இன்றைய வாழ்வின் நெருக்கடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த நிலையை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம்? தர்க்கப்புத்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை தொடர்ந்து மேம்படுத்த நாம் கொள்ளும் முனைப்பை ஓரளவிற்கேனும் உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் நாம் செலவிட வேண்டும். உணர்வுசார் நுண்ணறிவை எப்படி மேம்படுத்தலாம்? ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வழிகளை இதற்கென வகுத்துள்ளனர். இருப்பினும் மிகச் சுலபமான வழியை நான் உங்களுக்கு பரிந்துரைக்க முடியும். இலக்கியம் வாசியுங்கள்!
இலக்கியம் நமக்கு எதைக் கற்பிக்கின்றது?
இருப்பினும், இலக்கிய வாசிப்பு என்பது வெகுமக்கள் தளத்தில் அறியப்படும் வகையில் அத்துணை சுலபமானதன்று. மிகக் கடின உழைப்பைக் கொண்டே இலக்கிய வாசிப்பின் நன்மைகளை நாம் அடைய முடியும். அதற்கு முதலில் நம்மை நாம் தயார் படுத்தி கொள்வது அவசியமாகும்.
மேலும் அறிய..
http://www.ihhp.com/free-eq-quiz/
http://psychology.about.com/library/quiz/bl_eq_quiz.htm
http://www.maetrix.com.au/meit/eitest.html
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment