Friday 28 December 2018

நாம் வீடு கட்டச் சில விதிமுறைகள் மற்றும்ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?

வீடு கட்ட நிலம் வாங்கியாகிவிட்டது. அதில் நம்முடைய விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் வீடு கட்டலாம்தான். ஆனால், அதற்குச் சில விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. எத்தனை மாடி கட்ட வேண்டும், எவ்வளவு இடம் விட்டுக் கட்ட வேண்டும், என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.   

நம்மிடம் உள்ள நிலம் முழுவதிலும் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம், செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். மொத்தப் பரப்பில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.

அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரத்தைப் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர், அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.



‘நிலம் ஆறு கிரவுண்ட். மறைமலை நகருக்கு அருகில் ஒப்பந்ததாரர் தேவை’ என்னும் விளம்பரத்தைப் பிரபல நாளிதழ்களிலும் உள்ளூர் இலவச இதழ்களிலும் கண்டிருக்கலாம். இதன் முழுமையான பொருளை விளங்கிக்கொள்ள இயலவில்லை எனினும் விசாரித்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்றரை அல்லது இரண்டு கிரவுண்ட் வைத்திருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு ஓரிரண்டு தளங்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பரப்பு கொண்ட மனையை விற்பவர்கள் லாபத்திலும் பங்கு பெற முடியும்.

உதாரண சம்பவம்

இதுபோன்று, கூட்டாக இணைந்து செயல்படுகிற தன்மையில் கட்டாயம் ஏதாவது சிக்கல் வரும். இதை உறுதிப்படுத்துவதுபோல் மூன்று மாதத்துக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் செய்தியொன்று வெளியானது. மிகப் பிரபல, பெரிய ஒப்பந்ததாரர் ஒருவர் நில உரிமையாளர் ஒருவருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒப்பந்ததாரர் பிரபலமானவர் என்பதாலேயே, பல வாடிக்கையாளர்கள் தாமாக வந்து சேர்ந்து முன்பணம் தந்திருக்கிறார்கள். ஆனால், நில உரிமையாளர் ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடர்ந்ததாகச் செய்தி தெரிவித்தது. காரணம், ஒப்பந்ததாரர் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அசலாகக் கட்டுகிற தளங்களுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததே.

நாலைந்து தளங்கள் எழுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டவர்களுக்கே தொந்தரவு ஏற்படுகிறது. கையொப்பமிட்ட புரிந்துணர்வின்படி, கட்டும் தளங்களில் ஒன்றோ இரண்டோ நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கத் தாமதமாகிறது.

தேர்ந்தெடுக்கச் சில வழிகள்

இத்தகைய நிலைமையில் ஒப்பந்ததாரரை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு நடைமுறைக்கு ஏற்பச் சில வழிகள் உள்ளன:

குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரைச் செவி வழிச் செய்தியாகவோவிளம்பரம் மூலமோ அறிந்து இருப்பீர்கள். அவர் கட்டி முடித்த தளங்களைச் சென்று பார்வையிடுங்கள். ஓரிரண்டு ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட தளவரிசைகளைப் பார்க்கலாம்.

பொதுவாக எல்லா ஒப்பந்ததாரர்களும் தனி வலைத்தளம் வைத்திருப்பார்கள். அதில் நிறைய விவரம் கிடைக்கும். அவர் மூலம் கட்டிடம் கிடைத்துப் பயனடைந்தவர்களிடம் பணிவாகப் பேசினால் தகவல் கிடைக்கும்.

வீடு கட்டும் முறையே மாறிவிட்டது. ஏனென்றால், 30 ஆண்டுக்கு முன், தனி வீடுதான். சாதாரண ஒப்பந்ததாரர் கட்டினால் போதும். இப்போது அப்படியல்ல. மண்ணின் தரம், தண்ணீர், சுற்றுப்புறம் போன்ற பல சோதனைகளைச் செய்ய, முறையான பொறியாளர்கள் அவசியம். மேலும், சுனாமி, வர்தா போன்ற அசம்பாவிதங்களைத் தாங்கிக் கொள்கிற அளவுக்குத் தளங்கள் அமையுமா என்பதையும் சோதிக்க வேண்டும். (2000-க்கு முன் இவை அறிந்திராதவை).

சில தடங்கல்கள் எதிர்பாராத வகையில் வரும். அரசு மாற்றத்தால் நிலவுகிற தாமதம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இத்துடன் தற்போதைய தலைவிரித்தாடும் பிரச்சினை – மணல் பற்றாக்குறை. இவற்றையெல்லாம் சந்தித்துச் சமாளிக்கிற அளவுக்கு ஒப்பந்ததாரருக்கு மன உறுதியும் பண பலமும் இருத்தல் அவசியம்.

ஒப்பந்ததாரரிடம் மனையைக் கொடுப்பது, கிட்டத்தட்ட சேலையை முள்ளிலிருந்து எடுப்பது போலத்தான். கட்டிடம் உறுதியாகவும் இருக்க வேண்டும். தொகையும் பட்ஜெட்டுக்கு மேல் போகக் கூடாது.

No comments:

Post a Comment