Wednesday 5 June 2019

தமிழ் நாட்டில் நீட் தேர்வில் நல்ல தேர்ச்சி முன்னேற்றம் !!

Image may contain: 2 people, people smiling, people sitting and textநீட் தேர்வு முடிவுகள் இன்று (June 5) வெளிவந்துள்ளன. அகில இந்தியாவில் கடந்த ஆண்டை விட 14.52% அதிக மாணவர்கள் இந்த வருடம் தேர்வு எழுதியுள்ளனர். 55.22% பெண்கள், 44.78% ஆண்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர் இந்த ஆண்டு. இதில் reservation அல்லாதவர்கள் 35%, SC/ST/OBC மாணவர்கள் 65% நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழ் நாட்டில் மட்டும் 1,23,078 மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர், அந்த மாணவர்களில், சுமார் 60,000 (48.57%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 2018-ல் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் 39.56% ஆக இருந்தது. இது நல்ல முன்னேற்றம் என்று தான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிரா (2,06,745, 39.26% தேர்ச்சி பெற்றுள்ளனர்), உத்திர பிரதேஷ் (1,44,994, 58.61% தேர்ச்சி பெற்றுள்ளனர்) இந்த இரு மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ் நாட்டில் தான் அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியென்றால் அதற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்வார்களா எனக் கேட்பவர்கள் முதலில் ஒன்றை யோசிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளில் பலர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள். இவர்களில் பலரது பெற்றோர் பள்ளிக்கூடப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்கள். அடிப்படை வசதிகள் பல இவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இப்படிப்பட்ட சூழலில் படித்து வரும் இந்தப் பிள்ளைகள் தமிழ் வழி படித்து அதிலேயும் கூட மிகச் சிறப்பாகத் தேறியவர்கள். பல கனவுகளை மனதில் சுமந்தவர்கள்.
தற்கொலையை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கண்முன்னே நடக்கும் நிகழ்வை பார்க்காமல் அதில் உள்ள அநியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது மிகத் தவறாகும்.
கல்வி ஒன்றே தனது சந்ததியின் வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவர்கள் இந்தக் குழந்தைகள். இத்தகைய குழந்தைகளின் மூச்சும் பேச்சும் கனவும் நனவும் கல்வியும் அதனால் கிடைக்கும் மேம்பாடும் தான். அந்தக் கனவை அழிக்கும் நீட் என்ற அரக்கனின் தாக்குதல் தாங்காமல் சிலர் தன் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
தற்கொலை செய்பவர்கள் கோழைகளல்ல. நாமே முடிவு செய்து சாவது என்பது சுலபமல்ல. பலர் வாழ்வில் பல தருணங்களில் இதனை யோசித்து மீண்டவர்கள் தான். ஆக, தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் தங்கள் லட்சியத்திற்காக வாழ்ந்து மடிந்திருக்கின்றனர். இத்தகைய குழந்தைகளைக் குறை கூறுவோர் என் பார்வையில் மனிதாபிமானமற்றவர்கள். வறுமை என்றால் என்ன என்பதை அறியாதவர்கள். இக்குழந்தைகளைக் குறை கூறுவதை விட்டு வறுமையில் கல்வி கற்று மேம்பட நினைக்கும் குழந்தைகளுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வைக் குறை சொல்லுங்கள்!
-சுபா
தமிழ் நாட்டை சார்ந்த கெ.சுருதி என்ற மாணவி, இந்தியாவிலேயே முதல் 20 மாணவிகள் பட்டியலில், 685 மதிப்பெண்கள் வாங்கி, 10வது இடத்தைப் பெற்றிருக்கிறார். All-India Rank 57வது இடத்தையும் பிடித்திருக்கிறார்! இந்த பெண்ணின் ஜாதி சொல்ல நான் விரும்பவில்லை, இருந்தாலும் அவர் OBC சேர்ந்தவர் என்று இங்கே பதிவிட்டுக்கொள்கிறேன்.
முக்கியமான ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். நீட் தேர்வை நடத்தும் National Testing Agency எல்லா மாணவர்களின் தேர்வுத்தாள்களையும் பதிவு செய்து தன் இணையத்தளத்தில் வைத்திருக்கிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆகையால், எந்த ஒரு மாணவனோ மாணவியோ, இணையத்தில் அவர்களுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, challenge செய்யலாம். எங்கே தவறு செய்தோம், எப்படித் தவறு செய்தோம், எப்படி மதிப்பெண்கள் கூடின, கழிந்தன என்று மாணவர்கள் ஆய்வு செய்யமுடியும். மீண்டும் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதவும் வாய்ப்பு உண்டு.
போட்டித்தன்மை என்றும் கடுமையாகத் தான் இருக்கும் இந்தியாவில். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டவேண்டுமே தவிர, நீட் தேர்வில் தோற்றுவிட்டோம், இனி எதிர்காலம் இல்லை என்று நம்பிக்கை இழந்து, தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். அதைவிட முட்டாள்தனம், ஒரு சில மாணவர்களின் தோல்விக்காக, மத்திய அரசு நாட்டின் நலனிற்காகக் கொண்டுவரும் நீட் தேர்வு போன்ற முயற்சிகளை எதிர்ப்பது.
தேர்வு மதிப்பெண்கள் உங்கள் தகுதியை மட்டுமே குறிக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் என்றும் உள்ளது. நீட் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment