Wednesday 8 February 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்......


 

‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?

அக்பர்
அனைத்து வகையான ஊடகங்களும், இணையமும் சம காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக தொடுக்கிற போரை விட பலமடங்கு அதிகமான சிலுவைப் போர்,தாத்தாரிய படையேடுப்பு,வாள்,பேனாமுனை தக்குதல்களை இஸ்லாம் சந்தித்து வென்று இன்றும் கலப்படமற்று நிற்கிறது. இதோ வரலாறு

முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதி பாடும் இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். “மகாத்மாவைக் கொண்ட ஓர் அரசன் பிறப்பான்;அவன் பசுவைக் காப்பான்” என்று கதை விட்டனர்.

நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர்.அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீஃபா’என்றும் ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
ஆகவே இறைவனின் புதிய அவதாரம் அக்பர் புதிய மதத்தை தொற்றுவித்து அந்த மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.அக்பர் அவனது பிரதிநிதியாவார்) இப்புது மதத்தை தழுவியவர்கள் தம் ‘பாரம்பரிய மதமும் மூதாதையரிடமிருந்து கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொண்ட மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹி’யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர். முகமன் கூறும் முறையும் மாற்றப் பட்டது.( ‘அஸ்ஸலாமு அலைக்கும்’என்பதற்கு பதில்) ஒருவர் ‘அல்லாஹ்’ என்று கூற மற்றவர் பதிலுக்கு ‘ஜல்லா ஜலாலுஹு’ என்பார்.இச்சொற்கள்,சக்கரவர்த்தியின் ஜலாலுதீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.

சேலர்கள் தம் தலைப்பாகைகளில் அக்பரின் உருவத்தை ஒத்த உருவங்களை அணிமாறு பணிக்கப்பட்டனர்.அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் அரசனை அதிகாலையில் தரிசிப்பதைக் கொண்டு மக்கள் இதனை நிறைவேற்றினர்.அரசனின் திருமுன் வருவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்துவிட்டால் முதலாவதாக அவர் அரசருக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.அவரே தம் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் நிரைவேற்றுவார் போல ஆலிம்களும்,சூஃபிகளும் கூட அரசனுக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.

இஸ்லாத்துக்கு முரணான இச்செயலை அவர்கள், ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காக காலில் விழுதல் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். தீ வழிபாடு பாரசீக ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப் பட்டு, எப்போழுதும் அரசமாளிகையில் தீ எரிந்துக் கோண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்குகளும் மெழுகுத்திரிகளும் ஏற்றப்படும் போது அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது.
‘மணி அடித்தல்’, ‘மும்மூர்த்திகளை வழிபடல்’ போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவலாகப் பெறப்பட்டன.எனினும் இந்து மதமே அதிக ஆதரவைப் பெற்றது. ஏனெனில் அதுவே நாட்டின் பெரும்பான்மை மக்களது மதம் என்கிற அரசியல் காரணம் இருந்தது.சாம்ராஜ்யத்தை ஆள்வதை உறுதிப்படுத்துவதற்கு இந்து மதத்துக்கு அதிக ஆதரவு அளிப்பது அவசியம் ஆயிற்று.

பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அரசமாளிகையில் ‘ஹவான்’ முறையாக நடைபெற்றது. அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு இடம்பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால்,அதை கேட்டவர்கள் “அதன் புகழ் ஓங்குக” என்பர் மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது.

அதேவேளை அக்பரும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். அஹ்மத்,முஹம்மத் போன்ற பெயர்கள்கூட வழக்கொழிக்கப்பட்டு, இச்சொற்களைக் கொண்ட பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.பாரசீக மொழியில் பெரோஸ்,பைரோஸ் போன்ற பெயர்கள் சூட்டப் பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் இடங்களில் வாழ்த்துச் சொற்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டனர். சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறினர் (இறைவன் மன்னித்தருள்வானாக!).

அரசனின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு,ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து அவற்றை இழித்துரைத்தார். அரசவைக் கவிஞர்கள் இக்கடமைகளைக் கிண்டல் செய்து புனைந்த கவிதைகளுக்கு உயர்ந்த சன்மானங்கள் வழங்கப்பட்டன. நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.
(Akbar holds a religious assembly of different faiths in the Ibadat Khana in Fatehpur Sikri.)
எல்லா மதங்களையும் நுணுகி ஆராய்வதற்காக ஓர் அரசாணை மூலம்நாற்பது பேரைக் கொண்ட ஒரு சபை நியமிக்கப்பட்டது. இவர்கள் ஏனையமதங்களை ஆராயும் பொழுது மிக்க சகிப்புத் தன்மையோடும் கண்ணியமாகவும் நடந்துக் கொள்வர் என்றும், இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் வெளிப்படையாகவே அவமதிப்பர்கள்.இஸ்லாத்தை ஆதரிப்பவர் எதுவும் சொல்ல முற்பட்டால் உடனே அவர் அடக்கப்பட்டு விடுவார்.நடைமுறையில் இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன;அல்லது வெட்கக் கேடான முறையில் திருத்தப் பட்டன.

வட்டி,சூதாட்டம்,மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது.அதிகாலையில் பன்றியின் முகத்தில் விழிப்பது நற்சகுனத்துக்குரிய செயலாகக் கொள்ளும் அளவுக்குப் பன்றி புனிதத்தன்மை பெற்றது.

இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன;அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று யாரேனும் வற்புறுத்தினால்,அவ்வுடலின் கால்களைப் புதைகுழியில்‘கிப்லா’வுக்கு நேராக வைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சூஃபிஸத்தை ‘தீனே இலாஹி’யின்ஆதாரவுமதம் என்று ஆன்மீகத் தலைவர்கள் மற்றொரு நோயையும் மக்களிடையே பரவச் செய்தனர்
அவர்கள் கிரேக்கத்தத்துவங்களையும் கடுத்துறவு கோட்பாடுகளையும்,
வேதாந்தத்தையும் கலந்து புதுமையான,தத்துவரீதியான சூஃபித்துவக் கொள்கை ஒன்றை தோற்றுவித்தனர். அது எவ்வகையிலும் இஸ்லாமிய ஒழுக்க முறைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. இந்த சூஃபித்துவ அமைப்புகளுக்கும் ஷரீஅத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலை உருவாகி சூஃபிகள் ஷரியத்தை பின்பற்ற தேவையில்லை என்றார்கள்.
அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)

பின்குறிப்பு:
அவ்ரங்கசீப் பற்றி வரலாற்றுரீதியான ஆதாரங்களோடு நடுநிலையோடு எழுதப்பட்ட நூல்கள் ஏராளமாக இருக்கின்றன அதில் குறிப்பிடத் தக்கது சே.திவான் அவர்கள் எழுதிய அவ்ரங்ஜேப் அந்த புத்தகம் வேறு கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது முடிந்தால் அந்த நூலை வாங்கி படியுங்கள்

1 comment:

  1. கிடைத்த கேப்பிலெல்லாம் சூபிகளை சாடியுள்ள நீங்கள் ஏன் ஷெய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தி (ரஹ்) அவர்களும் ஒரு சூபியே என்பதை குறிப்பிடவில்லை?
    ஷெய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தி (ரஹ்) அவர்களின் வஹ்ததுஷ் ஷுஹுத் பற்றி அறிந்திருக்கிறீர்களா? உங்களிடம் ஒரு நடு நிலையான விமர்சகனுக்கு தேவையான நேர்மையில்லை.

    ReplyDelete