இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனக்கு அலையாத்தி (லகூன்) எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. ஏதேச்சையாக எனது நண்பன் மூலமாக அறிய நேர்ந்த ஓர் அற்புத இடம். எனது நண்பன் வசிக்கும் கரம்பக்குடியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைந்திருந்தாலும், அது வரையிலும் கேள்விப்படாமலும் அங்கு சென்று வராமலிருந்ததை இப்பொழுது நினைக்கும் பொழுது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
அது ஒரு ஆச்சர்யக் காடு என்றால் மிகையில்லை. எனக்கென்னவோ, நாமெல்லாம் படங்களில் பார்த்து அசந்த அந்த அமேசான் காடுகளில் இரு மருங்கும் அடர்ந்த வனப் பிரதேசத்தின் ஊடாக ஓடும் நீண்ட ஆற்றினூடாக ஒரு பயணத்தை கொண்டதாக நினைக்கச் செய்தது; இந்த முத்துப்பேட்டை லகூனில் பயணித்ததின் மூலம், அப்படியானதொரு அழகு!
அந்த சதுப்பு நிலக் காட்டினை (Mangrove Forest) சென்றடைய இரண்டே மணி நேர பயண ஏற்பாட்டின் பேரில் இரண்டே பேருந்துகள்தான் எனக்கு எடுத்தது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக நண்பன் ஆர்வத்தின் பேரில் இணையத்தில் தேடி இரண்டு வலைப்பதிவுகளின் மூலமாக கிடைத்த கட்டுரைகளை படிப்பதற்கென அச்சுப் பிரதி வீட்டிற்கு எடுத்து வந்திருந்தார்.
எங்களது திட்டம் அவரது வீட்டிற்கு முன்னிரவே வந்துவிடுவது எனவும், இரவு தங்கலின் பொருட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும் திட்டமிட்டோம்.
காலை உணவை வீட்டில் வைத்துக் கொள்ள அவகாசமின்றி கிடைத்த ஆறு மணி பேருந்தை பிடித்தோம். பட்டுக்கோட்டையில் இறங்கிய நேரம் காலை சிற்றுண்டி முடிக்கத் தகுந்த நேரமாகிப் போனதால், ஹோட்டல் லக்சுமி நாராயணனில் இனிமேல் காலை உணவே சாப்பிடப் போவதில்லை என்ற அளவிற்கு ஒரு கட்டு கட்டி வயிற்றை நிறைத்துக் கொண்டோம்.
எங்களின் பேச்சு அதிகமாக புத்தகங்களைப் பற்றியும் அதனை எழுதிய சமகால மனிதர்களின் நிஜ வாழ்க்கையின் பயணிப்பு பற்றியும், எப்படியுமாக சந்தர்ப்ப வாதம் மனிதர்களின் வாழ்வியல் கோட்பாடுகளையே புரட்டிப் போட்டு விடுகிறது எனவும், அதனையும் மிஞ்சிய சில 'பிழைக்கத் தெரியாத' படைப்பாளிகளைப் பற்றியுமாக சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இரண்டு மணி நேரப் பயணம் அரைமணி நேரமாக பயணித்தது. அவர் என்னைக் காட்டிலும் தமிழில் அதிகமாக வாசித்திருந்ததாக தெரிந்து கொண்டேன்.
அந்தப் பெட்டிக் கடையிலேயே கொஞ்சம் கொறிப்பதற்கென பண்டங்களும், தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு 30 ரூபாய் கொடுத்து லகூனை(அப்படித்தான் அந்த ஊரை குறிப்பிடுகிறார்கள்) சென்றடைந்தோம். வரும் வழியில் சில ஆயுதமேந்திய காவல்துறை அலுவலர்களைக் காண முடிந்தது. ஓட்டுனரிடம் என்ன விசயம் என்று விசாரிக்கும் பொழுது ஒரே வார்த்தையில் கூறி விட்டார் “நல்லா இருந்த ஊரைக் கெடுத்துப்புட்டாங்க சார், 'இன்னொரு காஷ்மீர் ரேஞ்சிற்கு” இருக்கு என்றார். போய்ச் சேரும் வரையிலும் யோசித்துக் கொண்டே போகும்படி ஆகிவிட்டது.
வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு இறக்கி விடும் பொழுது மணி சரியாக காலை 9.30யை தொட்டிருந்தது. அந்த ஊர் எனது பதினைந்து வருடத்திற்கு முன்னதான என் சொந்த ஊரை ஞாபமூட்டியது. வனத்துறை அலுவலகத்திற்கு முன்பாக இறங்கிய சமயத்தில் யாரும் தென்படவில்லை ஆதலால், கிடைத்த இருக்கையில் அமர்ந்து அப்படியே புழுக்கத்தின் அடர்விற்கிடையே வழிய எத்தனிக்கும் வியர்வையை வழித்துதெறிந்து கொண்டே சுற்றிலும் பார்வையை ஓட்டும் பொழுது, எதிரில் ஒரு குளம் கிடந்தது. அங்கு பெண்களும் ஆண்களுமாக தனித்தனியான படித்துறைகளில் அமர்ந்து இதனைத் தாண்டிய ஒரு உலகம் இருப்பதற்கான எந்த ஒரு பிரக்ஞனையும் காட்டாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் முங்கி, துவைத்து, பல் துலக்கி, கால் அலம்பி, சோப்பு போட்டு அதிலேயே மீண்டும் மீண்டும் குளித்து என்று இருப்பதனைக் காணும் பொழுது, என்னாலும் அப்படியானதொரு ஒரு வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியுமா என்ற ஒரு பேராசையை மனதினுள் எழுப்பியது.
என்னுடைய வாழ்க்கை பயணிப்பு, மிக நீண்ட தொலைவுகளை கொண்டது. சில விசயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு செல்லுமளவிற்கும், பல விசயங்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதற்குமான ஒரு தோணியாகிப் போனது. அதிலொன்றுதான் இந்த குளம், குட்டைகளில் குளிப்பதனை நிறுத்திக் கொண்ட துண்டிப்பும் கூட.

இந்த சதுப்பு நிலக் காட்டில் காணப்படும் மர வகைகள் தில்லை (Exoecaria agallocha) நரிக்கந்தல் (Aegicerous corniculatum) , நீர்முள்ளி, அலையாத்தி (Avicennia marina) மற்றும் தண்டல். இவைகளில் அலையாத்தி மற்றும் தில்லை மர வகைகளே மிகவும் அதிகமாக காண முடிந்தது. இருப்பினும் இந்தக் காட்டிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சேர்த்து 61 வகையான தாவர வகைகள் அறியப்பட்டுள்ளதாம். ..
அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்
காணும் தாவரங்களின் வேர் அமைப்பைக் காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனைக் காணலாம். நீரும், சேறுமாக எப்பொழுதும் வேர்ப் பகுதி மூழ்கிய நிலையில் இருப்பதால் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச் செலுத்தி (stilt roots) சுவாசிப்பதற்கெனவும், தேவையான போஷாக்குகளை பெறுவதற்கெனவும் அமைத்துக் கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப் பரப்பு முழுவதிலும் வெளிக் கிளம்பி இருப்பதே கண்ணுக்கு விருந்தாகவும், மனதிற்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை
வழங்குவதாகவும் அமையக் கூடும்.
அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.
'தலைமை முனை' என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த ஓய்வு மேடைக்குப்
பக்கத்தில் ஒரு திறந்த வெளி இருப்பதனைக் கண்டு, சற்று நேரம் அதனைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டுச் செல்வோம் என்று கூறி அமைத்திருந்த பெஞ்சில் நான் கட்டையை சாய்த்து விட்டேன். எனக்குள்ளர ஒரு சின்ன ஆசை; அதிர்ஷடமிருந்து ஏதாவது நரி வெளியே வந்தா இந்த திறந்த வெளியில வைச்சுப் பார்க்கலாமேன்னு.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
திடீரென்று வாட்சர், "சார் நரி... சார் நரி" வந்து
எட்டிப் பார்த்துச்சு அங்கே... அங்கேன்னு ஹஸ் பண்ணினார். வாரிச் சுருட்டி கேமராவை ட்ரைபாட்டில் பொருத்தி விட்டு, எல்லார் வாயய்க்கும் என் வாயாலேயே ஒரு அமைதி பிளாஸ்திரி ஒன்னு போட்டுட்டு அந்தத் திசையை நோக்கி ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருந்தோம். நரித் தலைவரு, மெதுவா பொறுமையா இருந்து, இருந்து பார்த்திட்டு இவிங்க இப்போதைக்கு தொலைய மாட்டாய்ங்கப்பான்னுட்டு மெதுவா எட்டிப் பார்த்துச்சு. பிறகென்ன, கேமராக் கண்களைக் கொண்டு பொடெர், பொடெர்னு அவரோட ஒவ்வொரு இயக்கத்தையும் சுட்டு எடுத்துட்டேன்ல.
தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!

"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" அப்படின்னு வேறச் செல்லி உசுப்பு ஏத்தினாங்க இரண்டு பேருமா சேர்ந்து. இருந்தாலும், கேமராவிற்குள் எனக்கு செம வசுல். மற்றதை புகைப்படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
பதிவை முடிக்கிறதுக்கு முன்னாடி சில ஃபாக்ட்ஸ். இந்த சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் அமைப்பில (eco system) ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் வாழ்விடமும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமென பல வகையில் உபயோகமாக இருக்கிறது. அண்மையில் நடந்தேறிய சுனாமியின் பாதிப்பு கூட எங்கெல்லாம் இந்தக் காடுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ அங்கே சற்றே சுனாமி அலைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருப்பதாக அறியப்படுகிறது.
கண்டிப்பாக மக்களாகவே இந்த வனங்களின் முக்கியத்துவம் அறிந்து, அவைகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
நான் லகூனில் மிதக்கச் சென்ற நாளன்று என் கண்ணில் சிக்கிய பறவைகளின் பட்டியல்:
1. Common Hoopoe (Upupa epops)
2. Koel (Eudynamys scolopacea)
3. Indian Roller (Coracias benghalensis)
4. Small Blue Kingfisher (Alcedo atthis)
5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)
6. Small Bee-eater (Merops orientalis)
7. Rose-ringed Parakeet (Psittacula krameri)
8. Asian Palm Swift (Cypsiurus balasiensis)
9. Spotted Dove (Streptopelia chinensis)
10. Red-wattled Lapwing (Vanellus indicus)
11. Brahminy Kite (Haliastur indus)
12. Large Egret (Casmerodius albus
13. Cattle Egret (Bubulcus ibis)
14. Indian Pond Heron (Ardeola grayii)
15. House Crow (Corvus splendens)
16. Black Drongo (Dicrurus macrocercus)
17. Common Myna (Acridotheres tristis)
18. Red-vented Bulbul (Pycnonotus cafer)
19. White-headed Babbler (Turdoides affinis)
20. House Sparrow (Passer domesticus)
21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis)
22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis)
23. Little Cormorant (Phalacrocorax niger)
P.S: Further reading:
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment