Sunday 8 March 2020

இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !!

பெண் சுதந்திரம்’ என்று பேசிக் கொண்டே, மற்ற பெண்கள் சுதந்திரமாக உலா வர முடியாதபடி நடந்து கொள்பவர்கள் மேல் பெரிய நம்பிக்கை இல்லை.. வார்த்தைகளில் இல்லை எதுவும்... வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது எல்லாம்!
உலகில் எத்தனையோ பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. மற்றவர்களை உயர்த்தி இருக்கிறார்கள்! சிலர் கடுமையான போரட்டங்களின் மூலம் அந்த வெற்றியை அடைந்திருக்கலாம். சிலர், புரிய வைத்து அடைந்திருக்கலாம். சிலர் பிரியமானவர்களுக்கு விட்டுக் கொடுப்பதின் மூலம் அடைந்திருக்கலாம். சிலர், விமர்சனம், புகழ் என்று எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்த தன் ஆர்ப்பாட்டமற்ற செயல்பாடுகளின் மூலம் அடைந்திருக்கலாம். இன்னும் சிலர் அமைதியான அகிம்சை முறையால் என பலவேறு வழிமுறையில் வாழ்க்கையின் வெற்றியை அடைந்திருக்கலாம். வெற்றிக்கு ஒரேவழி மட்டும் கிடையாது.
உதாரணமாக சர்க்கரை தண்ணீரில் கரையும். ஆனால், தண்ணீரில் கற்பூரம் கரையாது!.. அதைக் கரைக்க நெருப்பு தேவை. ஆனால் இந்த இரண்டிலும் தங்கம் கரையாது. அதைக் கரைக்க வேறொரு ராஜதிராவகம் தேவை..
அதேபோலத்தான், காரியங்களை சாதிப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன.. அவை அந்தந்த சூழலுக்கும் மனிதர்களுக்கும், அந்தந்த மண்ணின் மனிதர்களின் இயல்புக்கும், கலாச்சாரத்துக்கும் தகுந்தபடி இருக்கின்றன.. வெற்றிக்கு ஒரே வழி தான் என்று எதிர்ப்பையும் வெறுப்பையும் காட்டுவோரிடம் ஜாக்கிரதையாகவே இருப்பது நலம்.
அனைத்துப் பெண்களும் நலமாக இருந்தால்தான், அவர்களைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் நலமாக இருக்கும்.. உலகம் நலமாக இருக்க உங்கள் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

 உங்கள் அ.தையுபா அஜ்மல் 

No comments:

Post a Comment