Friday 6 February 2015

பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் ஏன் இருபத்தெட்டு நாட்கள் வந்தன ?

 இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.
மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.
பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.
ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.
அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.
ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.
இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.
எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.
கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.
இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்..

No comments:

Post a Comment