Wednesday 5 March 2014

மாணவர்கள் பாடங்களை படிப்பது எப்படி ? ஒரு சிறப்பு பார்வை ...

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம்.

ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்கு அவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து, நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறைய மாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.


படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். “பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவதுதான் படிப்பதன் முக்கிய நோக்கம்” – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.


படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.


1). நன்றாக கவனித்தல் (Observation)
2). தொடர்பு படுத்துதல் (Correlation)
3). செயல்படுத்தல் (Application)


 நன்றாக கவனித்தல்:  
நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.


தொடர்பு படுத்துதல்: 
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம்நினைவிலிருக்க உதவுகிறது.

செயல்படுத்தல்:
நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால்,அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்கஉதவுகிறது.

கற்றல் செயற்பாங்கு : (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.

குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.

ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.

ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப்புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்தமுடியும்.

ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது.

கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும்.

தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.

இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)

வினா எழுப்புதல்:(Asking Questions)
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம்அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)


வாசித்தல் (Read):
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்:
வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

தேர்வு எழுதிப் பார்த்தல்:
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.


பெற்றோர்கள் கவனத்திற்கு:

பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நாம் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக 4 மணிநேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம். ஒவ்வொரு பணியுமே முறையான இடைவெளியை கொண்டதாக இருக்க வேண்டும். 

நீண்டநேரம் தொடர்ந்து படிப்பதன்மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன் குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மூளை நன்கு செயல்படும். படிப்பின்போதான சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் உடனேயே படிப்பை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக படிப்போடு சம்பந்தப்பட்ட வேறு சில நடவடிக்கைகளை செய்யலாம். அந்த நடவடிக்கைகளை படிப்பிற்கு திட்டமிடும்போதே முடிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட பாடத்தை தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன் ஒரு மாணவரின் மூளைக்கு சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் ஒரு ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. 

வீட்டில் அதிகபட்சம் ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு மணிநேரம் படிக்கலாம். பின்னர் சிறிது இடைவெளி நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீரோ, தேநீர் அல்லது காபியோ அருந்தலாம். ஆனால் அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ செலவிடப்படக்கூடாது. ஏனெனில் அதன்பிறகு மீண்டும் படிப்பிற்கு திரும்புவது சிரமமாகிவிடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கான முக்கிய நோக்கமே கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். 

ஒரே முறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து, அதன்மூலம் மன அழுத்தமும் அதிகமாகிறது. ஒரு நாள் முழுவதும் படிக்கையில், பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக நீங்கள் வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம். இதைத்தவிர வேறுசில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும் வேலையை செய்துகொண்டிருந்தால், அதைமுடித்துவிட்டு படிக்கும் வேலையை தொடங்கலாம். மேலும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து பார்க்கலாம். இதன்மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து, பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம்.

 படிப்பதில், மேலே சொன்னதைப் போன்ற மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும் திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான் நாம் அதிகமான பலன்களைப் பெறமுடியும்.



என்னுரை :
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நிகழ்காலத்தை ரசித்து, எதிர்காலத்தைபற்றி சிந்தித்து செயலாற்றும் போதுதான் வாழ்க்கையில் வெற்றி எளிதாக கிடைக்கிறது.அறிவோடு கூடிய ஞானமும், அன்போடு கூடிய கருணையும், உண்மையோடு கூடிய கடின உழைப்பும், உண்மையாக வாழ்தலும் உங்கள் வாழ்வில் வெற்றியை கொண்டு வரும்.மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உயர வாழ்த்து கிறேன். உண்மையோடும், செயலாக்கத்தோடும், உறுதி யோடும் இருந்தால் இந்த உலகம் உங்களது. மகாத்மா காந்தி அடிகள் சொன்னார் உண்மை எங்கு ஆட்சி செய்கி றதோ அங்கு வெற்றி இருக்கும்.படிப்பது என்பது நினைவுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்துகொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.
மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.


1 comment: