Sunday 2 August 2015

டாக்டர் .எ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் எனதுசமூக மற்றும் சமுதாய பார்வை !!

முன்னுரை :
ஜனாப் டாக்டர் ..பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன்.எனக்கு மட்டும் அல்ல, தமிழகத்திற்கு   மட்டும் அல்ல,இந்தியாவிற்கு மட்டும் அல்ல... உலகில் யார் எல்லாம் அன்பையும் அமைதியையும்... நேசித்தார்களோ ...விரும்பினர்களோ ......அவர்கள் அனைவருக்கும் இழப்பே.......கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தார்களுக்கும் , இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் . (எந்த ஒரு ஆத்மாவும் அதன் இறுதி நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவோ, பிந்தவோ படாது. அதை கைப்பற்றுவேன்என இறைவன் கூறுவதாக அல்குர்ஆன் கூறுகிறது) அந்த அடிப்படையில் இறைவன் அவரின் ஆத்மாவை கைப்பற்றி விட்டான்.

பெற்ற தாய் தந்தைக்கு நல்ல மகனாய், ஆசிரியர்களுக்கு சிறந்த மாணவனாக, இந்தியாவின் சாதாரண குடிமகனாய், வல்லரசாக மாறுவோம் என்று எழுச்சி ஊட்டிய நாட்டின் முதல் குடிமகனாய், அக்னி ராக்கெட் விட்டு அண்டமெல்லாம் அதிரவைத்து, பொக்ரானில் அணுகுண்டு போட்டு எதிரி நாடுகளை பொறிகலங்க நடுங்க வைத்து , இளைஞர்கள் முன்னேற்றமே இந்தியாவின் முன்னேற்றம் என்று "கனவு காணுங்கள்" என புதியதோர் புரட்சி செய்தது , கல்வி நிலையங்கள் தோறும் சென்று" மாணவ செல்வங்களே நாட்டின் செல்வங்கள் "என அவர்களுக்கு ஊக்கமளித்தது இன்னும் உங்கள் சாதனைகள் ஏராளம். இத்தனையும் செய்து ஒருதுளிகூட கர்வமில்லாமல் எளிமையின் உருவமாய் கள்ளமில்லா சிரிப்பில் எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவரே அண்ணலே காந்தியடிகளை நாங்கள் உங்கள் உருவில் கண்டோம் எண்பத்தி நான்கு வயதிலும் தளராமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர்!!

மாணவர்களின் தேடல்!!

இரண்டு நாளாக நானும் யோசித்தேன்...எப்படி கலாம் அவர்களுக்கு மாணவர்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு என்று... அப்புறம் தான் விடை தெரிந்தது...அதற்க்கான விடை " மாணவர்களின் தேடல் " ...ஒரு நல்ல ஆசானை , நல்ல ஆசிரியரை, நல்ல மேய்பரை தான் நமது மாணவ செல்வங்கள் தேடியிருக்கின்றன....எனது இளம் வாழ்க்கையிலேயே கூட அந்த தேடல் இருந்தது...நான் யோசித்து பார்த்தேன், எனது பள்ளி வாழ்கை, கல்லூரி வாழ்கை. இப்படி படிப்புகென்ற தோராயமான 21 வருடங்களில் நான் சந்தித்த ஆசிரியைகள், ஆசிரியர்கள் யார் யார்என்று கணக்கெடுத்தேன்.. அனைத்து ஆசிரியர்களும் கண் முன்னர் வந்தனர்... ஆனால் எனக்கு கற்பித்த அத்தனை ஆசிரியர்களிலும் மொத்தம் நான்கே நான்கு பேர் தான் என்னை புரிந்து, மாணவனாக நடத்தி , உயர்வாக தெரிகிறார்கள். 


இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் , ஆசிரியர்களிடம் முதலில் எதிர்பார்ப்பது அன்பு, விருப்பு வெறுப்பின்மை ஆகியவையே... பாடம் கற்பித்தல் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்... ஆனால் இன்றைய ஆசிரியர்களில் பலர் பணத்தின் பின்னால் அலைவதும் , விருப்பு வெறுப்பு பாராட்டுவதும் , வக்கிரமாக கண்டிப்பதிலும் , பிடிக்காத மாணவர்களை பழிவாங்குதளிலும் மூழ்கி இருப்பதால் தான் " மாணவர்களின் தேடல் " அதிகரித்துள்ளது.கலாம் அய்யா மாணவர்களிடையே பேசும்போது அவரது பணிவு, அவரது பாசம், அன்பு, அறிவு ஆகியவை மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது... சிறந்த ஆசானை தேடும் மாணவர்களுக்கு கலாம் ஒரு கலங்கரை விளக்கம்.. அந்த கலங்கரை விளக்கத்தின் ஒளியில், "கற்பித்தல் எப்படி ?" என்கிற வித்தையை வருங்கால ஆசிரியர்களாவது கற்று கொள்ள வேண்டும்.

