Sunday 15 April 2012

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு-ஒரு பார்வை ...



இன்று அம்பேத்கர் பிறந்த தினம்....


இன்று அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டமேதை' என்று அழைக்கப்படும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த போதிலும் தனது கடுமையான உழைப்பால் சிகரங்களை தொட்டார் ..


பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை கைகளில் திணித்தது. ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது


தாழ்த்தப்பட்ட மாணவராக பிறரால் ஒதுக்கப்பட்ட இவர், பள்ளி ஆசிரியர் "அம்பேத்கர்' என்பவரால் ஆதரிக்கப்பட்டதால் தன் பெயரையும் அம்பேத்கர் என பின்பு மாற்றிக் கொண்டார்.

சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதும் சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் தனிக்குவளையில் தண்ணீர், மாட்டு வண்டியில் கூட சமமாய் அமர்ந்து வர இயலாமை என தீண்டாமையின் கொடுமைகள் அவருடைய மனதைச் சுட்டன.பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப் போல அவரால் நடமாட முடியவில்லை. ஓரமாக அமர்த்தப்பட்டார். கரும்பலகையில் மற்ற மாணவர்களைப் போல எதுவும் எழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தபோது, அது புனிதமானது அதை தாழ்த்தப்பட்டவர்கள் கற்கக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவையே அவரை பின்னாளில் தலித் இனத்தின் விடுதலைக்காகப் போராடத் தூண்டின.
டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன்னுடைய பதினேழாவது வயதில், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ரமாபாயைத் திருமணம் செய்து கொண்டார். கல்வியில் மிக அதிக ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த அம்பேத்கார் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.
இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பல்வேறு நாடுகளில் கலாச்சாரங்களில் வாழ்ந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் இந்தியா இன்னும் மாறாமல் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தார். தன்னுடைய பணி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதே என்று முடிவெடுத்தார். தலித்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்பதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினார்.தான் பிறந்த மதத்தில் குறைந்தபட்ச மரியாதை கூடப் பெறமுடியாத நிலையில் தலித் சமூகம் இருப்பதைக் கண்டு இதயம் நொந்தார்.
உலக நாடுகள் தரும் மனித உரிமைகள் என்பவையெல்லாம் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு இந்தியாவில் நிராகரிக்கப்படுவது கண்டு அம்பேத்கார் ஆவேசமடைந்தார்.சில மதவாதிகளின் சுயநல வளர்ச்சிக்காக கட்டப்பட்ட சாதீய அமைப்பு ஒழிந்தால் இந்தியா வலுப்பெறும் என்னும் சிந்தனை அம்பேத்காரிடம் நிறைந்திருந்தது. சிந்தனைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் சிந்தனைகளின் செயல்பாட்டுக்காக அயராது பாடுபட்டதால் இன்று அம்பேத்கர் உரிமைக் குரலின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார்.தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இருக்கும் சாதீய அடக்குமுறையையும், சீரான வளர்ச்சியையும் அடைய முடியும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். எனவே தான் அவரால் காந்தியின் கொள்கைகளோடு பல நேரங்களில் ஒத்துப் போக நேர்ந்ததில்லை. காந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அல்ல, ஆதிக்க சாதியில் இருந்து கொண்டு ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சீர்செய்து விட முடியாது என்று கருதினார் அம்பேத்கர்.தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்றும் கடவுளின் குழந்தை என்றும் காந்தியடிகள் பெயரிட்டழைத்ததை அம்பேத்கர் வெறுத்தார். தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா என்று குரல் எழுப்பினார். மேற்பார்வைக்கு விதண்டாவாதமாகத் தோன்றினாலும் அம்பேத்கரின் ஆழமான சிந்தனையே இந்த பதிலுக்குக் காரணம்.
கோயில்களில் அனாதைகளாய் விடப்படும் சிறுவர்களையே கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததை அம்பேத்கர் அறியாதவர் அல்ல. குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவே தான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார்.கற்பி, போராடு, ஒன்றுசேர்’ எனும் அம்பேத்காரின் முழக்கம் அவர் கல்வியின் பால் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியின் சாரலில் கூட நனைந்து விடாதபடி துரத்தப்பட்ட அன்றைய சூழலில், மாகாராஷ்டிராவில் வாழ்ந்த ஜோதிபா புலே தாழ்த்தப்பட்டவர்களுக்காக கல்வி நிறுவனங்கள் துவங்கிய நிகழ்ச்சியும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் பாகுபாடற்ற பார்வையும் அவரைக் கவர்ந்தன. கல்வி குறித்து அவர் விரிவாகப் பேசுவதற்கு இவை காரணிகளாக அமைந்தன.கல்வியைப் பரப்புவது, தலித் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என தான் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் அம்பேத்கர். மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க அம்பேத்கரின் தீவிர முயற்சியே காரணம்.1927 டிசம்பர் 25ம் நாள் மகாராஷ்டிராவின் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடினார் அம்பேத்கர். அவருடைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.
மனுஸ்மிருதியை அவர் கொளுத்தி, மனுஸ்மிருதி என்பது சாதீய அடிப்படையில் மனிதனை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்தார்.தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையும் உரிமை பெறவேண்டும் என்பதற்காக அவர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் நடத்தினார்.இந்தியாவில் தலித்கள் மட்டுமல்லாது, பெண்களும் ஒடுக்கப்படுவதை அம்பேத்கார் கடுமையாக எதிர்த்தார்.பெண்விடுதலைக்காகக்குரல்கொடுத்தார்.அம்பேத்கார் இன்று தலித் மக்களின் பிரதிநிதிபோல சித்தரிக்கப்படுவதனால் அவருடைய பல சிறப்புகள் பின்வரிசைக்குச் சென்றுவிடுகின்றன.அவர் ஒரு மிகச் சிறந்த பொருளாதார மேதை. அவர் மிகச் சிறந்த பேச்சாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்.
இந்திய சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர். கலிபோர்ணியா பல்கலைக் கழகத்தில் படித்தவர். ‘பிராப்ளம் ஆஃப் எ ருப்பீ’ என்னும் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.நுணுக்கமான சட்ட அறிவு பெற்றவர். மக்கள் நலனிலும், ஜனநாயகத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மிகச் சிறந்த படிப்பாளியும் கூட. அவருடைய நூலகத்தில் சுமார் ஐம்பதாயிரம் புத்தகங்களைப் பாதுகாத்து வந்தார்.பகவத் கீதையையும், இராமாயணத்தையும் முழுமையாகப் படித்து அதைக் கேள்விக்குள்ளாக்கினார் அம்பேத்கார். ராமரும், கிருஷ்ணரும் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல என்னும் அவருடைய முழக்கம் அவரை இந்து மத எதிர்ப்பாளராகச் சித்தரித்தது.‘பிறக்கும் போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தேன். இறக்கும் போது தீண்டத்தகாதவனாக இறக்க மாட்டேன். அதாகவது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்து இந்து மதத்திலிருந்து விலகி சாஸ்திரங்களை வெறுத்த புத்தரின் மதத்தில் இணைந்தவர் அவர். அவருடைய எழுச்சி மிகுந்த பிரச்சாரம் பலரை இந்து மதத்திலிருந்து விலகி புத்தமதத்தையோ பிற மதங்களையோ தழுவினர் பலர். அம்பேத்கரின் இந்த முடிவு புத்தமதத்தின் எழுச்சிக்கு ஒரு மிகப் பெரிய காரணியாயிற்று.புத்தமதத்தைத் தழுவியபின் அரசியலிலிருந்து விடுபட்டார்.
அரசியல் சூழலில் நல்லவர்களுக்கு வேலையில்லை என்பது அவருடைய தீர்மானமாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் இலங்கை போன்ற நாடுகளுக்கு புத்தமத கலந்துரையாடல்களுக்காக அவர் பயணம் செய்தார்.டிசம்பர் ஆறாம் நாள் 1956, பாபாசாகேப் அம்பேத்கார், தலித் இன விடுதலைக்காய் கொழுந்துவிட்டெரிந்த விளக்கு சட்டென்று அணைந்தது. அவருடைய மறைவு தலித் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை வெகுவாகப் பாதித்தது.தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இன்று பல அரசியல் அமைப்புகளும், மனித நல அமைப்புகளும் தீவிரமாய இயங்கியும், இன்னும் அம்பேத்கரின் கனவு முழுமையடையவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு மேல்வர்க்கம் என்று கருதிக்கொள்ளும் மக்களின் இறுகிய மனமே காரணியாகிறது.தலித் இயக்கங்களிடையேயும், தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் இன்று பரவலாகக் காணப்படும் குழு மனப்பான்மையும் அம்பேத்கரின் கனவை உடைக்கிறது. சாதியின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக போராடிய அவர் தலித்களிடையே சாதீய, குழு மனப்பான்மை விரிவடைவதை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்.தமிழ் பேசும் அம்பேத்கார் திரைப்படத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அம்பேத்கர் குறித்த சிந்தனைகள் எப்போதும் தமிழ் நெஞ்சங்களை விட்டு அகலாது என்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.
அம்பேத்கரின் நினைவு நாள் தலித் எழுச்சியின் தினமாக அல்லது தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் சமூகத்தினரின் விழிப்புணர்வாகக் கருதப்படுகிறது.அம்பேத்கரின் கனவுகளுக்குக் கால்முளைக்கும் நாளில் தான் மனித நேயத்துக்குச் சிறகுகள் முளைக்கும்.

அம்பேத்கர் கருத்துக்கள்

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.. http://www.ambedkar.in/photos/2011/11/12/ambedkar_life/


 அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

 

இத்திரைப்படம் சட்ட மாமேதை என்ற அளவிலேயே அறிந்திருந்த அம்பேத்கரின் முழு வடிவத்தையும் எனக்கு உணர்த்தியது. காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர். காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் திகழ்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக சுதந்திரத்திற்கு பின் பல ஆண்டு காலம் நாட்டை ஆண்டு வந்த மத்திய காங்கிரஸ் அரசு அம்பேத்கரை பற்றிய முழு உண்மைகளை இந்திய இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்காமல் தந்திரமாக மறைத்திருக்கிறது என்பதையும் இப்படமே உணர்த்தியது.

பொதுவாக வரலாற்றுத் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். அதிலும் அரை நூற்றாண்டு தாண்டிய திரைப்படங்களெனில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும் என்பது சினிமாத் துறையில் இருக்கும் எனக்கு நன்கு தெரியும்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் படத்தினை பார்க்கின்றபோது மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் போலவேதான் இருந்தது. 

படத்தின் மிகப் பெரும் குறை தமிழ் வசனங்கள் வழக்கு மொழியாக இல்லாமல் தூயத் தமிழாக அமைந்திருந்ததுதான். இந்த ஏற்பாட்டைச் செய்த புண்ணியவான் யாரோ..? ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தந்தையான அம்பேத்கரின் திரைப்படம் இது என்பதை உணர்ந்து செய்திருந்தால் இந்தத் தவறு  நடந்திருக்காது..

அம்பேத்கரின் 65 வருட கால வாழ்க்கையை முழுமையாகக் காட்டிவிட முடியாதுதான். அதனால் முடிந்த அளவுக்கு தற்போதைய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்க விரும்புகின்ற சினிமா மொழியில் சம்பந்தப்பட்டவைகளை ரத்தினச் சுருக்கமாக சுருக்கிக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இத்தனை படிப்புகளை படித்திருக்கும் முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதும், அந்த முதல் இந்தியரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதும் நமக்குப் பெருமையான விஷயம்தான். சிறு வயதில் அம்பேத்கர் படும் அவமரியாதைகளின் தொடர்ச்சியாகத்தான் அவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை நடந்தேறியது என்பதை திரைப்படம் பதிவாக்கியுள்ளது. 

மாட்டு வண்டியில் தனது சகோதரனுடன் பேசிக் கொண்டே செல்கையில் அவர்களுடைய பேச்சை வைத்தே அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து வண்டிக்காரன் வண்டியைக் கவிழ்த்துவிடும் காட்சி ஒன்றே போதும்.. இந்த அவமானத்தை தன்மானமுள்ள எந்த மனிதனாலும் மறக்க முடியாது. அம்பேத்கரின் முதல் சமுதாயப் புரட்சி எண்ணத்திற்கு இந்த விஷயமே அடிகோலியிருக்கலாம்..

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கின்ற சம்பவங்கள்.. அங்கே நடைபெறும் சம்பவங்கள்.. இந்தியர்களை கேலியாகப் பார்க்கும் மேல்நாட்டு வர்க்கத்திற்கு அம்பேத்கர் கொடுக்கின்ற சூடுகள் என்று படத்தின் துவக்கமே அதிரடியாகத்தான் இருந்தன.

கல்விக்கு இந்த மனிதர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் பரிபூரணமாக பதிவு செய்திருக்கிறது. 17 வயதில் ராமாபாயை திருமணம் செய்து முடித்த கையோடு வெளிநாட்டு வந்து படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அந்த மனிதரை என்னவென்று சொல்வது..?

நாடு திரும்பியவுடன் பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அவமானங்கள் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழே வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணியை கொண்டு வந்து கொடுக்க மனம் இடம் கொடுக்காத அளவுக்கு சாதிப் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் எத்தனை நாட்கள்தான் அம்பேத்காரால் பணியாற்றியிருக்க முடியும்.. இது குறித்து பரோடா மன்னருடன் அம்பேத்கர் பேசும்போது மன்னர் “இவ்வளவுதான் என்னால் முடியும்..” என்று சொல்வது அப்போதைய இந்திய அரசியல் சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும் இதே போன்ற சூழலை அவர் எதிர்கொள்ளும் காட்சியும் மிக அருமை. நீர் அருந்தவிடாமல் தடுத்ததையும் எதிர்த்து தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, “வேணும்னா நீங்க வரும்போது உங்க வீட்ல இருந்தே தண்ணி கொண்டு வந்திருங்க..” என்று அம்பேத்கர் சொல்லும் காட்சி மிக ரசனையானது..

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் தனக்கே இத்தனை இடர்ப்பாடுகளும், சோதனைகளும் கிடைக்கின்றபோது படிப்பறிவில்லாத ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன சோதனைகளை தினம்தோறும் சந்தித்து வருவார்கள் என்று அவர் சிந்தித்த வேளையினால்தான் இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரின் செயல்பாடுகள் ஓரளவுக்கேனும் உயர்ந்திருக்கிறது.

சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணித்தபோதிலும் அம்பேத்கர் அங்கு ஆஜராகி தான் சார்ந்த மக்களுக்காக வாதிடுவது மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்போரில் இப்போது இருக்கும் ஒரேயொரு வழக்கறிஞர் நான்தான்” என்று அம்பேத்கர் சொல்கின்ற வார்த்தைகள், அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே நுழைந்திருக்கும் சினிமா ரசிகனை நிச்சயம் தாக்கியிருக்கும் என்றே நம்புகிறேன்.

மகாராஷ்டிராவில் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மகத் என்னும் ஊரிலிருக்கும் செளதார் குளத்து நீரை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டம் அற்புதமானது. 

மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது.  அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை.. 

இதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் அந்தச் சூழலும் அம்பேத்கரை இன்னமும் அதீத வேகத்துடன் தனது இனத்து மக்களுக்காக உழைக்க வைத்திருக்கிறது.

படம் முழுவதும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்துமே சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் நாம் புரிந்து கொள்வது அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை வேண்டி நடைபெற்ற போராட்டம் அல்ல.. ஆண்டாண்டு காலமாக கடவுள்கள், சனாதன தர்மம், வேதங்கள், சாதிகள் என்று இந்து மதத்தில் இருந்த குழப்பங்களை சாக்காக வைத்து ஆதிக்கச் சாதியினர் நடத்திய கொடுமையில் இருந்து தனது இனத்துச் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட மக்களை மீட்க அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக காலாரம் கோவில் போராட்டக் காட்சி அம்பேத்கரின் போராட்ட உறுதியைக் காட்டுகிறது. மதம் என்பது தன்னை பின்பற்றும் அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாமல் வழி காட்டக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறிப்பிட்டவர்களை மட்டும் என்னைத்தான் தெய்வமாகத் தொழ வேண்டும். ஆனால் அருகில் வந்து தொழக் கூடாது. தூரத்தே நின்று அப்படியே போய்விட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கடவுளாவது சொன்னாலோ.. சொல்லியிருந்தாலோ.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுதான் சாலச் சிறந்தது.

இந்தக் கொள்கைக்காகத்தான் தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரையிலும் இந்துக் கோவில்களில் எங்களுக்கும் சம உரிமையுண்டு என்று போராடிய அந்த கோவில் போராட்டம் அழகுற படமாக்கப்பட்டுள்ளது.. தந்திரமாக தேரை இழுக்கும் உயர்சாதியினரின் கடைசி நேர சூழ்ச்சியைக் கண்டறியும் அம்பேத்கர் அதனை அவர்கள் பாணியிலேயே சென்று முறியடிக்க தனது மக்களை உசுப்பிவிடும் காட்சியில் திரையரங்கில் காது கிழியும் அளவுக்கு கை தட்டல்கள்.. 

அடக்கி வைக்கப்படும்போதுதான் சுதந்திரத்தின் அருமை தெரியும்.. இந்த அடக்குமுறையை எதிர்த்தாக வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரத்துக்கு செல்வதுதான் மிகச் சிறந்த வழி என்றுணர்ந்து அதற்கான வழிமுறைகளுக்குள் அம்பேத்கர் இறங்கியபோதுதான் இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்த காங்கிரஸின் இன்னொரு பக்கமும் அம்பேத்கருக்கு புரிந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் சூட்டி அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி, அவர்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறிய காந்தியார் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை.

முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்து கொண்டு தனது இனத்து மக்களுக்காக அவர் வாதாடுவது பதிவாகியிருக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி வெற்றி பெற்று வந்த அம்பேத்கரை காந்தியார் தனது தந்திரமான போர்க்குணத்தால் வெற்றி கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..

அவ்வாறு இரட்டை வாக்குரிமை தருவது அவர்களை இன்னமும் ஒதுக்குவது போலாகும். இந்து மதத்தை இரண்டாகப் பிரிப்பது போலாகும் என்று காந்தியார் மறுக்கிறார். அம்பேத்கரும் இதனை ஏற்க மறுக்கிறார். இருவரும் சம அளவிலான தலைவர்கள் என்பதை அப்போதுதான் உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் காந்தியார் வழக்கம்போல தனது உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். பூனாவின் எரவாடா சிறையில் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம், பிரிட்டிஷாருக்கு நான் முக்கியமா, அம்பேத்கர் முக்கியமா என்பதைச் சொல்லாமல் சொல்லியதாக நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகையில் நிச்சயமாக பிளாக்மெயில்தான்.

நான் சொல்வதைச் செய்.. இல்லையெனில் செத்துப் போவேன் என்று இன்னொரு மக்களுக்கு கிடைக்க வேண்டியதை நிறுத்துவது எப்படி அரசியல் போராட்டத்தின் கீழ் வரும் என்று தெரியவில்லை. ஆனால் அன்றையச் சூழலில்.. இந்தியாவில் காந்தியாருக்கு இருந்த தேசத் தந்தை என்ற பெரும் பெயரில் நிச்சயம் இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நாம் உணரக் கூடியதே..

இது பற்றிய பேச்சுவார்த்தைக்காக ராஜாஜியும், ராஜேந்திரபிரசாத்தும், பட்டேலும் அம்பேத்கரை சந்திக்கின்ற காட்சி சுவையானது. இந்தக் காட்சியில் ராஜாஜியின் முக பாவனை மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.. எத்தனை தலைவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் எவ்வளவு பெரிய ஆபத்தானவராக இருந்திருக்கிறார்.. எதிரியாக அவரைப் பாவித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்த இந்த ஒரு காட்சியே போதும் என்று நினைக்கிறேன்.

இரண்டு முறை காந்தியாரை நேரில் சந்தித்து பேசும் அம்பேத்கர் இறுதியில் வேறு வழியில்லாமல் நாட்டு நலனுக்காக தனது இனத்து மக்கள் நலனை பலிகடாவாக்கும் அந்தச் சோகக் காட்சியின் பதிவு இதுவரையிலும் எந்த ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலும் தென்படாதது. 

இதனைச் செய்துவிட்டு அம்பேத்கர் காந்தியாரிடம் தெரிவிக்கும் அந்தப் புகழ் பெற்ற வசனமான, ““காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் இன்னமும் தேவைப்படலாம்!”  என்பது காந்திஜி பற்றிய சிந்தனையை நமக்குள் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இந்த ஒரு வசனம்தான் என்றில்லை.. காந்தியார் பற்றிய அம்பேத்கரின் விமர்சன வசனங்கள்தான் தியேட்டரில் அதிக கைதட்டல்களைப் பெற்றன.

'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது'

'காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்துப் போராட்டம் செய்கிறாராம்' என்கிறார் ஒருவர். அதற்கு அம்பேத்கர் 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு" என்கிறார். 

இது எல்லாவற்றையும்விட இன்னொரு வசனம்தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. சொல்லியிருப்பது உண்மையென்றாலும் சென்சார் போர்டில் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த ஒரு விஷயத்துக்காக சென்சார் போர்டுக்காரர்களை பாராட்டலாம். அந்த வசனம் இதுதான் :

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை மட்டும் மாறாது.”

இந்த சில வசனங்கள் என்றில்லை.. இத்திரைப்படத்தில் பேசப்படும் அனைத்து வசனங்களுமே அரசியல் களத்தை சூடாக்குபவைதான். 

"ஆலய பிரவேசத்தைவிட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது.." என்று மாநாட்டு மேடையில் நின்று பேசுகின்ற காட்சி..

"நம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என நினைத்து மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை.." 

"பலர் புத்த மதமும், பொதுவுடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொதுவுடமை என்பது ஹிம்சை. புத்த மதம் அஹிம்சை.."

"எல்லா மதத் தலைவர்களும், தான்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதத்தில் மட்டும்தான் ஜாதி இல்லை." - என்று தனது நண்பர்களிடம் குமுறுவது.. 

"நாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்." என்று தன்னை சமாதானம் செய்ய வரும் இந்து மதத் தலைவர்களிடம் சொல்வது..

முழுக்க, முழுக்க அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும், கொஞ்சம் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையையும் இடையிடையே தொட்டுத் தொடரத்தான் செய்திருக்கிறார்கள். 

அவருடைய மனைவி ரமாபாயின் ஏக்கம், பரிதவிப்பு, அம்பேத்கரின் அருகாமையை உணர்ந்து காத்திருப்பது.. சாப்பிடாமல் இருப்பாரே என்ற கவலையுடன் டிபன் பாக்ஸுடன் அலுவலகத்திற்கு ஓடி வருவது.. இரண்டாவது முறையாக கல்வி பயில அம்பேத்கர் லண்டன் கிளம்பும்போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பது.. அடுத்தடுத்து தனக்குப் பிறந்த பிள்ளைகளை இழப்பது என்ற கொடூரத்தில் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையின் இன்னொரு புறத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு சிற்சில விஷயங்களைப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பார்வையாலும், காட்சியாலுமே நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார். அம்பேத்கருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை வேலைக்காரன் கேட்கின்ற கேள்விக்கு “ஏன் என்னை சீக்கிரமா சாகடிக்கணும்னு பார்க்குறியா?” என்ற பதிலின் மூலம் உணர்த்தி எந்த மாதிரியான வாழ்க்கை முறையில் இந்தத் தலைவர் தனது இனத்து மக்களுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தனது சோகமான வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வயலின் வாசிப்பதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும், அது ஒன்றையே தனது ஓய்வு நேர செலவழிப்பாகவும் கருதிய அம்பேத்கரின் கலை ரசனையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 

முதல் மனைவியின் இறப்புக் காட்சியில் இருக்கும் ஒரு கவிதைத்தனம் மிக ரசிப்புக்குரியது. பதைபதைப்புடன் தன்னைக் காண ஓடி வரும் கணவனிடம் “வெளியில் மழை பெய்கிறதா..?” என்று மனைவி ரமாபாய் கேட்கின்ற கேள்வியின் தொடர்ச்சியாக அவர்களது கல்யாண தினத்தன்று கொட்டித் தீர்த்த மழையில் ஒட்டி நின்ற அவர்களது முதல் நெருக்கத்தை அப்போதும் நினைத்துப் பார்க்க முயல்வது.. மிக உச்சமான ரசனைத்தனம்.

தனது முதல் மனைவி இறந்த பின்பு மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் தனது நலனையே பெரிதும் விரும்பி கவனித்துக் கொண்ட தாதியையே விரும்பி மணந்து கொண்ட அவரது இன்னொரு மணவாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது.

காந்தியார் நேருவிடம் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்கச் சொல்லியும் சட்டத் துறையை வழங்கக் கோரியும் சிபாரிசு செய்வதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 

அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை. அதே சமயம் காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் இருந்திருக்கிறார் நேதாஜியைவிடவும். கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது நேதாஜி ஜெயிப்பதற்காக நிறைய உதவிகளையும் அம்பேத்கரே செய்திருக்கிறார்.

இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன். நேரு இதனை எற்றுக் கொண்டதுகூட இந்தியத் திருநாட்டுக்குக் கிடைத்த நன்மைக்கே.

பிரிட்டிஷ் இந்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை முறைப்படுத்தி உத்தரவிட்டவர் அம்பேத்கர்தான். 

அந்த அனுபவத்தோடும் தனக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர்களின் உதவிகள் கிடைக்காத சூழலிலும் தனியொரு மனிதனாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருப்பது மிகப் பெரும் சாதனை. 

இது பற்றி அப்போதைய பாராளுமன்றத்தில் எடுத்துக் காட்டும்போது அம்பேத்கர் மட்டுமே இதனைச் செய்து முடித்துள்ளார் என்கிறார் ஒரு உறுப்பினர். உடனேயே அம்பேத்கர் எழுந்து, “எனது சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த வேலையை செய்து முடித்தேன்..” என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார். இதனை எத்தனை தலைவர்களிடத்தில் காண முடியும்..?

பெண்களுக்கான ஜீவனாம்சம், மறுமண உறுதிச் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய இந்துச் சட்டத் திருத்தத்தை அம்பேத்கர் 1951-ம் ஆண்டு கொண்டு வந்தபோது, அதற்கு எழும்பிய எதிர்ப்பும், இதனைக் கண்டும் காணாததுபோல் பிரதமர் நேரு நடந்து கொண்டதையும் பார்த்துதான் மனம் வெறுத்து தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு சட்ட மாமேதையின் உதவியை இந்தியப் பாராளுமன்றமும், இந்திய அமைச்சரவையும் விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே இழந்தது மிகக் கொடுமையான விஷயம். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்து சனாதனவாதிகள் என்றாலும் தீவிர நாத்திகர் என்று கருதப்படும் பண்டித நேரு எதற்காக இதற்கு உடந்தையாக இருந்தார் என்பது பற்றியும் இன்னொரு பக்கம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அன்றையச் சூழலில் இந்தியப் பிரதமர்வரையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவகையில் இருந்த இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

எந்தப் பக்கம் போனாலும் தான் ஒரு இந்துவாக இருப்பதாலேயே தான் அசிங்கப்படுத்தப்படுகிறோம் என்பது அம்பேத்கருக்கு மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாகவே அவர் இந்து மதத்தைத் துறப்பது என்ற முடிவுக்கு வந்து பெளத்தத்தை தழுவியிருக்கிறார்.

செய்தி கேள்விப்பட்டு சமாதானத்திற்கு ஓடி வரும் இந்து மடாதிபதிகளிடம் “நாங்கள்தான் தீண்டத்தகாதவர்களாயிற்றே.. நாங்கள் உங்களுடன் இருந்தாலென்ன? போனாலென்ன..?” என்று அம்பேத்கர் கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான். 

கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம் என்று இன்னும் புகழடைந்த பெரிய மதங்கள் இருந்தும் அம்பேத்கர் உருவ வழிபாடோ, மனிதர்களிடையே எவ்வித அடையாள பாகுபாடோ இல்லாத மதம்தான் தன்னை நாடியிருக்கும் மக்களுக்குத் தேவை என்று சொல்லி பெளத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்.

இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டும் தனது மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது இந்து மதமே என்றுணர்ந்த அவரது அந்த இறுதிச் செயல்தான் இந்திய அரசியல் வரலாற்றில் அம்பேத்கரின் பெயரை இன்றைக்கும் நிலைநிறுத்தியிருக்கிறது எனலாம்.

சாதியை எதிர்ப்பேன் என்பவர்களும், சாதியை நான் ஒரு பொருட்டாக கருதுபவனில்லை என்பவர்களும், சாதியெல்லாம் நான் பார்ப்பதில்லை என்று சொல்பவர்களும் மூல காரணியான இந்து மதத்தைவிட்டு விலகுவதில்லை. அதில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதைத் தூக்கியெறிய வேண்டும் என்று சொல்லி செயலிலும் செய்து காட்டியிருப்பவர் அம்பேத்கர் மட்டுமே. இதற்காக அவர் தொடுத்திருக்கும் காரணங்கள் மிக, மிக நியாயமானவை.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வோடு திரைப்படம் நிறைவடைகிறது.. இதுதான் எனது வருத்தமும்கூட.. அவரது இறப்பு மற்றும் இறுதி ஊர்வலக் காட்சிகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் மெகா ஸ்டார் என்னும் மம்முட்டி. எந்த இடத்திலும் கேரளாவின் முன்னணி நடிகராக அவர் தென்படவில்லை. முதல் காட்சியில் இருந்து முடிவுக்கு வருகின்றவரையிலும் அம்பேத்கரை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.


காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் தன் கையில் இருந்த புத்தகத்தை நழுவவிட்டுவிட்டு தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிற்கும் ஒற்றை ஷாட்டிலேயே அத்தனை சோகத்தையும் காட்டிவிட்டார் மம்மூக்கா.

மம்முட்டியின் ஆவேசமில்லாத இயல்பான இயல்பான நடிப்பு, ஜின்னாவை பாராளுமன்ற லாபியில் அவர் சந்தித்து பேசுகின்ற காட்சிதான். முதல் மாநாட்டில் அவர் கையை உயர்த்தி "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்.." என்று முழுக்கத்துடன் ஆரம்பிக்கும் அவரது ஆட்சேபணையான குரல்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரையிலும் தொடர்ந்துள்ளன. இவரது மனைவியாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்ணி இந்த ஒரு திரைப்படத்தில்தான் இப்படி சாந்த சொரூபியாக நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்கான அப்பாவி இந்திய மனைவிமார்களின் ஒரு அடையாளமாக இருந்திருக்கிறார் ரமாபாய். கூடவே அம்பேத்கரின் அண்ணனுக்கும், அவருக்குமான குடும்பப் பிரச்சினைகளையும் மறைக்காமல் காட்டியிருப்பதும் நேர்மையான விஷயம்தான்.

இத்திரைப்படத்தில் காந்தியாரை காட்டியிருப்பது வேறு எந்தத் திரைப்படத்திலும் இப்படி நகைச்சுவையாக காட்டவேயில்லை.இந்தியாவின் அடையாளம்.. அஹிம்சையின் மறு உருவம் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மனிதரை அவருடைய உடல் அசைவுகளினாலும் திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பரோடா, நாக்பூர், பூனா, கொலம்பியா, லண்டன், டெல்லி, மும்பை என்று பல இடங்களையும் சுற்றி வந்தாலும் நிஜத்திற்கு அந்தக் கால  வாழ்க்கையை வடிவமைக்க கலை இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றதில் பெரிய ஆச்சரியமில்லை. அதேபோல் இத்திரைப்படம் பெற்ற விருதுகளெல்லாம் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டியவைதான். இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..

இத்திரைப்படம் இப்போது சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் மட்டுமே காலை காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரை நாள் விடுப்பு எடுத்தாவது இத்திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள்.. உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை இத்திரைப்படம் எடுத்துச் சொல்கிறது.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிரதிகள் மிகக் குறைவாக இருப்பதாலும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சோம்பலினாலும் இனிமேல்தான் சென்னையைத் தாண்டிய பகுதிகளுக்கு இப்படம் வரப் போகிறது. அப்படி வரும்பட்சத்தில் கண்டிப்பாகப் பார்க்கத் தவறாதீர்கள்.

பள்ளிப் பருவத்தில் வெறும் சட்ட மேதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என்ற இரண்டு பிரிவுகளில் மட்டுமே நம் கண் முன்னே அம்பேத்கரை கொண்டு வந்திருக்கும் இப்போதைய அரசியல் ஆட்சியாளர்களின் முகத்திரையை இத்திரைப்படம்தான் கிழித்திருக்கிறது.

செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளை இத்திரைப்படம் நமக்குள் எழுப்புகிறது. 

இந்தச் சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டுமாயின் நாம் பள்ளிப் பருவத்தைப் புறக்கணித்து அம்பேத்கரை வெறும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் இருக்கின்றபோது இது போன்ற திரைப்படங்களை வரவேற்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
படத்தை பார்பதற்கு ...

பொறுமையுடன் படித்தமைக்கு எனது நன்றிகள்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.






1 comment:

  1. Ambedkar was also critical of Islam and its practices in South Asia. While justifying the Partition of India, he condemned the practice of child marriage, as well as the mistreatment of women, in Muslim society.

    http://en.wikipedia.org/wiki/B._R._Ambedkar

    ReplyDelete