Thursday 3 January 2008

மஞ்சள் காமாலை பற்றிய சிறப்பு பார்வை...

மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் பெரும்பாலும் ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது.
மஞ்சள் காமாலை உருவாக காரணம் 
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது.
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?
ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும்.
ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். 

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். 
கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு `கல்லீரல் அழற்சி பி வைரசால்' பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். 

இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மஞ்சள் காமாலைக்கு  நிறந்தரதீர்வு !!
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
  • கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
  • கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்
  • காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.
  • சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும்.
  • நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்
  • பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்
  • காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  • பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
  • எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.
  • புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
  • நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.


இந்நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண் ணெய் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக்  கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.

No comments:

Post a Comment