மரித்த பின்னர் தான் அவரது அருமை!!

அறிவை பகிர்ந்துகொள்வதில் இவர் ஒளியை தரும் குத்துவிளக்கு.... எளிமையை கடைபிடிப்பதன் மூலம் தியாக வாழ்கையை வாழ்ந்த இவர் ஒளி வீசி கரையும் மெழுகுவர்த்தி....இவர்  மதம் இஸ்லாமிய மதம் என்றாலும், அனைத்து மதங்களையும் மதித்து , அனைவருக்கும் அன்பு செலுத்தி, ஒரு மிக நல்ல இஸ்லாமியராக தன்னை உலகுக்கு அடையாளம் காட்டியவர்....

ஒருவர் மரித்த பின்னர் தான் அவரது அருமைகள் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.கலாம் அய்யாவின் அறிவை , அறிவுரையை, நாம் முழுதுமாக உபயோகபடுத்தி இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும்..

மனிதர் கனவு காணுங்கள்..கனவு காணுங்கள்...என்றாரே,...ஆனால் நாம் கண்ட கனவெல்லாம் சுயநல கனவுகள் தானே... கலாம் அய்யா மாதிரி பொதுநல கனவு என்றாவது கண்டுள்ளோமா?.. 

மாணவர்களை வழி நடத்திய ஆசானை , அவர்வழி படி நாம் என்றாவது நமக்கு தெரிந்த அறிவை இலவசமாக ஏதாவது ஒரு ஏழை மாணவனுக்கு கற்று கொடுத்திருக்கிறோமா?...அல்லது அவனது முன்னேற்றத்துக்கு வழி சொல்லியிருக்கிறோமா?.. இன்று நான் முடிவெடுத்துள்ளேன்... குறைந்தபட்சம் ஒரு மாணவனுக்காவது , நான் முன்பின் அறிந்திராத, படிப்பு தாகம் உள்ள ஒரு மாணவனுக்கு என்னால் முடிந்த அளவுக்கு அறிவால், பொருளால் உதவி, அவனது உயர்கல்விக்கு வித்திட வேண்டும் அல்லது வேலைவாய்ப்புக்கு வித்திட வேண்டும்.


உங்களின் வாழ்க்கை பயணம் இன்று முடிவுக்கு வந்திருந்தாலும் எங்களால் ஏற்க்க முடியாத நிலையில் உங்களின் சாதனைகளையும், உங்களின் பெயரையும் சரித்திரத்தில் இடம் பெற செய்யவேண்டும் என்ற குறிக்கோளோடு உங்களின் பெயரை ஒரு பெயரிடப்படாத நட்சத்திரத்திற்கு வைத்து. உங்கள் சாதனைகள் தலைமுறை தலைமுறையாய் தொடர ஆசைப்படுகிறோம்... 

 நாம்  என்ன கற்றுக்கொள்ளவேண்டும்?
 இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இருப்பது கடல் அளவு உள்ளது..ஆனால் ஒரு கடுகு அளவாவது நாம் இவரை பின்பற்றினால் நம்மை நாம் அறிந்து கொள்ளலாம்...சிரித்த முகம்...ஆழ்ந்த சிந்தனை...எதிர்காலத்தின் இலக்கு..... எளிமையின் இலக்கணம்.... நேர்மையின் தத்துவம்....தமிழனின் ICON .... காமராசரை கண்டிராத நாம் , நம்மிடையே வாழ்ந்த காமராசர் என்னும் கலாம் ஐ எப்படி அவ்வளவு சுலபமாக மறக்க இயலும்?....


ஏன் இந்த உலகளாவிய புகழ் உங்களுக்கு ???

