Sunday 13 January 2008

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு பற்றிய சிறப்பு பார்வை..

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு,கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டு நடத்தப்படுகின்றது. 

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு(ஜல்லிக்கட்டு) :
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு.ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும்.
ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம் :

ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது.புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது.பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். 

வரலாறு 

15ஆம் நூற்றாண்டில் எருதுச்சண்டை ஸ்பெயின் நாட்டில் உருவானது. மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளுக்கும் பரவியது. அங்கு மாடோ மனிதனோ இறப்பது பொதுவானதென்றே கருதப்படுகிறது.எனவே, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாட்டுபோல் அல்ல ஜல்லிக்கட்டு. 
ஸ்பெயின் நாட்டில்கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் "Bull Bitting" என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. எனவே, இவ்விளையாட்டில் நமக்கு மட்டுமே மரபுரீதியான தொன்மையான நீண்ட அனுபவம் உள்ள விளையாட்டுக்கு மட்டுமே பிரதானமான இடமுண்டு. இதில் மனிதனுக்கோ காளைக்கோ மரணம் சம்பவிக்காமல் காக்கப்படுகிறது. முழுக்க முழுக்கப் பார்வையாளர்களின் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.


ஜல்லிக்கட்டு சிறப்பம்சம்: 
இவ்விளையாட்டு உண்மையில் காளைகள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கெனவே தனிக்கவனம் கொண்டு வளர்க்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இக்கூற்று மிகையாகத் தெரிந்தாலும் தைமாதம் முழுவதும் இந்த இளைஞர்களின் சுவாசமே வீரத்தை விருத்திப்படுத்துவதில் மையம் கொள்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களில் உள்ள "கோவில்மேட்டுப்" பகுதி இவ்விளையாட்டினை நிகழ்த்தும் களப் பரப்பாகவே கண்ணுக்குத் தெரிகிறது. மேலும் இந்த விளையாட்டின் மூலம் காளைகளுக்குத் தேவையற்ற வலியோ தீங்கோ இரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு இதனை நடத்தும்போது விதிமுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பார்வையில், மேலோட்டமாக மனிதன் காளைகளோடு மோதும் முரண்பட்ட விளையாட்டாகத் தோன்றினாலும் உண்மை அதுவன்று. எதிரிக்கு எதிரி போர்க்களத்தில் நண்பனாவதுபோல் இரண்டு வீரர்களும் வீரம் காட்டி விளையாடும் நுட்பம் இதில் மறைந்துள்ளது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளைப் பின்தொடர்ந்து வீரர்கள் குறித்த தூரத்தில் ஓடி விளையாட்டுக் காட்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்கள். இதனை மாடு பிடிக்கும் விழா என்றும் கூறுவதுண்டு. உண்மையில், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது மூன்றாம் நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த மேட்டுப்பட்டி எனும் இடத்தில் காணப்படும் குகைச்சித்திரத்தில் ஒரு தனி மனிதன் ஒரு காளையை அடக்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறம் மஞ்சு விரட்டு :
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது. ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதை நான் அறிகிறேன்.






காளையை அடக்கும் வீரதமிழர்கள் :
பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன்பின்
இவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்றுக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான பார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு
கவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது நமது பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.


காளை வளர்க்கும் உரிமையாளர்பயிற்சி!!
நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.
அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை

பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை இறந்து விட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை.ஆவரங்காடு, மற்றும் தேனீமலை , தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன ஏறுதழுவல் புகழ்பெற்றது.



ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டின் பல முறைகள்:

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. 

1. வாடி மஞ்சுவிரட்டு: மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று  அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். இம்முறை தஞ்சாவூர், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

2. விரட்டு மஞ்சுவிரட்டு அல்லது 
வேலி மஞ்சுவிரட்டு: இம்முறையில், பல காளைகள் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஓட விடப்படும்.அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும்,  இந்த காளைகளை அடக்க பல இளைஞர்கள் களத்தில் இறங்கி தத்தம் வீரத்தை காட்டுவர். இது பொதுவாக மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் விளையாடப்படுகிறது.

3. வட மஞ்சுவிரட்டு: 
தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
என் கருத்து :


1. காளைகளை சித்திரவதை செய்வதாக கூறப்படும் கருத்தை மாற்ற, காளைகளை திடலில் விடும் முன்பு, மருத்துவர்கள் அவைகளை பரிசோதித்து அவை எவ்வித சித்திரவதைகளுக்கும் உட்படவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

2. இந் நிகழ்ச்சிகளை வீதிகளில் நடத்த விடாமல் ஒரு விளையாட்டு திடலில் தக்க பாதுகாப்புடனும், பார்வையாளர்களை உயரிய இடங்களில் பத்திரமாக அமர வசதிகளுடன் நடத்தப்படவேண்டும்.

3. இதை ஒரு சமுதாய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி, இதற்கு ஒரு புது வடிவத்தையும், புதுப்பொலிவையையும் அளிக்க வேண்டும்.

4. பிற விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்று இவைகளை நடத்தவும் பெரிய வர்த்தக அமைப்புகள் நிதியளித்து ஊக்குவிக்கவேண்டும்.

5. கேரளத்தில் நடைபெறும் படகு விழா போன்று இந்த விளையாட்டையும் பிற நாட்டினர் வந்து கண்டு களிக்க ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியாக அமைக்கவேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

1 comment:

  1. mikka nandri ithu pondru tamil martial and war arts

    ReplyDelete