நல்லவர்களுடன் பழகியதாலா, விஞ்ஞானம் விண்ணளவுக்கு கற்றதாலா, கற்றதை தாய்நாட்டுக்கு பயன்படும்படி பம்பரமாய் சுழன்று உழைத்ததாலா, விண்ணை முட்டும் ஏவுகணையும் பூமியை பிளக்கும் அணுக்கதிரும் கண்டாலும் முடவர்க்கும் கருவி கண்டு அதுவே ஏன் சிறந்த கண்டுபிடிப்பு என்று சொன்ன மகா மனித நேயத்தாலா, பார்புகழும் உங்களுக்கு பாரதரத்தினா சூட்டியதாலா, அன்பே உருவான கனிவான சிரிப்பாலா எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் கையில் இந்த தேச நலனை ஒப்படைக்க .,இளைங்கனைவிட, ஏவுகணையை விட, அணுவை விட வேகமாக செயல் பட்டு செயல் பட்டு 120 கோடி இந்திய மக்களுடைய ஆன்மாவில் கரைந்ததாலா ஜாதி மதத்தை அவரவர் விரும்பி ஏற்றாலும் அனைவரும் இந்தியன் என்ற உணர்வில் உங்களை அவரவர் இல்லங்களிலும் வைத்து கொண்டாடுவது ஏன் இப்போது புரிகிறது
.
கனவு ஏன் காண வேண்டும்?

கனவு காணுங்கள் ...கனவு காணுங்கள் என்று இளைஞர்களை உசுப்பி விட்ட அன்னார் , சில நாட்களுக்கு முன்னால் கனவு காணுங்கள்....அதுமட்டும் பத்தாது....மிகவும் சிரத்தையுடன் உழைத்து விட்டு கனவு காணுங்கள் என்று தனது " கனவு காணுங்கள் " என்ற இரு வரி இலக்கியத்துக்கு முடிவுரை எழுதினார்...எவ்வளவு பெரிய கணிப்பு பாருங்கள்....தனது முடிவை அவரே கணித்து இருந்தார் தான் என்று நம்புகிறேன்... கனவு காணுங்கள் என்ற இவரது வேதவாக்கை சிலர் சிலநேரம் நையாண்டி கூட செய்து கேட்டுள்ளேன்.... ஆனால் தீர்க்கதரிசனமாக அந்த இருவார்த்தை இலக்கியத்துக்கு " உழையுங்கள் " என்ற ஒரு வார்த்தை முடிவுரை எழுதிய கலாம் அய்யா ஒரு முக்கனி என்பதில் சிறிதும் ஐயமில்லை... " உழையுங்கள்...கனவு காணுங்கள் " ...என்ற இந்த முக்கனி வார்த்தைகள் இளைஞர்களின் துடுப்பு... சோம்பேறிகளின் கூடாரமாக மாறிவரும் இளைஞர் பட்டாளத்தின் நாடியை முருகேற்றி விட்ட தீப்பொறி கலந்த எளிமையான வார்த்தைகள்.... உழைப்பின் பலன் நம்மை அடையாமல் இருக்காது.... காணும் கனவும் , ஒருநாள் மெய்படும்....இதுவே கலாமின் தத்துவம்... இன்று இளைஞர்கள் கலாமுக்கு அஞ்சலி ஒரு நாள் செலுத்திவிட்டு அடுத்த நாள் சினிமா கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போய்விடகூடாது... சினிமா என்னும் மோகத்தில் இருந்து விடுபட்டு, போதை என்னும் மோகத்தில் இருந்து விடுபட்டு, வன்முறை என்னும் நடைமுறையில் இருந்து விடுபட்டு, உழைப்பு, நியாயமான கனவு, இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றம் என்ற சிறந்த வழியை , கலாம் அவர்களின் பாதசுவடுகளில் இருந்து பின்பற்ற வேண்டும்....வருங்கால சந்ததியனருக்கு நமது சமுதாயம் கேடுகளை , பொல்லாப்புகளை, வன்முறைகளை, ஆபாசங்களை, போதைகளை, பேராசைகளை, சூதாட்டங்களை , கலாசார சீரழிவுகளை மட்டும் விட்டு விட்டு செல்ல வில்லை..." கலாம் " என்ற மூன்றெழுத்து மந்திரத்தையும் விட்டு சென்றுள்ளது... இளைஞர்கள் எதனை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்?... யார் பாத சுவடுகளை பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதனை பொருத்தே வருங்கால சந்ததி அமையும்....

இந்தியா வல்லரசு !!
எதிர்கால வல்லரசு இந்தியாவை உருவாக்க அவர் மாணாக்கர்களையே நம்பியிருந்தார். அவர்களிடையே உரையாடுகையில், யாரும் எதிர்ப்பாரா வண்ணம், நொடியில் அவர் இன்னுயிர் பிரிந்தது, கடவுளின் அநுக்கிரகமே ஆகும் பொது வாழ்க்கையில் இலஞ்ச,இலாவண்யம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவைகள் கூடாது என்பதை தனது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டார். அதனைத் தனது கடைசி மூச்சு உள்ளவரை தனது வாழ்வில் கடைப்பிடித்தார். அற்புதமான மனிதர். இந்தியா 2020-ஆம் ஆண்டில் வல்லரசாகத் திகழ வேண்டும் என்றும், இந்திய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், இந்தியாவில் உணவுப் பஞ்சம், குடிநீர்ப் பஞ்சம் இருக்கக் கூடாது என்றும், சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி, மின்சக்தி பற்றாக்குறையை இந்தியாவில் நீக்க வேண்டும் என்றும் கனவு கண்டவர். "

முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த
 ஒரு  அரசியல் வாதி !!
திரு அப்துல் கலாம் அவர்களுக்கு இணை அவர்தான். வேறு யாரையும் அவருடன் ஒப்பிட முடியாது. கோடி கணக்கான மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல் வாதிகள், தான் பணம் சம்பாதிப்பதிலும், தான் நடத்தும் டிவி சானல்களில் நடன நிகழ்ச்சி பார்த்து நேரம் கழிப்பதுமாக இருகின்றனர். இருந்தனர். அனால் திரு கலாம் அவர்கள், ஜனாதிபதியாக இருந்ததற்கு முன்னும் பின்னும், தன்னுடைய நாட்டுக்காகவும், மாணவர்களின் எதிர்காலதிர்காகவும் பாடுபட்டவர். இவர் போல் நாட்டுப்பற்று மிக்க அரசியல்வாதிகள் 1 அல்லது 2 % தான்.ஒவ்வரு மூச்சும், இந்திய மண்ணுக்காக விட்டவர். நாட்டின் எதிர்காலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்.

இன்றைய அவரது இழப்பு அணைத்து முஸ்லிம்களுக்கும் நம் பாரத இந்திய திருநாட்டிற்கும், அறிவு சார்ந்த உலகத்திற்கும் பேரிழப்பு. அவர் ஒரு ஆலமரம் அறிவுதேடலுக்காக அவரிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் அவரது சொல்லை செயலாகவும் செயலை சரித்திரமாகவும் மாற்றும் அவரது தலைமையின் கீழ் இயங்கிய பல குழுவினருக்கும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஒரு இந்தியர்.... ஒரு ஒழுக்கமான தமிழன். இந்திய ஜனாதிபதியாக இருந்தபொழுது அரசு செலவுகளை குறைத்தும், ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும் , மாணவ மாணவியர்களிடம் அன்பை காட்டியவரும்,அரசியலில் நேர்மை , தூய்மை என்று இருந்தவரும் தான் Dr. APJ அப்துல்கலாம். அணு விஞ்ஞானி, ஒப்பற்ற ஆசிரியர், வாழ்க்கை முழுதும் கல்விப்பணி செய்த அறிவியல் மேதை. கனவு காணுங்கள் அதுதான் உங்களை உயர்விக்கும்,என மாணவர்களை வழி நடத்திய மகான் மர்ஹும் கலாம் அவர்களின் மறைவு அனைத்து இந்திய மக்களுக்கும் ஓர் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. எல்லாம் வல்ல இறைவன் அவரின் குற்றங்கள், குறைகள் , பிழைகள் யாவற்றையும் மன்னித்து அவரின் மண்ணறையை சுவன பூங்காவனமாக மாற்றி, இம்மை,மறுமை என ஈருலகிலும் வெற்றி பெற்றவராக ஆக்கி வைப்பானாக !!



அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது!!


மறைந்த அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கும் என   தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ . 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

கலாமின் லட்சியக் கனவு !!
கலாம் விட்டுச் சென்ற லட்சியக் கனவை யார் தொடர்வார்கள் என, சமூக வலைதளங்களில் பலர் ஆதங்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள், சமூக வளர்ச்சி என, தனித்தனியாக இயக்கமாக உருவாக்கி, கலாமின் லட்சியக் கனவு அவரது உறவினர்கள் மூலம் தொடரும். அந்த இயக்கத்துக்கு நானும், நண்பர்களும் துணையாக இருப்போம். அந்த இயக்கம் குறித்து கலாமின், 40ம் நாள் சடங்கு முடிந்தபின் முறையாக அறிவிக்கப்படும். டில்லியில் கலாம் வசித்த வீட்டில் பல அறிவு சார் புத்தகங்கள் உள்ளன. ..எஸ்., - .பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவை பயன்பட, அந்த இல்லத்தை, 'கலாம் சென்டர் பார் நாலெட்ஜ் ஆப் டிஸ்கவரி' என்று மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கலாம் விரும்பியபடி, ராமேஸ்வரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை நிறுவ, பிரதமர் மோடியைச் சந்தித்து, அவரது குடும்பத்தினர் மனு கொடுக்க உள்ளனர். கலாமுக்கு, 64 கோடி இளைஞர்கள் தான் சொத்து. அவருக்கு தனியாக சொத்து ஏதும் இல்லை. அவர் எழுதிய புத்தகங்களுக்கு, 'ராயல்டி' வருகிறது. கார்பன் இல்லாத ராமேஸ்வரம் தீவு, சோலார் மின் விளக்கு, கிரீன் ராமேஸ்வரம் ஆகிய கலாமின் கனவுகளை, 'மிஷன் காலரி இயக்கம்' மூலம்செயல்படுத்த வேண்டும்.

என்னுடைய ஆசை !!
உலக அரங்கில் இந்தியாவை அதிர வைத்த பெருமை அன்னாருக்கு உண்டு. இந்திய முதல் குடிமகன் இளைய தலைமுறையின் கனவு நாயகனுக்கு ஆசியாவின் மிக நீளமான சென்னை மெரினா கடற்கரையில் மணி மண்டபம் அமைத்து பெருமை படுத்த ஒவ்வொரு தமிழ் குடிமகனும் குரல் கொடுக்க வேண்டும். 

ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெயரிடப்படாத நட்சத்திரத்தை கண்டு பிடித்து அதற்க்கு பெருமதிப்பிகுரிய அப்துல் கலாம் என்ற பெயரை வைக்கும்படி வேண்டி  இஸ்ரோ  மற்றும் நாசாவிற்கு  மத்திய  அரசு  பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும் அவருக்கு  மரியாதையை செய்யும் வகையில்  தபால் தலை மற்றும் 5000ரூபாய்  நோட்டில்  இவருடைய  படத்தை வெளியிட வேண்டும்.


அவருடைய  சமாதியை  சுற்றி பூங்கா அமைத்து சுற்றுலா தலத்தில்   இணைக்க வேண்டும்.



முடிவுரை :

இந்த நூற்றாண்டில் கிடைத்த அறிய மாமனிதர்பதவி இழந்தபின்னும் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிகாக உழைத்தவர்கோடிகணக்கான இதயங்களில் நம்பிக்கையை விதைத்தவரே வீழ்ந்தாலும் விதைக்கபட்டவர் நீங்கள்இனி கனவுகளோடு உங்கள் நினைவுகளும் போட்டி போடும்உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்திருக்கும். இளைஞர் சமுதாயத்தின் வழிகாட்டி மறைந்து விட்டார் ஆனால் அவர் வார்த்தைகளும் எண்ணங்களும் என்றுமே மறையாது அதனை செயல்படுத்திட தோள் கொடுப்போம்.இந்தியாவை ஒரு தமிழன் ஆண்டதில்லை. ஆனால், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆண்ட தமிழன், ஒரு அனுவிஞானியாகவும், அரசியல் வாதியாகவும் இருந்து மக்களை பற்றியும், மாணவர்களை பற்றியும், நாட்டை பற்றியும், சிந்தித்து நடைமுறை படுத்திய ஒரு மகா மேதை.உன்னால் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது..! உன் சேவை கண்டு தமிழ் தாய் அகம் மகிழ்ந்தாள் ! இன்னும் நம்ம முடியவில்லை...!! கண்ணீர் ததும்புகிறது அய்யா... எங்கள் உண்மையான உணர்ச்சி தென்றலே... பேராசிரியரே... எங்களை கனவு காண சொல்லி விட்டு நீ எங்கு சென்றாய் ?! இதுவே ஒரு கனவாக இருக்க கூடாதா?! மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை ... விதைத்தவர்கள் உறங்கலாம்... விதைகள் உறங்குவதில்லை.. நீ விதைத்த விதையாய் உம் பணியை  நாம் தொடருவோம்.. இவர் கனவை நினைவாக்குவது நாம் ஒவ்வொருவரின் கடமை என  உறுதி கொள்ள வேண்டும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு .அஜ்மல்  கான்.

No comments:

Post a Comment